Skip to main content

சாதி ஆணவம் சரியட்டும்; சமத்துவபுரங்கள் மலரட்டும்! மு.க.ஸ்டாலின் கடிதம் 

Published on 20/11/2018 | Edited on 20/11/2018
mkstalin



என் உயிருடன் கலந்திருக்கும் தலைவர் கலைஞர் அவர்களின் அன்பு உடன்பிறப்புகளே, உங்களில் ஒருவன் எழுதும் மடல். 
 

ஆயிரமாயிரம் ஆண்டுகளாக ஆக்கிரமித்து வந்த சாதி  அடக்கு-ஒடுக்குமுறைகளை ஒரு நூற்றாண்டு   காலத்தில் அப்படியே புரட்டிப்  போட்டு, சமூக நீதியை நிலைநாட்டிய திராவிட இயக்கத்தின் முதல் அரசியல் அமைப்பான நீதிக்கட்சி தொடங்கப்பட்ட நாள் இன்று! சர்.பிட்டி.தியாகராயர், டாக்டர் நடேசனார், டாக்டர் டி.எம்.நாயர், பனகல் அரசர் என நீதிக்கட்சியின் முன்னோடிகளை- நம் முன்னோர்களை நினைவு கூர்வதற்கான நாள். 
 

வகுப்புவாரி உரிமை எனப்படும்  இடஒதுக்கீடு, அதன் வாயிலாக கல்வி மற்றும் அரசு வேலைவாய்ப்புகளில் உரிமை, அறநிலையத்துறைச் சட்டம் வாயிலாக வழிபாட்டு உரிமைகள் மீட்பு, ஒடுக்கப்பட்ட-தாழ்த்தப்பட்ட மக்களின் நலன் காக்கும் உயர்வான சட்டங்கள், பெண்களுக்கு வாக்குரிமை, மருத்துவக் கல்வி பயில சமஸ்கிருதம் கட்டாயம் என்ற தடையை அகற்றி நம் குடும்பத்தாரும் டாக்டர் ஆவதற்கான வாய்ப்பளிப்பு என அனைத்தையும் சமூக நீதிக்  கண்ணோட்டத்தில் செயல்படுத்தியது நீதிக்கட்சி அரசாங்கம். ஆங்கிலேயர் ஆட்சியில் மிகக்குறைந்த அதிகாரங்கள் மட்டுமே கொண்ட இரட்டை ஆட்சி முறையில், சமூக சீர்திருத்தத்திற்கான இத்தனை சாதனைகளையும் நிறைவேற்றியது நீதிக்கட்சி எனும் திராவிட அரசியல் இயக்கம். அதன் தொடர்சியாகத்தான் திராவிட இயக்கத்தின் முப்பெரும் தலைவர்களான தந்தைபெரியார்-பேரறிஞர் அண்ணா-தலைவர் கலைஞர் ஆகியோர் சமூக நீதிக் கொள்கையால் சமுதாய மறுமலர்ச்சியை ஏற்படுத்தினர்.
 

பெருமையுடன் இதனை நினைவில் ஏந்த வேண்டிய இந்நாளில், தமிழ்நாட்டின் தற்போதைய நிலவரம் மனதுக்கு இதம் தருவதாக இல்லை; மாறாக இடர் நிறைந்ததாகவே இருக்கிறது.கஜா புயலினால் டெல்டா மாவட்டங்கள் உள்பட பல பகுதிகளும் கொடூரமாகப் பாதிக்கப்பட்டு, உயிரிழப்புகள் தொடரும் வேதனையான நிலையில், சாதிப் புயலும் சேர்ந்து வீசி இரு இளம் உயிர்களை அநியாயமாகப் பறித்திருக்கும் கொடுமையான நிகழ்வு இதயமுள்ள அனைவரையும் கலங்கடிக்கிறது.
 

கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூருக்கு அருகேயுள்ள சூடகொண்டபள்ளியைச் சேர்ந்த இளைஞர் நந்தீஷ்-இளம்பெண் சுவாதி ஆகிய இருவரும் சட்டப்படியான திருமண வயதை எட்டிய நிலையில், சாதி ஏற்றத்தாழ்வுகள் பற்றிக் கவலைப்படாமல் மனதால் ஒன்று கலந்து, திருமணம் செய்து கொண்ட நிலையில், அவர்கள் இருவரும் கடத்தப்பட்டு, சித்ரவதைகளுக்குள்ளாகி, கைகள்  கட்டப்பட்டு கொலை செய்யப்பட்டு, கர்நாடக மாநிலம் மாண்டியா மாவட்டம் சிவனசமுத்திரம் பகுதியில் காவிரி ஆற்று நீரில் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டுள்ள செய்தி, தமிழ்நாட்டையே பதற வைத்துள்ளது. இந்த இரட்டைக் கொலை தொடர்பாக பெண்ணின் தந்தை, பெரியப்பா உள்ளிட்ட அவரது குடும்பத்தைச் சார்ந்தவர்களும் அவர்களின் சமூகத்தைச் சார்ந்தோரும் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள். 
 

பெற்று - வளர்த்து - தாலாட்டி - சீராட்டி - பாசம் பொழிந்து -அதே பாசத்தை தன் மீதும் காட்டிய மகளை, தானே முன்னின்று கொலை செய்கிற கொடுமை நடக்கிறதென்றால், இந்த மண்ணில் மனித உறவுகளைவிட, மனிதாபிமான உணர்வைவிட, பாழாய்ப்போன சாதிக்குத்தான் முக்கியத்துவமா என்ற வேதனை மிகுந்த கேள்வி எழுகிறது. எந்தப் பெற்றோரும் தன் மகள் நல்ல வாழ்க்கை வாழவேண்டும் என்றுதான் விரும்புவர். இளம்பெண் சுவாதி தன் மீது அன்புகொண்ட துணையாக இளைஞன் நந்தீஷை விரும்பித் திருமணம் செய்த நிலையில், பெற்றோருக்கு அதில் மனமாச்சரியங்கள் இருந்தால் அது குறித்துப் பேசித்  தீர்வு கண்டிருக்கலாம். சட்டம் தந்துள்ள வழிகளின்படி செயல்பட்டிருக்கலாம். ஆனால், சட்டத்தை மீறி, சாதி ஆணவத்துடன் பெற்ற மகளையும் அவரது கணவரையும் தீர்த்துக் கட்டுவது என்பது மன்னிக்கமுடியாத மாபெரும் குற்றம்.
 

அண்மைக்காலமாக இத்தகைய கொடூரக் குற்றங்கள் தமிழ்நாட்டில் தொடர்ந்து நடப்பது பெரும் துன்பத்தையும் அதிர்ச்சியையும் அளிக்கிறது. 2016ஆம் ஆண்டில் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ராமசுப்ரமணியன் அவர்கள் வழங்கிய தீர்ப்பில், தமிழ்நாட்டில் 47 ஆணவக் கொலைகள் நடந்திருப்பதைச் சுட்டிக்காட்டி வேதனையை வெளிப்படுத்தியதுடன்,  அவற்றைத் தடுப்பதற்கான வழிகாட்டு நெறிமுறைகளையும் எடுத்துரைத்துள்ளார்.எனினும், ஆட்சியில் இருப்பவர்கள் இதன் மீது கவனம் செலுத்தாதது மட்டுமின்றி, தமிழ்நாட்டில் இத்தகைய சாதி வெறிக் கொலைகள் நடப்பதில்லை என்று முழுப் பூசணிக்காயை  இலைச்சோற்றில் மறைக்கும் வகையில் அறிக்கைகளும் பேட்டிகளும் தருவது வாடிக்கையாகிவிட்டது. அதனால் சாதி ஆணவக்காரர்கள் வெறிபிடித்து ஆடி வருவது தொடர் நிகழ்வாகி வருகிறது.
 

நல்லிணக்கம் நிலவும் அமைதிப் பூங்காவான தமிழகத்தில் சாதி வெறி அரிவாள்கள் ரத்தப் பசியுடன் அலையும் போக்கு அதிகரிப்பதை அனுமதிக்க முடியாது; அனுமதிக்கவும் கூடாது. இந்த  மண், அறிவால் பண்படுத்தப்பட்ட மண். இங்கே அரிவாள் போன்ற ஆயுதங்களுடன் சாதி வெறி தலைவிரித்தாடுவது பெரும் ஆபத்தை விளைவிக்கும்.
 

