சென்னை கோடம்பாக்கம் - ஆற்காடு சாலையில் ஆம்னி கார் திடீரென்று தீப்பற்றி எரிந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வாகன போக்குவரத்து அதிகம் உள்ள கோடம்பாக்கம் நெடுஞ்சாலையில் இன்று (21.09.2021) ஆம்னி கார் ஒன்று கோயம்பேட்டில் இருந்து காய்கறிகளை ஏற்றிக்கொண்டு சென்றுள்ளது. அப்போது கோடம்பாக்கம் - ஆற்காடு சாலையில் சென்றுகொண்டிருக்கும்போது ஓட்டுநர் வாகனத்தின் முன்பக்கம் புகை வருவதைப் பார்த்துள்ளார்.
இதனால் அதிர்ச்சியடைந்த அவர், காரை நிறுத்திவிட்டு முன்புறம் சென்று பார்த்துள்ளார். ஆனால், அதற்குள் தீயின் அளவு அதிகரிக்கவே காரைவிட்டு விலகி ஓடியுள்ளார். வண்டியில் இருந்த காய்கறிகள் அனைத்தும் தீயில் எரிந்து கருகின. விரைந்து வந்த தீயணைப்பு படை போலீசார், தீயை அணைத்தனர். இதையடுத்து, வாகனத்தில் எப்படி தீ பிடித்தது என்பது குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டுவருகிறார்கள்.