Skip to main content

தொப்பூர் விபத்தில் பலியானவர்கள் யார் யார்? முழு விவரம் வெளியானது; விபத்துக்கு காரணமான ஓட்டுநரும் பிடிபட்டார்!

Published on 14/12/2020 | Edited on 14/12/2020
dharmapuri  thoppur incident full detail

 

தொப்பூர் அருகே 4 பேர் உயிரிழப்புக்கு காரணமான விபத்தை ஏற்படுத்திவிட்டு தலைமறைவாக இருந்த கண்டெய்னர் லாரி ஓட்டுநரை காவல்துறையினர் கைது செய்தனர். மேலும், இந்த விபத்தில் பலியானவர்கள் யார் யார் என்ற முழு விவரங்களும் தெரிய வந்துள்ளது.

 

வேலூர் மாவட்டத்தில் இருந்து இரும்பு பாரம் ஏற்றிக்கொண்டு சேலம் நோக்கி ஒரு லாரி சனிக்கிழமை (டிச. 12) வந்து கொண்டிருந்தது. அந்த லாரி, சேலம் - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் தொப்பூர் கணவாய் அருகே வந்தபோது, திடீரென்று ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்தது. பிரேக் பிடிக்காமல் வேகமாக சென்ற அந்த லாரி, முன்னால் சென்ற மற்றொரு லாரியின் மீது மோதி விபத்துக்குள்ளானது. இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

 

dharmapuri  thoppur incident full detail

 

இந்த சம்பவம் நடந்த சிறிது நேரத்திற்குள், ஆந்திரா மாநிலத்தில் இருந்து சிமெண்ட் பாரம் ஏற்றிக்கொண்டு நீளமான கண்டெய்னர் லாரி ஒன்று சேலத்திற்கு வந்து கொண்டிருந்தது. தொப்பூர் கணவாய் இரட்டைப்பாலம் அருகே வந்தபோது, அந்த கண்டெய்னர் லாரியும் பிரேக் பிடிக்காமல் ஓட்டுநர் கட்டுப்பாட்டை இழந்து முன்னால் சென்ற கார்களின் மீது வரிசையாக மோதியது.

 

கண்டெய்னர் லாரி வேகமாக மோதியதில், போக்குவரத்து நெரிசலால் ஏற்கனவே ஊர்ந்து சென்ற கார்கள், லாரிகள் ஒன்றின் மீது ஒன்றி ஏறி நிலைக்குத்தி நின்றன. 12 கார்கள், இரண்டு லாரிகள், ஒரு வேன் என மொத்தம் 15 வாகனங்கள் இந்த விபத்தில் சேதம் அடைந்தன. பல கார்கள், அப்பளம்போல் நொறுங்கின.

 

இந்த பயங்கர விபத்தில் நான்கு பேர் பலியாயினர். சம்பவம் நடந்த அன்று இறந்தவர்கள் பெயர் விவரங்கள் தெரியவரவில்லை. தற்போது பலியானோரின் பெயர்கள் தெரிய வந்துள்ளன.

 

விபத்தில் உயிரிழந்தவர்கள் பெயர் விவரம்:

 

dharmapuri  thoppur incident full detail



1. மதன்குமார் (42), ஓமலூர், சேலம் மாவட்டம். தனியார் கட்டுமான நிறுவன மேலாளர்.

2. கார்த்திக் (38), இவர் மதன்குமாரின் கார் ஓட்டுநர்.

3. நித்தியானந்தம் (35), கோவை.

4. கண்ணன் (40), தர்மபுரி.

 

இந்த கோர விபத்துக்குக் காரணமான கண்டெய்னர் லாரி ஓட்டுநர் சம்பவ இடத்தில் இருந்து தப்பி ஓடிவிட்டார். விபத்து குறித்து தகவல் அறிந்ததும் தர்மபுரி மாவட்ட ஆட்சியர் கார்த்திகா, தர்மபுரி மாவட்ட காவல்துறை எஸ்பி பிரவேஷ்குமார், தீயணைப்புத்துறையினர் ஆகியோர் சம்பவ இடம் விரைந்து சென்று மீட்பு பணிகளில் ஈடுபட்டனர். சாலையின் இருபுறமும் 5 கி.மீ. தொலைவுக்கு மேல் வாகனங்கள் செல்ல முடியாமல் அணிவகுத்து நின்றன. போக்குவரத்து சீரடைய 5 மணி நேரத்திற்கு மேலானது.

 

இது ஒருபுறம் இருக்க விபத்துக்குக் காரணமான லாரி ஓட்டுநரை காவல்துறையினர் தேடி வந்தனர். தொப்பூர் வனப்பகுதியில் ஒருவர் சந்தேகத்திற்கு இடமாக பதுங்கி இருப்பதாக காவல்துறைக்கு தகவல் கிடைத்தது.

