திருச்சி விமானநிலைய சுங்க அதிகாரிகள் ஒரே இரவில் 41 பேர் அதிரடி மாற்றம். அடுத்த ஒரு நாட்களுக்குள் பணி சேர சொல்லி வாய் மொழி உத்தரவு என திருச்சி விமாநிலையம் ஏகப்பட்ட பரபரப்பாக இருக்கிறது.. காரணம் என்ன என்று விசாரித்ததில்..
திருச்சி சர்வதேச விமானநிலையத்துக்கு தினமும் இலங்கை, சிங்கப்பூர், மலேசியா, சவுதிஅரேபியா, துபாய் உள்பட பல்வேறு நாடுகளில் இருந்து விமானங்கள் வந்து செல்கின்றனர். உள்நாடு மற்றும் வெளிநாடு விமான சேவைகளில் திருச்சியை சுற்றி உள்ள மாவட்டங்களை சேர்ந்த ஏராளமான பயணிகள் திருச்சி விமானநிலையத்தை பயன்படுத்தி வருகிறார்கள்.
கடந்த சில வருடங்களாக தொடர்ச்சியாக திருச்சி விமான நிலையத்தில் தங்கம் கடத்தப்பட்டு வருகிறது என்கிற குற்றச்சாட்டு எழுந்து கொண்டே இருந்தது. இந்த குற்றசாட்டிற்கு பிறகு ஒரு சில பயணிகள் மீதே வழக்கு பதிவு செய்யப்பட்டும் வந்தது.
ஆனால் பயணிகள் சிலர் சுங்கத்துறை அதிகாரிகள் உதவியுடன் தங்கம் கடத்தி வருவதாக ரகசிய தகவல் அடிப்படையில் கடந்த மாதம் 5-ந் தேதி திருச்சி விமானநிலையத்தில் 15-க்கும் மேற்பட்ட சி.பி.ஐ. அதிகாரிகள் அதிரடியாக சோதனை நடத்தினார்கள்.
அப்போது சிங்கப்பூரில் இருந்து வந்த விமானத்தில் வந்த பயணிகளை சி.பி.ஐ. அதிகாரிகள் வெளியே செல்ல அனுமதிக்கவில்லை. பயணிகளின் உடைமைகள் முழுவதையும் சோதனை நடத்தினார்கள். இதில் ஒரு சில பயணிகளை தனியாக அழைத்து சென்று விசாரணை நடத்தினார்கள்.
இந்த விசாரணையில் வெளிநாடுகளில் இருந்து பயணிகள் கொண்டு வரும் தங்கம் மற்றும் பொருட்களுக்கு உரிய வரி செலுத்தாமல் வெளியே கொண்டு செல்வதற்கும், தங்கம் கடத்தலுக்கும் சுங்கத்துறை அதிகாரிகள் சிலர் உடந்தையாக இருந்தது தெரியவந்தது. சி.பி.ஐ. அதிகாரிகளின் இந்த அதிரடி விசாரணையில் இதில் தொடர்புடைய சுங்கத்துறை உதவி ஆணையர் வெங்டேசலு, கண்காணிப்பாளர்கள் கலுகாசலமூர்த்தி, ராமகிருஷ்ணன், இன்ஸ்பெக்டர்கள் அனீஸ்பாத்திமா, பிரசாந்த் கவுதம், ஊழியர் எட்வர்டு ஆகிய 6 பேரும், பயணிகள் 13 பேரும் சிக்கினர். இவர்கள் 19 பேர் மீதும் சி.பி.ஐ. அதிகாரிகள் வழக்கு பதிவு செய்து, அவர்களை கைது செய்தனர். கைதான அனைவரும் மதுரை சி.பி.ஐ. சிறப்பு கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
தங்கம் கடத்தலுக்கு சுங்க இலாகா அதிகாரிகளே உடந்தையாக இருந்தது வேலியே பயிரை மேய்ந்த கதை போல் ஆகிவிட்டது. அதிகாரிகளின் செயலால் திருச்சி விமான நிலையத்தின் பெயர் இந்தியாவில் மட்டும் அல்ல வெளிநாட்டிலும் விமர்சனத்துக்கு உள்ளானது. பல பயணிகள் திருச்சி விமான நிலையம் வழியாக பயணம் செய்வதை தவிர்க்க தொடங்கினார்கள்.
