Skip to main content

காதலிக்க மறுத்த பள்ளி மாணவி மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்த இளைஞர் கைது!

Published on 17/02/2018 | Edited on 17/02/2018
skol

மதுரை அச்சம்பட்டியில் காதலிக்க மறுத்த பள்ளி மாணவி மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்த இளைஞர் பாலமுருகன் கைது செய்யப்பட்டுள்ளார்.

மதுரை திருமங்கலத்தை அடுத்த நடுவக்கோட்டையைச் சேர்ந்த மணிப்பாண்டி, பேச்சியம்மாள் என்ற தம்பதியின் மகள் சித்திராதேவி. 14 வயது நிரம்பிய இவர் திரளியை அடுத்த அச்சம்பட்டியில் உள்ள அரசுப் பள்ளியில் 9 ஆம் வகுப்பு படித்து வருகிறார். இந்த மாணவியை அதே பகுதியைச் சேர்ந்த சந்தானம் என்பவரின் மகன் பாலமுருகன் (23), ஒருதலையாக காதலித்துள்ளார்.

இவர் மாணவியிடம் காதலிக்கும்படியும், திருமணம் செய்துகொள்வோம் என்றும் பள்ளிக்கு சென்று வரும்போது அடிக்கடி வற்புறுத்தியுள்ளார். இதனை பெற்றோரிடம் சித்திராதேவி தெரிவித்ததை அடுத்து, கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் மாணவியின் தந்தை மணிபாண்டி திருமங்கலம் அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் கொடுத்த புகாரின் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு, பாலமுருகன் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளார். இதனால் பாலமுருகன் ஆத்திரத்தில் இருந்துள்ளார்.

victim

 

  இந்நிலையில் காதலர் தினத்தன்று தனது காதலை ஏற்றுக்கொள்ள முடியுமா  என்று இறுதியாக கேட்டுள்ளார். அப்போதும் மாணவி மறுத்துவிட்டதாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த அவர், நேற்று மாலை மாணவி பள்ளி முடிந்து பேருந்துக்காக காத்திருந்த போது, இருசக்கர வாகனத்தில் வந்து மாணவியின் உடலில் பெட்ரோலை ஊற்றி தீ வைத்துவிட்டு ஓடிவிட்டார்.

இதைக்கண்டு அக்கபக்கத்தில் இருந்தவர்கள் தீயை அனைத்துள்ளனர். பின்னர் மாணவியை திருமங்கலம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு, மேல் சிகிச்சைக்காக மதுரை ராஜாஜி மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். இந்தச் சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்துள்ள போலீஸார், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மணிவண்ணன் உத்தரவுப்படி தனிப்படை அமைத்து பாலமுருகனை தீவிரமாக தேடி வந்தனர். இந்நிலையில் அச்சம்பட்டி அருகே காட்டுப்பகுதியில் மறைந்திருந்த பாலமுருகனை தனிப்படை காவல்துறையினர் கைது செய்தனர்.

சார்ந்த செய்திகள்