 

dharmapuri  thoppur incident full detail

 

அவரை பிடித்து வந்து விசாரித்தபோது, ஜார்க்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த குத்புதீன் (30) என்பதும், அவர்தான் விபத்துக்குக் காரணமான கண்டெய்னர் லாரியின் ஓட்டுநர் என்பதும் தெரிய வந்தது. இதையடுத்து அவரை கைது செய்தனர். பிரேக் பிடிக்காததால் விபத்து நடந்ததா? அவர் சோர்வினால் கண் அயர்ந்தது காரணமா அல்லது குடிபோதையில் வாகனம் ஓட்டினாரா? என பல்வேறு கோணங்களில் விசாரணை நடந்து வருகிறது.

 


 

 

சார்ந்த செய்திகள்

Next Story

தர்மபுரி பா.ம.க. வேட்பாளர் மாற்றம்; தொண்டர்கள் கொண்டாட்டம்!

Published on 22/03/2024 | Edited on 22/03/2024
Dharmapuri pmk candidate change Celebration of volunteers

நாட்டின் 18ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளது. மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் கூட்டணி, தொகுதிப் பங்கீடு எனத் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது. அந்த வகையில், தி.மு.க, அ.தி.மு.க., காங்கிரஸ், தேமு.தி.க., பா.ம.க., பா.ஜ.க. உட்படப் பல்வேறு கட்சிகள் தேர்தல் கூட்டணி, தொகுதிப் பங்கீடு, வேட்பாளர்கள் அறிவிப்பு உள்ளிட்ட பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன.

அதன்படி மக்களவை தேர்தலில் தமிழ்நாட்டில் பா.ஜ.க. மற்றும் கூட்டணிக் கட்சிகள் போட்டியிடும் தொகுதிகளின் பட்டியல் நேற்று (21.03.2024) வெளியானது. அதில் பட்டாளி மக்கள் கட்சிக்கு காஞ்சிபுரம், அரக்கோணம், தர்மபுரி, ஆரணி, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, சேலம், திண்டுக்கல் மற்றும் மயிலாடுதுறை ஆகிய 10 தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. இதனையடுத்து பா.ம.க. சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டனர். அதன்படி அரக்கோணம் - பாலு, கடலூர் - தங்கர்பச்சான், திண்டுக்கல் - திலகபாமா, தர்மபுரி - அரசாங்கம், விழுப்புரம் - முரளி சங்கர், ஆரணி - கணேஷ் குமார், மயிலாடுதுறை - ம.க. ஸ்டாலின், சேலம் - அண்ணாதுரை, கள்ளக்குறிச்சி - தேவதாஸ் அறிவிக்கப்பட்டனர். காஞ்சிபுரத்திற்கு மட்டும் இன்னும் வேட்பாளர் அறிவிக்கப்படவில்லை.

இந்நிலையில் தருமபுரி தொகுதியில் பா.ம.க. வேட்பாளர் அரசாங்கம் மாற்றப்பட்டுள்ளார். இவருக்கு பதிலாக அக்கட்சியின் தலைவர் அன்புமணியின் மனைவியும், பசுமை தாயகம் அறக்கட்டளையின் தலைவருமான சௌமியா அன்புமணி போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து தருமபுரியில் பா.ம.க.வினர் பட்டாசுகள் வெடித்து கொண்டாடினர்.

Next Story

மண் சரிவில் சிக்கிய தொழிலாளர்; மீட்கும் பணியில் ஏற்பட்ட சோகம்!

Published on 16/03/2024 | Edited on 16/03/2024
Labor trapped in landslide in chennai

சென்னை, கிழக்கு தாம்பரம் அருகே ஆதிநகர் பகுதி ஒன்று உள்ளது. இங்கு, தாம்பரம் மாநகராட்சி சார்பில் தனியார் நிறுவனம் மூலம் பாதாள சாக்கடை திட்டத்திற்காக பள்ளம் தோண்டும் பணி நடைபெற்று வந்தது. பாதாள சாக்கடைக்கான பள்ளம் தோண்டி பைப்லைன் பொருத்தும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டு வந்தனர்.

இந்த நிலையில், இன்று (16-03-24) மாலை திடீரென பள்ளத்தில் மண் சரிந்து விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில், திட்டக்குடியைச் சேர்ந்த தொழிலாளர் முருகானந்தம் என்பவர் மண் சரிவில் சிக்கினார். இந்த சம்பவம் குறித்து அங்குள்ளவர்கள் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் கொடுத்தனர். தகவல் அறிந்து, சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் மற்றும் தீயணைப்புத் துறையினர், மண் சரிவில் சிக்கியிருந்த முருகானந்தனை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். 

அதில், ஜே.சி.பி வாகன உதவியுடன் தீயணைப்புத் துறையினர், முருகானந்தனை மீட்கும் பணியில் ஈடுபட்டபோது தலை மட்டும் வந்துள்ளது. இதனால், அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதனையடுத்து, முருகானந்தனின் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு போலீசார் அனுப்பி வைத்தனர். மேலும், இந்த சம்பவம் தொடர்பாக சேலையூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.