சி.பி.ஐ. நடத்திய சோதனை எதிரொலியாக திருச்சி விமானநிலையத்தில் பணியாற்றிய சுங்கத்துறை அதிகாரிகள் உள்பட அனைத்து பிரிவுகளை சேர்ந்த ஊழியர்களும் அதிரடியாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
அதன்படி திருச்சி சுங்கத்துறை இன்ஸ்பெக்டர்கள் 39 பேர், விமான சரக்கு முனையம் (கார்கோ) பிரிவு அதிகாரிகள் 2 பேரும் சேர்த்து மொத்தம் 41 பேர் அதிரடியாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் திருச்சி தவிர வேறு ஊர்களுக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
இதற்கான உத்தரவை திருச்சி சுங்கத்துறை இணை ஆணையர் முகமது நவ்பால் வெளியிட்டுள்ளார். மேலும், பணியிட மாற்றம் செய்யப்பட்டோர் அந்தந்த இடங்களில் வரும் 12-ந் தேதிக்குள் பணியில் சேருமாறு வாய்மொழியாக உத்தரவிடப்பட்டுள்ளது.
தற்போது திருச்சி விமான நிலைய சுங்கத்துறை வான்நுண்ணறிவு பிரிவு ஆய்வாளர்களாக நிர்மலா ஜோயல், அனுஜ்குமார், ரஜித்குமார், ஹேமந்த்யாதவ், யதுவேந்தர்சிங் ஆகிய 5 பேரும், கார்கோ பிரிவில் நரேந்திரகுமார், ரவிகேஷ்குமார் கேசன் ஆகியோரும் புதிதாக பொறுப்பேற்க உள்ளனர். என்பது குறிப்பிடதக்கது.
இப்படி திருச்சி விமாநிலையத்தின் சுங்கத்துறை அதிகாரிகள் ஒரே இரவில் 41 பேர் அதிரடி மாற்றம் என்பது இதுவே முதல்முறை என்கிறார்கள் விமானநிலைய அதிகாரிகள்.
விமானத்தில் தங்கம் கடத்தல் - 41 சுங்க அதிகாரிகள் அதிரடி மாற்றம்!
சார்ந்த செய்திகள்
Next Story
ஐ.ஜே.கே. நிர்வாகி வீட்டில் பணம் பறிமுதல்!
நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட 21 மாநிலங்களில் உள்ள 102 மக்களவைத் தொகுதிகளுக்கு நாளை மறுநாள் (19.04.2024) வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இந்த வாக்குப்பதிவு காலை 7.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை நடைபெற உள்ளது. அதன்படி முதற்கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ள தொகுதிகளில் தேர்தல் பரப்புரை இன்று (17.04.2024) மாலை 6 மணியுடன் நிறைவு பெறுகிறது. மேலும் இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது.
அதே சமயம் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதால், வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கொடுப்பதைத் தடுக்கும் வகையில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக அரசியல் கட்சித் தலைவர்கள், எம்பிக்கள், அமைச்சர்கள், முன்னாள் அமைச்சர்கள் மற்றும் வேட்பாளர்களின் வாகனங்களில் பறக்கும் படையினர் தீவிரமாக சோதனை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில், திருச்சி மாவட்டம் லால்குடி அருகே ஐ.ஜே.கே. கட்சியின் நிர்வாகி வினோத்சந்திரன் என்பவரின் வீட்டில் வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதற்காக வைத்திருந்த ரூ. 1 லட்சம் பணத்தை தேர்தல் பறக்கும் படையினர் அதிரடியாக பறிமுதல் செய்தனர். பெரம்பலூரில் பாஜக கூட்டணி சார்பில் போட்டியிடும் ஐ.ஜே.கே. நிறுவனர் பாரிவேந்தருக்கு ஆதரவாக வாக்களிக்க இந்தப் பணம் கொடுக்கப்பட இருந்ததாகக் கூறப்படுகிறது. மேலும், பாரிவேந்தர் தொடர்பான கையேடுகளையும் பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். முன்னதாக தேர்தல் பறக்கும் படையினர் சோதனை செய்ய வருவதை அறிந்து தனது வீட்டின் கழிவறையில் வினோத்சந்திரன் பணத்தை பதுக்கியுள்ளார்.
