Skip to main content

கல்விச் சுற்றுலா; கோர விபத்தில் மாணவி பலி; 40க்கும் மேற்பட்டோர் காயம்!

Published on 29/01/2024 | Edited on 29/01/2024
iv bus overturns, college student passed away more than 40 students injured

ஈரோடு நஞ்சனாபுரம் பகுதியில் உள்ள தனியார் கலை அறிவியல் கல்லூரியில் 500க்கும் மேற்பட்ட மாணவ - மாணவிகள் படித்து வருகின்றனர். இந்தக் கல்லூரியில் பி.பி.ஏ. மூன்றாம் ஆண்டு படிக்கும் மாணவ - மாணவிகளைக் கல்விச் சுற்றுலாவுக்காக கர்நாடக மாநிலம் குடகு பகுதிக்கு அழைத்துச் செல்ல கல்லூரி நிர்வாகம் முடிவு செய்திருந்தது. அதன்படி நேற்று நள்ளிரவு 3 ஆசிரியர்கள், 50 மாணவ - மாணவிகள் சுற்றுலா செல்ல புறப்பட்டனர். நேற்று இரவு 11 மணி அளவில் கல்லூரி வளாகத்தில் இருந்து சுற்றுலா பஸ் மாணவ - மாணவிகளை ஏற்றிக்கொண்டு கிளம்பிச் சென்றது. 

பேருந்தை சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த கோபி என்பவர் ஓட்டி வந்தார். ஈரோடு - பெருந்துறை ரோட்டில் சுமார் 500 மீட்டர் தூரத்தில் உள்ள ஒரு வளைவில் பேருந்து வேகமாகத் திரும்பிய போது திடீரென பஸ் கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்தது. இந்த பஸ்சில் இருந்த மாணவ மாணவிகள் அலறினர். அக்கம் பக்கத்தினர் மற்றும் ரோட்டில் சென்ற வாகன ஓட்டிகள் உடனடியாக பேருந்து கவிழ்ந்த இடத்துக்கு ஓடிச்சென்று இடிபாடுகளுக்குள் சிக்கி இருந்த மாணவ - மாணவிகளை மீட்டனர். இந்த விபத்தில் 40க்கும் மேற்பட்ட மாணவ - மாணவிகள் காயம் அடைந்தனர். விபத்து குறித்து தகவல் கிடைத்ததும் ஈரோடு தாலுகா போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். பின்னர் சம்பவ இடத்துக்கு ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு சிகிச்சைக்காக ஒரு சில மாணவ - மாணவிகள் பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரிக்கும், ஒரு சில மாணவ மாணவிகள் ஈரோடு அரசு மருத்துவமனைக்கும் அனுப்பி வைக்கப்பட்டனர். விபத்துக்குள்ளான சுற்றுலா பேருந்து கிரேன் மூலம் மீட்கப்பட்டது. 

ஈரோடு அரசு மருத்துவமனைக்கு 10க்கும் மேற்பட்ட மாணவ - மாணவிகள் சிகிச்சைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். இதில் படுகாயம் அடைந்த திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த சுப்பிரமணி என்பவரின் மகள் சுவேதா(21) பரிதாபமாக உயிர் இழந்தார். அவர் ஈடுபாடுகளில் சிக்கி உயிரிழந்தது தெரிய வந்தது. இறந்த மாணவியின் உடலைப் பார்த்து அவருடன் படிக்கும் மாணவ - மாணவிகள் கதறி அழுதனர்.

விபத்து குறித்து ஈரோடு தாலுகா போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். நள்ளிரவில் நடந்த இந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சிகிச்சையில் உள்ள மற்ற மாணவ, மாணவிகள் நலமுடன் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். விபத்து நடந்ததும் டிரைவர் தப்பி ஓடிவிட்ட நிலையில், அவரைப் பிடிக்க போலீசார் முயற்சி மேற்கொண்டு வருகின்றனர்.

சார்ந்த செய்திகள்

Next Story

முன்னாள் பிரதமரின் பேரன் மீது பாலியல் புகார்!

Published on 28/04/2024 | Edited on 28/04/2024
complaint against the grandson of the former prime minister

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக கடந்த 19ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது. இதனையடுத்து 13 மாநிலங்களில் உள்ள 88 மக்களவைத் தொகுதிகளில் நேற்று முன்தினம் (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்றது. மொத்தம் 28 தொகுதிகள் கொண்ட கர்நாடகா மாநிலத்தில் ஏப்ரல் 26 ஆம் தேதி 14 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடந்து முடிந்துள்ளது. மே 7 ஆம் தேதி மற்ற 14 தொகுதிகளில் தேர்தல் நடைபெறவிருக்கிறது.

