கடந்த ஒரு வருடமாகக் கேரளாவில் அடங்கி ஒழிந்திருந்த ஸ்வைன்ஃபுளூ எனப்படும் பறவைக் காய்ச்சல் தற்போது மீண்டும் தலை தூக்கியிருக்கிறது. ஒருபுறம் அச்சுறுத்தும் கரோனா மறுபக்கம் பறவைக்காய்ச்சல் மத்தள இடி நிலையிலிருக்கிறது கேரளா.
கடந்த சில நாட்களுக்கு முன்பு கேரளாவின் கோழிக்கோடு மாவட்டம் கோழிப்பண்ணை கிராமமான கொடியாத்தூர், வென்கேரி இரண்டு கிராமங்களிலுள்ள பெரிய கோழிப்பண்ணைகளின் கோழிகள் கொத்துக் கொத்தாய் செத்து விழுந்திருக்கின்றன. தகவல் போய் அவைகளைச் சோதனை செய்த கேரள கால்நடை மருத்துவர்கள் அவைகள் பறவைக் காய்ச்சல் வைரஸ்களால் தாக்கப்பட்டு மடிந்ததைக் கண்டறிந்தனர். இது தொடர்பாக அலர்ட் ஆன கேரள அரசின் சுகாதாரத்துறை அமைச்சரான சைலஜா. அந்த இரண்டு கிராமங்களின் கோழிப்பண்ணை கோழிகளை அழிக்க உத்தரவிட, அவைகள் அழிக்கப்பட்டு மேலும் வைரஸ்கள் பரவாமல் தடுப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டன.
இதன் தாக்கமாக அண்டை மாநிலமான தமிழகத்தில் பறவைக் காய்ச்சல் பரவாமல் தடுக்கும் வகையில் கேரள- தமிழக எல்லையான செங்கோட்டையின் புளியரை பகுதியின் சுங்கச்சாவடியில் தீவிரத் தடுப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. அங்கே சுகாதாரத்துறை அதிகாரிகள் தடுப்பு முகாமே ஏற்படுத்தியுள்ளனர். கேரளாவிலிருந்து தமிழகம் வரும் அனைத்து வாகனங்களிலும் கிருமிநாசினி மருந்து தெளிக்கப்பட்ட பின்னரே உள்ளே அனுமதிக்கப்படுகிறது. மேலும் தமிழகத்திற்கு பறவையினங்கள் கோழி, வாத்து, கோழி முட்டை, கோழிக்களுக்கான தீவனங்களை ஏற்றி வரும் வாகனங்கள் திருப்பி அனுப்பப்படுகின்றன. மேலும் காய்கறி உணவுப் பொருள்கள் மற்றும் இலகு ரக வாகனம் முதல் கனரக வாகனம் வரை சோதனையிடப்பட்டு கிருமி நாசினியான குளோரின்-டை-ஆக்ஸைடு தெளிக்கப்பட்டு நோய் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன.
கேரளாவிலிருந்து வாத்து, முட்டை, கோழிகளை ஏற்றி வரும் வாகனங்கள் திருப்பி அனுப்பப்படுகின்றன. அதே போன்று கோழிகளை கேரளாவுக்கு ஏற்றிச் செல்லும் தமிழக வாகனங்கள் திரும்பி வரும் போது கோழிகளுடன் அசுத்தம் தென்பட்டால் அந்த வாகனங்களையும் திருப்பி அனுப்பிவிடுகிறோம் என்கிறார் கால்நடை பராமரிப்புத்துறையின் உதவி இயக்குனரான அசன் இப்ராஹிம்.
கேரளாவில் ஏற்பட்டுள்ள பறவைக்காய்ச்சல் தாக்கம் காரணமாக நெல்லை தென்காசி மாவட்டங்களில் கிலோ 160- க்கு விற்கப்பட்ட கறிக்கோழியின் விலை 100 ஆகவும் ரூ 5 லிருந்து 3.20 பைசாவாக முட்டையின் விலையும் கடுமையாகச் சரிந்துள்ளன. தற்போதைய சமூகச் சூழல் காரணமாகவும் மக்களின் பல்வேறு நிலை காரணமாகவும் கறிக்கோழியின் விலை மேலும் குறைய வாய்ப்பிருப்பதாக கோழி வியாபாரிகளின் தரப்பினரே கூறுகின்றனர்.