Skip to main content

கணவனுடன் சேர்த்து வைக்கக் கோரி இளம்பெண் தர்ணா! கழுத்தை அறுத்துக் கொண்டதால் பரபரப்பு!

Published on 24/10/2020 | Edited on 24/10/2020

 

husband and wife issue cuddalore district

 

கடலூர் மாவட்டம் திட்டக்குடி அருகேயுள்ள புலிவலம் கிராமத்தைச் சேர்ந்த ராஜேந்திரன் என்பவரின் மகன் முத்தையா(28) என்பவருக்கும், இளமங்கலம் கிராமத்தைச் சேர்ந்த செல்வம் என்பவரின் மகள் ஆர்த்தி(22) என்பவருக்கும் கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. திருமணத்தின் போது ஆர்த்தியின் பெற்றோர் பல லட்சம் மதிப்பிலான நகைகள் மற்றும் பணத்தை வரதட்சணையாகக் கொடுத்துள்ளனர். 

 
இதனிடையே ஆர்த்தியின் நகைகளையும், ரொக்கப்பணம் பத்து லட்ச ரூபாயையும் முத்தையா, ஆர்த்தியிடம் கேட்டுள்ளார். அதற்கு ஆர்த்தி தான் சட்டக்கல்வி படிப்பதற்குப் பணம் தேவைப்படுவதால், அந்தப் பணத்தைத் தரமுடியாது என்று கூறியுள்ளார். இதனால் இவர்களுக்குள் அடிக்கடி தகராறு நடைபெற்றுள்ளது. 
 

இந்த நிலையில், 7 மாத கர்ப்பிணியான ஆர்த்தி, தனது தாய் வீட்டிற்கு பிரசவத்திற்காகச் சென்று, அங்கு அவருக்கு ஆண் குழந்தை பிறந்து 5 மாதம் ஆகின்றது. இதுவரை கணவரும், கணவரின் வீட்டாரும் ஆர்த்தி மற்றும் குழந்தையைப் பார்க்கவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் விரக்தியடைந்த ஆர்த்தி, நேற்று புலிவலம் கிராமத்தில் உள்ள தனது கணவர் முத்தையா வீட்டிற்குச் சென்றுள்ளார். அங்கு தனது மாமியாரிடம் 'தனது கணவரை தன்னுடன் சேர்த்து வைக்கும்படி கேட்டதற்கு, அவரது மாமியார், முத்தையா வீட்டில் இல்லை. அவர் சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் வேலை பார்த்து வருகிறார்' எனக் கூறியுள்ளார். அப்போது அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
 

இதனால் மனமுடைந்த ஆர்த்தி தனது கணவர் வீட்டின் முன் தான் வைத்திருந்த சாவியால் கழுத்தையும்,  இடது கையையும் அறுத்துக்கொண்டு வீட்டின் முன்பாக அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். 

 

cnc

 

இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்குச் சென்ற திட்டக்குடி காவல்துறையினர் அவரிடம்  சமரசப் பேச்சுவார்த்தை நடத்தி, அங்கிருந்து அவரை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் திட்டக்குடி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு, பின், மேல் சிகிச்சைக்காக பெரம்பலூர் அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

 
இதுகுறித்து திட்டக்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கழுத்தை அறுத்துக் கொண்டு இளம்பெண் ஒருவர் கணவன் வீட்டின் முன்பு தர்ணா செய்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

வாக்கு இயந்திரத்தில் கோளாறு; இன்னும் தொடங்கப்படாத வாக்குப்பதிவு!

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
Voting machines malfunction in 10 polling stations in Cuddalore
கோப்புப்படம்

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடுமுழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

அந்த வகையில் தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 5 மணி வரை நடைபெறவுள்ளது.

இந்த நிலையில் காலை 7 மணி முதல் வாக்காள பெருமக்கள் ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர். அதேபோன்று அரசியல் கட்சி தலைவர்கள், வேட்பாளர்கள் என பலரும் தங்களின் வாக்குகளை வாக்குச்சாவடிகளில் செலுத்து வருகின்றனர்.

இந்த நிலையில் கடலூரில்  உள்ள 10  வாக்குச்சாவடியில் வாக்குப்பதிவு எந்திரங்களில் கோளாறு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.  அதனால் கடந்த ஒரு மணி நேரத்திக்கும் மேலாக அப்பகுதியில் வாக்குப் பதிவு  தொடங்கப்படாமல் இருக்கிறது. தேர்தல் அதிகாரிகள் மாற்று வாக்குப் பதிவு எந்திரம் மூலம் வாக்குப் பதிவு தொடங்க நடவடிக்கை எடுத்து வருகின்றனர். தாமதமாகும் வாக்குச்சாவடியில் மக்கள் தங்களது ஜனநாயக கடமையாற்ற நீண்ட வரிசையில் காத்திருக்கின்றனர். காலை ஒரு மணி நேரத்திற்கும் மேலாக வாக்குப்பதிவு தொடங்கப்படாமல் இருப்பதால் மாலை ஒரு மணி நேரம் கூடுதலாக ஒதுக்கப்படுமா என்பது குறித்து தேர்தல் தலைமை அதிகாரி தெரிவிப்பார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Story

காவு வாங்கிய குளம்; கிராமத்தையே சோகத்தில் ஆழ்த்திய சிறுவர்களின் உயிரிழப்பு

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
 The pool of water; The lost their live of the boys left the village in mourning

கடலூரில் குளத்தில் இறங்கி குளிக்க முயன்ற இரண்டு சிறுவர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு அருகே உள்ளது நந்தீஸ்வர மங்கலம். இந்தக் கிராமத்தில் வசித்து வந்த ராமமூர்த்தி என்பவருக்கு இரண்டு மகன்கள் இருந்தனர். திலீப் ராஜ்(16), தினேஷ்(14) ஆகிய இரு மகன்களும் வெளியூரில் விடுதியில் தங்கி படித்து வந்தனர். இந்த நிலையில் கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு விடுமுறைக்காக சொந்த ஊருக்கு வந்திருந்தனர்.

சிறுவர்கள் திலீப் ராஜ் மற்றும் தினேஷ் ஆகியோர் வீட்டுக்கு அருகே உள்ள குளத்தில் குளிக்க சென்றுள்ளனர். அப்பொழுது ஆழமான பகுதிக்கு இருவரும் குளிக்கச் சென்றதாக கூறப்படுகிறது. இதில் நீரில் மூழ்கி இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். குளத்துக்கு குளிக்கச் சென்ற சிறுவர்கள் காணாமல் போனதால் பதறியடித்த பெற்றோர் காவல்துறைக்கு தகவல் அளித்தனர். உடனடியாக மீட்பு படையினர் வரவழைக்கப்பட்டு குளத்தில் இறங்கி தேட ஆரம்பித்தனர். பின்னர், வெகு நேரத்திற்கு பின் இருவரின் உடலையும் கைப்பற்றிய மீட்புப்படையினர் உடல்களை கரைக்கு கொண்டு வந்தனர். சிறுவர்களின் உடல்களை பார்த்து பெற்றோர் மற்றும் உறவினர்கள் கதறி அழுதனர். உயிரிழந்த சிறுவர்கள் இருவரின் உடலும் காட்டுமன்னார் கோவில் அரசு மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

விடுதியில் தங்கிப் படித்து வந்த சிறுவர்கள் விடுமுறைக்காக சொந்த ஊருக்கு வந்த நிலையில் குளத்தில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.