Skip to main content

ரிஷிவந்தியம்: சொத்து பிரச்சனை காரணமாக சித்தப்பாவைக் கொலை செய்தவர் கைது...

Published on 24/07/2020 | Edited on 24/07/2020
crime

 

ரிஷிவந்தியம் அருகே தனது சித்தப்பாவைக் கொலை செய்த நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

 

கள்ளக்குறிச்சி மாவட்டம், ரிஷிவந்தியம் அருகே உள்ளது இளையனார் குப்பம். இங்குள்ள அரசு நடுநிலைப் பள்ளியில் நேற்று மதியம் 12 மணி அளவில் முகத்தில் ரத்த காயங்களுடன் முதியவர் ஒருவர் இறந்து கிடந்தார். இதுகுறித்து இதுகுறித்து அவ்வூர் மக்கள் பகண்டை கூட்ரோடு காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.

 

காவல் நிலைய இன்ஸ்பெக்டர் செல்வம் மற்றும் போலீசார் இளையனார் குப்பம் அரசு நடுநிலைப் பள்ளிக்கு விரைந்து வந்து விசாரணை செய்ததில் இறந்தவர் வடமா மாந்தூரை சேர்ந்த 73 வயது இளைய ராமர் என்பது தெரிய வந்தது.

 

அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் தொடர்ந்து போலீசார் நடத்திய விசாரணையில் இளைய ராமரின் அண்ணன் மகனான அதே ஊரைச் சேர்ந்த மொட்டையன் மகன் சங்கர் (49) என்பவரிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.

 

அப்போது போலீசார் விசாரணையில் சங்கர் செய்த குற்றத்தை ஒப்புக்கொண்டுள்ளார். குடும்பத்திற்கு சொந்தமான விளைநிலம் பாகம் பிரிப்பதில் ஏற்பட்ட தகராறு காரணமாக இளைய ராமருக்கும், சங்கருக்கும் முன்விரோதம் இருந்து வந்துள்ளது. இந்நிலையில் நேற்று மதியம் இளையனார் குப்பம் வழியாக நடந்து சென்று கொண்டிருந்த இளைய ராமரை சங்கர் தனது பைக்கில் அவ்வூர் நடுநிலைப் பள்ளிக்கு அழைத்து சென்றுள்ளார். தடை உத்தரவு காரணமாக பள்ளிகள் செயல்படாததால் அங்கே யாருமில்லை. இதைப் பயன்படுத்திக்கொண்ட சங்கர் சொத்து பிரச்சனை குறித்து சித்தப்பா இளைய ராமரிடம் வாக்குவாதம் செய்துள்ளார். இதில் ஆத்திரமடைந்த சங்கர் அருகில் கிடந்த குச்சியால் இளையராமர் முகத்தில் கடுமையாக தாக்கியுள்ளார், இதனால் இளைய ராமர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். யாருக்கும் தெரியாமல் சங்கர் அங்கிருந்து சென்று விட்டார்.

 

நடந்த சம்பவத்தை  சங்கரே ஒப்புக்கொண்டதையடுத்து போலீசார் அவர் மீது வழக்குப்பதிவு செய்து அவரைக் கைது செய்துள்ளனர்.  சொத்து பிரச்சனையில் தனது சொந்த சித்தப்பாவையே கொலை செய்த அண்ணன் மகனின் கொடூர செயலை கண்டு அப்பகுதி மக்கள் அதிர்ச்சியில் உள்ளனர்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

மதுபோதையில் பேருந்தின் கண்ணாடி உடைப்பு; போலீசார் விசாரணை

Published on 20/04/2024 | Edited on 20/04/2024
Bus window breaking in drunkenness; Police investigation

உளுந்தூர்பேட்டை அருகே மது போதையில் சாலையில் சென்று கொண்டிருந்த அரசு பேருந்தின் கண்ணாடியை இரண்டு இளைஞர்கள் உடைத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே உள்ள ஒலையனூர், குணமங்கலம் ஆகிய கிராமங்களைச் சேர்ந்த இரண்டு இளைஞர்கள் உளுந்தூர்பேட்டை சாலையில் இரு சக்கர வாகனத்தில் சென்றுள்ளனர். அப்போது வாகனத்தில் யார் முந்தி செல்வது என்பதில் போட்டி ஏற்பட்டுள்ளது. மது போதையில் இருந்த இரண்டு இளைஞர்களும் ஒருவரை ஒருவர் முந்திக்கொண்டு சென்றனர். அப்போது அவர்கள் இருவரும் ஒலையனூர் பேருந்து நிலையம் அருகே சென்ற போது, போதை ஆசாமி இருவருக்கும் வாக்கு வாதம் முற்றியுள்ளது. இதனால் இளைஞர்கள் இருவரும் மோதிக்கொண்டுள்ளனர். அப்போது அந்த வழியாக வந்த எஸ்சிடிசி பேருந்தை தடுத்து நிறுத்திவிட்டு மோதலில் ஈடுபட்டனர்.