‘பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்’ என்ற அய்யன் திருவள்ளுவரில் தொடங்கி, சாதிப் பாகுபாடுகளைக் கடந்த ஆன்மிக நெறியை வலியுறுத்திய சித்தர்கள் வழியில், ‘கண்மூடிப் பழக்கங்கள் மண் மூடிப்போகும்’படி சாடிய வள்ளலார் நெறியும், சமத்துவம் போற்றிய வைகுண்டர் வழியும், ‘சாதிகள் இல்லையடி பாப்பா’ என்ற மகாகவி பாரதியின் வரியும், ’இருட்டறையில் உள்ளதடா உலகம்-சாதி இருக்கின்றது என்பானும் இருக்கின்றானே’ என்ற பாவேந்தர் பாரதிதாசனின் எழுத்தும் இந்த மண்ணின் பெருமைகள். அந்த உயர்ந்த பண்பாட்டு வழி பாடுபடுவதுதான் திராவிட இயக்கம்.
 

இந்தியாவில் வேறெங்கும் ஏற்படாத சமுதாய மறுமலர்ச்சி தமிழ்நாட்டில் திராவிட இயக்கத்தினால் ஏற்பட்டது. அந்த புரட்சிகர மாற்றத்திற்கு இத்தகைய சாதி ஆணவக் கொலைகள் மூலமாக சவால் விடுக்கப்படுகிறது. உயர்சாதிக் கொடுமையைத் தகர்த்தெறிந்த மண்ணில், நீட் தேர்வு மூலமாக மீண்டும் மனுநீதியும்-வருணாசிரமும் உள்ளே நுழையப் பார்க்கிறது. அந்த ஆபத்தை அறிந்து செயல்பட வேண்டிய நேரத்தில், சாதி வெறி தலைக்கேறி இளம் உயிர்களைத் துடிதுடிக்கக் கொல்வது நம்மை நாமே அழித்துக் கொள்வதற்குச் சமமானதாகும்.
 

சாதி ஆணவத்திற்கு எதிராக முற்போக்கு சக்திகள்-சமூகநீதி இயக்கங்கள்-ஒடுக்கப்பட்டோரின் உரிமைக்குரலை உயர்த்தும் அமைப்பினர் தொடர்ந்து போராடி வருகிறார்கள். இது ஒன்றிணைந்த-ஒருமித்த குரலாக சேர்ந்து ஒலிக்கும்போது, சமுதாயத்தில் தாக்கத்தை ஏற்படுத்தி, சாதியால் மக்களை பிளவுபடுத்துவோருக்கும் - சாதிவெறியால் பெற்ற பிள்ளைகளையே கொலை செய்வோருக்கும் தக்க பாடத்தைப் புகட்டும்.
 

திராவிட  முன்னேற்றக் கழகம் இத்தகைய சாதி வெறிப் படுகொலைகளைக் கண்டிப்பதில்லை என்றும்  கண்டுகொள்ளாமல் கடந்து செல்கிறது என்றும் சிலர் தேவையற்ற விமர்சனங்களை வைக்கிறார்கள். சாதி ஆணவத் திமிரை எந்த வடிவிலும் தி.மு.க. ஆதரிக்காது. சாதி பாகுபாடற்ற சமுதாயம் அமையவும், மனித வாழ்வின் அனைத்து நிலைகளிலும் சமூக நீதி தழைக்கவும் தன்னை அர்ப்பணித்துக் கொண்ட இயக்கம் தி.மு.கழகம். சாதிபேதமற்ற அமைதியையும் சமூக நல்லிணக்கத்தையும் விரும்பும் தமிழ்நட்டின் பெரும்பான்மை  மக்களின் பேராதரவுடன் தி.மு.கழகம் தேர்தலை வெற்றிகரமாக சந்திக்கும் என்று உறுதியாகச் சொல்வேன்.
 

