Skip to main content

மாயமான மாணவி; 9 மாதங்கள் தேடிய காவல்துறை! எலும்புக்கூடாக இருந்த கொடூரம் 

Published on 18/02/2023 | Edited on 18/02/2023

 

Dharmapuri girl student passed away case

 

அரூர் அருகே கடந்த 9 மாதங்களுக்கு முன்பு காணாமல் போன பள்ளி மாணவியின் உடல், காட்டின் மையப் பகுதியில் எலும்புக் கூடுகளாகக் கண்டுபிடிக்கப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தருமபுரி மாவட்டம், அரூர் அருகே உள்ள எஸ்.அம்மாபாளையம் முள்ளிக்காடு பகுதியைச் சேர்ந்தவர் விவசாயி பெருமாள். இவருடைய மகள் ஞான சௌந்தர்யா கோயம்புத்தூரில் கடந்த 9 மாதங்களுக்கு முன்பு பன்னிரண்டாம் வகுப்பு படித்து வந்துள்ளார். பொதுத் தேர்வை முடித்துவிட்டு தனது சொந்த கிராமத்தில் நடைபெற்ற கோவில் திருவிழாவிற்கு வந்து பங்கேற்றுள்ளார்.

 

திருவிழா நடைபெற்றபோது ஞான சௌந்தர்யா காணாமல் போனதாகவும், தனது மகளை எங்கு தேடியும் கிடைக்கவில்லை எனவும் தெரிவித்து அவருடைய பெற்றோர் கோட்டப்பட்டி காவல் நிலையத்தில் புகார் தந்துள்ளனர். காவல்துறையினரும், ஞானசௌந்தர்யாவின் உறவினர்களும் கோயம்புத்தூர், திருப்பூர், அரூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் தேடியும் மாணவி குறித்து எந்த ஒரு தகவலையும் சேகரிக்க முடியவில்லை. தன்னுடைய மகள் உயிரோடுதான் எங்கோ, யாருடைய பாதுகாப்பிலோ இருப்பதாக நம்பிக்கையுடன் இருந்திருக்கிறார் பெருமாள். ஆனால் அவரது நம்பிக்கையில் இடி விழுந்தது போன்ற ஒரு செய்தி ஒன்பது மாதங்களுக்குப் பிறகு கிடைத்தது.

 

பெருமாளின் பக்கத்து கிராமத்தைச் சேர்ந்த ஒருவர், எஸ்.அம்மாபாளையம் அருகே உள்ள மலைப்பகுதியில் ஒரு சடலம் தூக்கில் தொங்கியபடி இருப்பதாகவும் ஆனால் உடலில் தசைப்பகுதிகள் எதுவும் இல்லாமல் எலும்புக்கூடுகளாக மட்டுமே இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். பதற்றமான பெருமாள், அந்த எலும்புக்கூடு உருவம் தனது மகளாக இருந்திடக்கூடாது என்ற வேண்டுதலுடன் சென்று பார்த்ததும் அதிர்ந்தார். அவருடன் சென்ற உறவினர்களும் அந்த எலும்புக்கூடு உருவம், ஞான சௌந்தர்யா தான் என்பதை கண்ணீருடன் உறுதி செய்தனர்.

 

இது குறித்து கோட்டப்பட்டி காவல்துறையினருக்கு தகவல் அளித்ததன் பெயரில் மருத்துவக் குழுவினர் வரவழைக்கப்பட்டு சோதனை செய்து, அங்கிருந்த எலும்புக் கூடுகள், கையில் அணிந்திருந்த வாட்ச் உள்ளிட்டவற்றை சேகரித்து டி.என்.ஏ. சோதனை மற்றும் உடற்கூராய்விற்காக எடுத்துச் சென்றனர். இந்த மாணவியின் மரணத்தில் சந்தேகம் உள்ளதால், இது கொலையா? தற்கொலையா? என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதுதொடர்பாக மாணவியோடு பயின்ற தோழிகள், உறவினர்கள் மற்றும் அனைவரிடமும் தீவிரமாக விசாரித்து வருகிறார்கள். 