இந்தத் தேர்தலில், பா.ஜ.க தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில், தேவகவுடாவின் ஜனதா தளம் (எஸ்) கட்சி போட்டியிடுகிறது. கர்நாடகாவில் ஆளும் கட்சியான காங்கிரஸ் இந்தத் தேர்தலில் தனித்துப் போட்டியிடுகிறது. இந்நிலையில் முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் பேரனும், ஹாசன் மக்களவைத் தொகுதியின் எம்.பி.யுமான பிரஜ்வல் ரேவண்ணா பல பெண்களை பாலியல் வன்கொடுமை செய்ததாக புகார் எழுந்துள்ளது. தன்னிடம் உதவி கேட்டு வந்த ஏராளமான பெண்களை பிரஜ்வல் ரேவண்ணா பாலியல் தேவைகளுக்காக பயன்படுத்திக் கொண்டதாக பரபரப்பு குற்றச்சாட்டு எழுந்துள்ளது. பிரஜ்வல் ரேவண்ணா பல பெண்களுடன் இருப்பது போன்ற ஆபாச காட்சிகள் வெளியாகி மக்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் பிரஜ்வல் ரேவண்ணா மீது உரிய நடவடிக்கை எடுக்கவும் மாநில மகளிர் ஆணையம் கர்நாடக அரசுக்கு கடிதம் எழுதியுள்ளது.

இதனையடுத்து இந்தப் புகார் குறித்து சிறப்பு புலானாய்வுக் குழு அமைத்து விசாரணை தொடங்க முடிவெடுக்கப்பட்டுள்ளது. அதே சமயம் புகார் குறித்த நெருக்கடி அதிகரிப்பால் பிரஜ்வல் ரேவண்ணா கர்நாடகாவில் இருந்து ஜெர்மனிக்கு தப்பியோடியதாவும் தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்து கர்நாடக முதல்வர் சித்தராமைய தனது எக்ஸ் சமூக வலைத்தளப்பக்கத்தில், “பிரஜ்வல் ரேவண்ணாவின் ஆபாச வீடியோ வழக்கு தொடர்பாக சிறப்பு புலனாய்வு குழுவை அமைக்க அரசு முடிவு செய்துள்ளது. ஹாசன் மாவட்டத்தில் பெண்கள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகியிருப்பது போன்ற ஆபாச வீடியோ காட்சிகள் பரவி வருகின்றன. இந்நிலையில், எஸ்ஐடி விசாரணை நடத்துமாறு அரசுக்கு மகளிர் ஆணையத் தலைவர் கடிதம் எழுதியிருந்தார். எனவே இந்தக் கோரிக்கையை ஏற்று இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது” எனக் குறிப்பிட்டுள்ளார். இந்த மக்களவைத் தேர்தலில் ஹாசன் தொகுதியில் பாஜக கூட்டணி வேட்பாளராக பிரஸ்வால் ரேவண்ணா மீண்டும் போட்டியிடுவது குறிப்பிடத்தக்கது. 

Next Story

மதுரையில் இளைஞர்கள் அட்டூழியம்; வெளியான சிசிடிவி காட்சிகள்!

Published on 28/04/2024 | Edited on 28/04/2024
madurai incident Released CCTV footage

மதுரை மாவட்டம் ஒத்தக்கடை பகுதியில் கடந்த 22 ஆம் தேதி (22.04.2024) சித்திரை திருவிழாவின் போது மது போதையில் இருந்த 5க்கும் மேற்பட்ட இளைஞர்கள் ஒத்தக்கடை பகுதிகளில் இரு சக்கர வாகனத்தில் சென்றவர்களை தாக்குவது, பெண்கள் மீது தாக்குதல் நடத்துவது, அப்பகுதியில் இருந்த பொருட்களை அடித்து நொறுக்குவது, வீட்டிற்கு வெளியே உள்ள இருசக்கர வாகனங்களைத் தள்ளிவிட்டு உடைப்பது, கடைகளை சேதப்படுத்துவது எனத் தொடர்ந்து அராஜகங்களில் ஈடுபட்டுள்ளனர். இது தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகி மக்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.

இத்தகைய சூழலில் தான் ஒத்தக்கடை பகுதியைச் சேர்ந்த கான் முகமது கான், கடந்த 22 ஆம் தேதி இரவு தனது பணியை முடித்துவிட்டு இருசக்கர வாகனத்தில் சுந்தரம் நகர் பகுதியில் வந்துள்ளார். அப்போது இந்த இளைஞர்கள் அவரை கடுமையாக தாக்கியுள்ளனர். இந்தத் தாக்குதலில் கான் முகமது கான் பலத்த காயம் அடைந்தார். அதன் பின்னர் மருத்துவனையில் அனுமதிக்கப்பட்ட்டு சிகிச்சை பெற்றார். இது குறித்து ஒத்தக்கடை காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

இதற்கிடையே இந்த இளைஞர்கள் ஐயப்பன் நகர் பகுகுதியில் சென்று அங்குள்ள இரண்டு கடைகளை அடித்து நொறுக்கினர். மேலும் கடையில் இருந்த பெண்கள் மீதும் தாக்குதல் நடத்தியுள்ளனர். இந்நிலையில் இது தொடர்பான சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகி மக்கள் மத்தியில் பதைபதைப்பை ஏற்படுத்தியுள்ளது. அதே சமயம் இந்தச் சம்பவத்தில் ஈடுபட்ட இளைஞர்கள் சிலரை போலீசார் கைது செய்துள்ளனர். மேலும் இருவரை கைது செய்ய போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.