Next Story
துரை வைகோவை ஆதரித்து அமைச்சர்கள் தீவிர ஓட்டு வேட்டை!
திருச்சி பாராளுமன்ற தொகுதியில் இந்தியா கூட்டணி சார்பில் போட்டியிடும் ம.தி.மு.க வேட்பாளர் துரை வைகோ தொகுதி முழுவதும் பம்பரமாக சுழன்று தி.மு.க அரசின் சாதனைகளை எடுத்துக் கூறி தீவிரமாக வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
திருச்சி கிழக்கு, திருச்சி மேற்கு, திருவரங்கம், திருவெறும்பூர், புதுக்கோட்டை, கந்தர்வகோட்டை ஆகிய ஆறு சட்டமன்ற தொகுதிகளிலும் சூறாவளி பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது, துரை வைகோவுக்கு பொதுமக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். இதையடுத்து நேற்று (16-04-24) தீவிர இறுதி கட்ட பிரச்சாரத்தில் ஈடுபட்டார். நேற்று (16-04-24) காலையில் புதுக்கோட்டையில் துரை வைகோவை ஆதரித்து பிரம்மாண்ட வாகன பேரணி நடந்தது. இதில் அமைச்சர்கள் ரகுபதி, மெய்யநாதன், மாவட்ட செயலாளர் செல்ல பாண்டியன் மற்றும் கூட்டணி கட்சியினர் திரளாகக் கலந்து கொண்டனர்.
இதையடுத்து, நேற்று மதியம் ஒரு மணிக்கு திருச்சி மத்திய பேருந்து நிலையத்திற்கு வெளியே பெரியார் சிலை அருகில் பிரச்சார பேரணி தொடங்கியது. இதில் அமைச்சர்கள் கே.என்.நேரு, அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆகியோர் கலந்துகொண்டு துரை வைகோவை ஆதரித்து பிரச்சாரம் செய்தனர். அப்போது, தமிழ்நாட்டு மக்களுக்கு அனைத்து உரிமைகளும், திட்டங்களும் கிடைத்திட, மத்தியில் நல்லாட்சி மலர்ந்திட நம்முடைய வேட்பாளர் துரைவைகோவுக்கு தீப்பெட்டி சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெறச் செய்யுமாறு கேட்டுக் கொண்டனர். இறுதிக்கட்ட பிரச்சார பேரணி நகர் முழுவதும் சென்று காந்தி மார்க்கெட்டில் முடிவடைந்தது .
இந்தப் பிரச்சார பயணத்தில் மத்திய மாவட்ட தி.மு.க செயலாளர் வைரமணி, மாநகர செயலாளர்கள் மேயர் அன்பழகன், மண்டல குழு தலைவர் மதிவாணன், இனிகோ இருதயராஜ், எம்.எல்.ஏ, ம.தி.மு.க துணைப் பொதுச் செயலாளர் டாக்டர் ரொகையா, ம.தி.மு.க மாவட்ட செயலாளர்கள் வெல்லமண்டி சோமு, தமிழ் மாணிக்கம், திருச்சி மாநகர் மாவட்ட காங்கிரஸ் தலைவர் ரெக்ஸ், விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்ட செயலாளர்கள் புல்லட் லாரன்ஸ், கனியமுதன், மக்கள் நீதி மய்யம் மாவட்ட செயலாளர் வக்கீல் கிஷோர் குமார் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் தொண்டர்கள் திரளாகக் கலந்து கொண்டனர்.