Skip to main content

கணவனுடன் சேர்த்து வைக்கக் கோரி இளம்பெண் தர்ணா! கழுத்தை அறுத்துக் கொண்டதால் பரபரப்பு!

Published on 24/10/2020 | Edited on 24/10/2020

 

husband and wife issue cuddalore district

 

கடலூர் மாவட்டம் திட்டக்குடி அருகேயுள்ள புலிவலம் கிராமத்தைச் சேர்ந்த ராஜேந்திரன் என்பவரின் மகன் முத்தையா(28) என்பவருக்கும், இளமங்கலம் கிராமத்தைச் சேர்ந்த செல்வம் என்பவரின் மகள் ஆர்த்தி(22) என்பவருக்கும் கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. திருமணத்தின் போது ஆர்த்தியின் பெற்றோர் பல லட்சம் மதிப்பிலான நகைகள் மற்றும் பணத்தை வரதட்சணையாகக் கொடுத்துள்ளனர். 

 
இதனிடையே ஆர்த்தியின் நகைகளையும், ரொக்கப்பணம் பத்து லட்ச ரூபாயையும் முத்தையா, ஆர்த்தியிடம் கேட்டுள்ளார். அதற்கு ஆர்த்தி தான் சட்டக்கல்வி படிப்பதற்குப் பணம் தேவைப்படுவதால், அந்தப் பணத்தைத் தரமுடியாது என்று கூறியுள்ளார். இதனால் இவர்களுக்குள் அடிக்கடி தகராறு நடைபெற்றுள்ளது. 
 

இந்த நிலையில், 7 மாத கர்ப்பிணியான ஆர்த்தி, தனது தாய் வீட்டிற்கு பிரசவத்திற்காகச் சென்று, அங்கு அவருக்கு ஆண் குழந்தை பிறந்து 5 மாதம் ஆகின்றது. இதுவரை கணவரும், கணவரின் வீட்டாரும் ஆர்த்தி மற்றும் குழந்தையைப் பார்க்கவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் விரக்தியடைந்த ஆர்த்தி, நேற்று புலிவலம் கிராமத்தில் உள்ள தனது கணவர் முத்தையா வீட்டிற்குச் சென்றுள்ளார். அங்கு தனது மாமியாரிடம் 'தனது கணவரை தன்னுடன் சேர்த்து வைக்கும்படி கேட்டதற்கு, அவரது மாமியார், முத்தையா வீட்டில் இல்லை. அவர் சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் வேலை பார்த்து வருகிறார்' எனக் கூறியுள்ளார். அப்போது அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
 

இதனால் மனமுடைந்த ஆர்த்தி தனது கணவர் வீட்டின் முன் தான் வைத்திருந்த சாவியால் கழுத்தையும்,  இடது கையையும் அறுத்துக்கொண்டு வீட்டின் முன்பாக அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். 

 

cnc

 

இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்குச் சென்ற திட்டக்குடி காவல்துறையினர் அவரிடம்  சமரசப் பேச்சுவார்த்தை நடத்தி, அங்கிருந்து அவரை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் திட்டக்குடி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு, பின், மேல் சிகிச்சைக்காக பெரம்பலூர் அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

 
இதுகுறித்து திட்டக்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கழுத்தை அறுத்துக் கொண்டு இளம்பெண் ஒருவர் கணவன் வீட்டின் முன்பு தர்ணா செய்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

 

 

சார்ந்த செய்திகள்