அடுத்து வரும் தேர்தலில் தி.மு.கழகம் ஆட்சியமைக்கும்போது, சாதி வெறிக் கொலைகளைத் தடுக்கவும் அத்தகைய கொடூரங்களில் ஈடுபடுவோரைக் கடுமையாகத் தண்டிக்கவும் சட்டப்பூர்வமான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்ற உறுதியினையும் கழகத்தின் தலைவர் என்ற முறையிலும் கலைஞரின் மகன் என்ற முறையிலும் வழங்குகிறேன். 
 

சாதி ஏற்றத்தாழ்வற்ற மத வேறுபாடுகளற்ற தமிழ்நாட்டை  கட்டி அமைத்திட வேண்டும் என்ற உயர்ந்த இலட்சியத்துடன் நம் உயிர்நிகர் தலைவர் கலைஞரின் ஆட்சிக்காலத்தில் உருவாக்கப்பட்டதுதான் பெரியார் நினைவு சமத்துவபுரத் திட்டம். உயர்த்தப்பட்டவர்-தாழ்த்தப்பட்டவர் என்ற பாகுபாடின்றி அனைத்து சமூகத்தினரும் ஒரே இடத்தில் ஒற்றுமையுடன் வாழும் வகையில் தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் சமத்துவபுரங்கள் கட்டப்பட்டு மக்கள் வாழ்ந்து வருகின்றனர். கலைஞர் தலைமையிலான தி.மு.கழக ஆட்சியில் உள்ளாட்சித்துறை அமைச்சர்-துணை முதல்வர் என்ற பொறுப்புகளை வகித்து பல சமத்துவபுரங்களைத் திறந்து வைத்துள்ளேன்.
 

கலைஞரின் உயர்ந்த இலட்சியமான  பெரியார் நினைவு சமத்துவபுரம் என்பது தொடர்ந்து மேற்கொள்ள வேண்டிய பணி. சாதி  வெறியையும் ஆணவத்தையும் அகற்றி, மக்கள் மனங்களில் சமூக நீதியை விதைத்து, நல்லிணக்கத்தை வளர்த்து, தமிழ்நாடே சமத்துவபுரமாகப் பூத்துக்குலுங்கும் உன்னதத்தை உருவாக்கிட-தடைகள் பல கடந்து தயங்காமல் பணியாற்றிட சமூக நீதி காத்த நீதிக்கட்சி தொடங்கப்பட்ட நாளில் சூளுரைப்போம்! கலைஞரின் உடன்பிறப்புகளே.. உங்களில் ஒருவன் அழைக்கிறேன். களப்பணி  ஆற்றுவோம். ஆணவப் படுகொலைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் மனித மனங்களை வெல்வோம்;. சாதி வெறி ஒழித்து, பெரியார் நினைவு சமத்துவபுரங்களை பெருமிதத்துடன் மலரச் செய்திடுவோம்!

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'வெறுப்பும் பாகுபாடும் தான் மோடியின் உத்தரவாதம்'-முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டனம்

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
'Hatred and discrimination is Modi's guarantee'- CM Stalin condemns


18ஆவது நாடாளுமன்றத் தேர்தல், நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. 7 கட்டங்களாக இந்தத் தேர்தல் நடைபெறும் நிலையில் முதற்கட்ட வாக்குப்பதிவு, கடந்த 19ஆம் தேதி நடைபெற்று முடிந்துள்ளது. இதில் தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்கள் அடங்கும். இதையடுத்து மற்ற மாநிலங்களில் அடுத்தடுத்து வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. ஜூன் 1ஆம் தேதி கடைசி நாள் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. ஜூன் 4ஆம் தேதி தேர்தலின் முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளன.