இதனால் ஆத்திரமடைந்த பேருந்து ஓட்டுனர் அந்தப் பேருந்தை அங்கிருந்து எடுத்துச் செல்ல முயன்றுள்ளார். உடனே அந்தப் போதை ஆசாமிகள் இருவரும் அங்கிருந்த கற்களை எடுத்து பேருந்தின் முன் கண்ணாடியை உடைத்தனர். மேலும் அவர்களுக்குள் சரமாரியாக தாக்கி கொண்டனர். இதில் மூன்று இளைஞர்களுக்கு காயம் ஏற்பட்டுள்ளது. கோயம்புத்தூரில் இருந்து 40க்கும் மேற்பட்ட பயணிகளை ஏற்றி வந்த அந்தப் பேருந்து கண்ணாடி உடைக்கப்பட்டதால் பேருந்து அங்கேயே நிறுத்தப்பட்டது.

இது தொடர்பாக குணமங்கலம், ஒலையனூர் பகுதிகளில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மது போதையில் சாலையில் சென்ற பேருந்தை வழிமறித்து கண்ணாடியை உடைத்த சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Next Story

'முந்தியது எந்த மாவட்டம்?'- தலைமை தேர்தல் அதிகாரி வெளியிட்ட தகவல்

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
'Which district was the first?'- the information released by the Chief Electoral Officer

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது.

தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற்று தற்போது முடிந்துள்ளது. மாலை 6:00 மணிக்குள் வாக்குச்சாவடிகளுக்கு வாக்களிக்க வந்தவர்களுக்கு டோக்கன் வழங்கி வாக்களிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும் அரசியல் கட்சியினர் முன்னிலையில் வாக்கு இயந்திரங்கள் சீல் வைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

தமிழகத்தில் இறுதி நிலவரப்படி 72.09 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது. சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த மாநில தேர்தல் ஆணையர் சத்யபிரதா சாஹு பேசுகையில், ''தமிழகத்தில் ஏழு மணி நிலவரப்படி 72.09 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது. வாக்குப் பெட்டிகளுக்கு சீல் வைத்து வாக்கு எண்ணும் மையத்திற்கு எடுத்துச் செல்லும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. தமிழகத்தில் அதிகபட்சமாக கள்ளக்குறிச்சியில் 75.67 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது. மத்திய சென்னையில் 67.37 சதவீதம், தென்சென்னையில் 67.82 சதவீதம், வட சென்னையில் 69.26 சதவீதம், தர்மபுரி மக்களவைத் தொகுதியில் 75.44 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளது. சில வாக்குச்சாவடிகளில் டோக்கன்கள் கொடுக்கப்பட்டு வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. மாலை 3 மணிக்கு மேல் ஏராளமான மக்கள் அதிக அளவில் தங்கள் வாக்குகளை செலுத்தியுள்ளனர். தமிழகத்தில் மக்களவைத் தேர்தல் சட்ட ஒழுங்கு பிரச்சினை இன்றி அமைதியான முறையில் நடந்துள்ளது'' என்றார்.

திருவள்ளூர்-71.87 சதவீதம், வடசென்னை-69.26 சதவீதம், தென் சென்னை-67.82 சதவீதம், ஸ்ரீபெரும்புதூர்-69.79 சதவீதம், காஞ்சிபுரம்-72.99 சதவீதம், அரக்கோணம்-73.92 சதவீதம், வேலூர்-73.04 சதவீதம், கிருஷ்ணகிரி-72.96 சதவீதம், தர்மபுரி-75.44 சதவீதம், திருவண்ணாமலை-73. 35 சதவீதம், ஆரணி-73.77 சதவீதம், விழுப்புரம்-73.49 சதவீதம், சேலம்-73.55 சதவீதம், நாமக்கல்74.29 சதவீதம், ஈரோடு-71.42 சதவீதம், திருப்பூர் -72.02 சதவீதம், நீலகிரி-71.07 சதவீதம், கோவை-71.17 சதவீதம் வாக்குகள் பதிவாகியள்ளது.