இதனால் இரண்டாம் கட்ட தேர்தலுக்கான பிரச்சாரம் வட இந்திய மாநிலங்களில் களைகட்டி வருகிறது. அரசியல் தலைவர்கள் தங்களின் பிரச்சாரத்தைத் தீவிரமாக செய்து வருகின்றனர். அந்த வகையில் ராஜஸ்தான் மாநிலம் பன்ஸ்வாராவில் பிரதமர் மோடி நேற்று தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது, “காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையில் தாய்மார்கள் மற்றும் மகள்கள் வைத்திருக்கும் தங்கம் கணக்கீடு செய்யப்பட்டு பங்கீடு செய்யப்படும் என்று வாக்குறுதி அளிக்கப்பட்டுள்ளது. முன்பு காங்கிரஸ் ஆட்சி காலத்தின் போது நாட்டின் உடைமைகளில் இஸ்லாமியர்களுக்கு முன்னுரிமை இருக்கிறது என்று கூறினார்கள். அப்படியென்றால் யாருக்கு உங்கள் வளங்கள் போகப்போகிறது?. நாட்டில் ஊடுருவி வருபவர்களுக்கும், அதிக குழந்தைகளைப் பெற்றெடுப்பவர்களுக்கும், மக்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்த செல்வத்தை காங்கிரஸ் கட்சி பங்கிட்டுக் கொடுத்துவிடும்.

அதாவது, காங்கிரஸ் கட்சியினர் இந்தியாவுக்குள் ஊடுருவிய, அதிக குழந்தைகள் பெற்றுக் கொண்டவர்களுக்கு சொத்துகளை வழங்குவோம் என்கிறார்கள். நீங்கள் கடினமாக உழைத்து சேர்த்த சொத்தை அவர்களுக்குக் கொடுக்க ஒப்புக்கொள்ளப் போகிறீர்களா?” எனப் பேசினார். பிரதமரின் இந்தப் பேச்சு பெரும் சர்ச்சையானது.

பிரதமர் மோடியின் இத்தகைய வெறுப்பு பேச்சுக்கு தேர்தல் ஆணையம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் அபிஷேக் மனு சிங்வி, சல்மான் குர்ஷித், குர்தீப் சத்பால் ஆகியோர் தேர்தல் ஆணையத்திற்கு நேரில் சென்று புகார் மனு அளித்துள்ளனர். சமூகங்களுக்கு இடையே வெறுப்பை பரப்பும் வகையில் பேசிவரும் பிரதமர் மோடி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

'Hatred and discrimination is Modi's guarantee'- CM Stalin condemns

இந்நிலையில் பிரதமர் மோடியின் பேச்சுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். 'பிரதமர் மோடியின் நச்சு பேச்சு கேவலமானது, மிகவும் வருந்தத்தக்கது. மக்களின் கோபத்திற்கு அஞ்சி மத உணர்வுகளைத் தூண்டி வெறுப்பு பேச்சை நாடி உள்ளார் பிரதமர் மோடி. பிரதமரின் அப்பட்டமான வெறுப்பு பேச்சுக்கு தேர்தல் ஆணையம் நடுநிலைமையைக் கைவிட்டு விட்டது. வெறுப்பும் பாகுபாடும் தான் மோடியின் உண்மையான உத்தரவாதம்' என  தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார்.

Next Story

குடியைக் கெடுக்கும் குடிக்கு முடிவு கட்டப்படுவது எப்போது? - ராமதாஸ்

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
Ramdoss has questioned when liquor will be abolished in Tamil Nadu

குடிப்பழக்கம் உள்ள பெற்றோரின் பிள்ளைகளுக்கு சுயமரியாதை குறைவு என ஆய்வில் வெளியாகியுள்ளது; குடியைக் கெடுக்கும் குடிக்கு முடிவு கட்டப்படுவது எப்போது? என பாமக நிறுவனர் ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழ்நாட்டில் குடிப்பழக்கத்திற்கு அடிமையான  பெற்றோர்களின் பிள்ளைகள் சுயமரியாதைக் குறைவு, தாழ்வு மனப்பான்மை உள்ளிட்ட மனநலப் பிரச்சினைகளால் பாதிக்கப்படுகின்றனர் என்று சென்னை மருத்துவக் கல்லூரியின் சமூக மருத்துவ நிறுவனம் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. குடிக்கும் பெற்றோரின் பிள்ளைகள் இளம் வயதிலேயே மதுப்பழக்கம் மற்றும் புகையிலைப் பழக்கத்திற்கு அடிமையாகுதல், தீய செயல்களில் அடிக்கடி ஈடுபடுதல் உள்ளிட்ட பாதிப்புகளுக்கும் ஆளாவதாக அந்த ஆய்வில் தெரியவந்துள்ளது.  இந்த ஆய்வு முடிவுகள் சிறிதும் அதிர்ச்சியோ, ஆச்சரியமோ அளிக்கவில்லை. மாறாக, மதுப்பழக்கத்தின் தீமைகள் குறித்து பல பத்தாண்டுகளாக பாட்டாளி மக்கள் கட்சி கூறி வரும் குற்றச்சாட்டுகளை உறுதி செய்திருக்கிறது.

அனைத்து சமூகக் கேடுகளுக்கும் ஆணிவேர் மதுப்பழக்கம் தான்.  தினமும் குடித்து விட்டு வந்து வீட்டில் உள்ளவர்களை கொடுமைப் படுத்தும் தந்தை உள்ள வீட்டில், அவர்களின் பிள்ளைகளால் நிம்மதியாக படிக்க முடியாது; சமூகத்தில் தலை நிமிர்ந்து நடக்க முடியாது என்பது நடைமுறையில் நாம் கண்டு வரும் உண்மை ஆகும். தந்தை குடிப்பதைப் பார்க்கும் பிள்ளைகளும் மது எளிதாக கிடைக்கும் போது அந்தப் பழக்கத்திற்கு அடிமையாவது வழக்கம் தான். 

இந்த உண்மைகளைத் தான்  சென்னை மருத்துவக் கல்லூரியின் ஆய்வு உறுதி செய்திருக்கிறது. அதனால் தான் குடி குடியைக் கெடுக்கும், குடிப்பழக்கம் உடல் நலத்தை கெடுக்கும் என்ற எச்சரிக்கை வாசகங்கள் மதுப்புட்டிகள் மீது எழுதப்பட்டன. மதுவே முற்றிலுமாக ஒழிக்கப்பட  வேண்டும் என்று பாட்டாளி மக்கள் கட்சி தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. ஆனால், தமிழ்நாட்டை மாறி மாறி ஆட்சி செய்து வரும் திமுகவும், அதிமுகவும் மதுவின் தீமைகளை கருத்தில் கொள்ளாமல் சட்டப்படியாக அரசுக்கு கிடைக்கும் வருமானத்தையும், சட்டவிரோதமாக தங்களுக்கு கிடைக்கும் லாபத்தையும் மட்டுமே கருத்தில் கொண்டு  தமிழகத்தின் அனைத்து வீதிகளிலும் மதுவை வெள்ளம் போல ஓட விடுகின்றன.

அதுமட்டுமின்றி, மதுப்புட்டிகளில் மதுவின் தீமைகளை குறிக்கும் வகையிலான, 'குடி, குடியை கெடுக்கும்; குடிப்பழக்கம் உடல் நலத்தை கெடுக்கும்; மது நாட்டுக்கு, வீட்டுக்கு, உயிருக்குக் கேடு' என்ற, விழிப்புணர்வு வாசகங்களை நீக்கி விட்டு, 'மது அருந்துதல் உடல் நலத்திற்கு கேடு; பாதுகாப்பாக இருப்பீர். மது அருந்தி விட்டு வாகனம் ஓட்டாதீர்' என்ற மென்மையான வாசகங்களை அச்சிட்டது தான் திமுக, அதிமுக அரசின் சாதனைகள் ஆகும்.

எந்த வகையில் பார்த்தாலும் மது மிகப்பெரிய சமூகக் கேடு என்பதில் மாற்றமில்லை.  மது இல்லாத தமிழகத்தில் குடும்பங்கள் மகிழ்ச்சியுடன் வாழ்வார்கள்; குழந்தைகள் சுயமரியாதையுடன் நல்லவர்களாக வளர்வார்கள். எனவே, குடியைக் கெடுக்கும் குடிப்பழக்கத்திற்கு முடிவு கட்டும் வகையில் தமிழ்நாட்டில் உள்ள மதுக்கடைகளை மூடிவிட்டு முழு மதுவிலக்கை நடைமுறைப்படுத்த வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.