 

9 மாதங்களுக்கு முன்னர் காணாமல் போன பெண்ணின் உடல் இவ்வளவு காலமாக அங்கே உயிரில்லாமல் தொங்கிக் கொண்டிருந்த செய்தி, அப்பகுதி மக்களை பேரதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

முன்னாள் பிரதமரின் பேரன் மீது பாலியல் புகார்!

Published on 28/04/2024 | Edited on 28/04/2024
complaint against the grandson of the former prime minister

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக கடந்த 19ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது. இதனையடுத்து 13 மாநிலங்களில் உள்ள 88 மக்களவைத் தொகுதிகளில் நேற்று முன்தினம் (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்றது. மொத்தம் 28 தொகுதிகள் கொண்ட கர்நாடகா மாநிலத்தில் ஏப்ரல் 26 ஆம் தேதி 14 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடந்து முடிந்துள்ளது. மே 7 ஆம் தேதி மற்ற 14 தொகுதிகளில் தேர்தல் நடைபெறவிருக்கிறது.

இந்தத் தேர்தலில், பா.ஜ.க தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில், தேவகவுடாவின் ஜனதா தளம் (எஸ்) கட்சி போட்டியிடுகிறது. கர்நாடகாவில் ஆளும் கட்சியான காங்கிரஸ் இந்தத் தேர்தலில் தனித்துப் போட்டியிடுகிறது. இந்நிலையில் முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் பேரனும், ஹாசன் மக்களவைத் தொகுதியின் எம்.பி.யுமான பிரஜ்வல் ரேவண்ணா பல பெண்களை பாலியல் வன்கொடுமை செய்ததாக புகார் எழுந்துள்ளது. தன்னிடம் உதவி கேட்டு வந்த ஏராளமான பெண்களை பிரஜ்வல் ரேவண்ணா பாலியல் தேவைகளுக்காக பயன்படுத்திக் கொண்டதாக பரபரப்பு குற்றச்சாட்டு எழுந்துள்ளது. பிரஜ்வல் ரேவண்ணா பல பெண்களுடன் இருப்பது போன்ற ஆபாச காட்சிகள் வெளியாகி மக்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் பிரஜ்வல் ரேவண்ணா மீது உரிய நடவடிக்கை எடுக்கவும் மாநில மகளிர் ஆணையம் கர்நாடக அரசுக்கு கடிதம் எழுதியுள்ளது.

இதனையடுத்து இந்தப் புகார் குறித்து சிறப்பு புலானாய்வுக் குழு அமைத்து விசாரணை தொடங்க முடிவெடுக்கப்பட்டுள்ளது. அதே சமயம் புகார் குறித்த நெருக்கடி அதிகரிப்பால் பிரஜ்வல் ரேவண்ணா கர்நாடகாவில் இருந்து ஜெர்மனிக்கு தப்பியோடியதாவும் தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்து கர்நாடக முதல்வர் சித்தராமைய தனது எக்ஸ் சமூக வலைத்தளப்பக்கத்தில், “பிரஜ்வல் ரேவண்ணாவின் ஆபாச வீடியோ வழக்கு தொடர்பாக சிறப்பு புலனாய்வு குழுவை அமைக்க அரசு முடிவு செய்துள்ளது. ஹாசன் மாவட்டத்தில் பெண்கள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகியிருப்பது போன்ற ஆபாச வீடியோ காட்சிகள் பரவி வருகின்றன. இந்நிலையில், எஸ்ஐடி விசாரணை நடத்துமாறு அரசுக்கு மகளிர் ஆணையத் தலைவர் கடிதம் எழுதியிருந்தார். எனவே இந்தக் கோரிக்கையை ஏற்று இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது” எனக் குறிப்பிட்டுள்ளார். இந்த மக்களவைத் தேர்தலில் ஹாசன் தொகுதியில் பாஜக கூட்டணி வேட்பாளராக பிரஸ்வால் ரேவண்ணா மீண்டும் போட்டியிடுவது குறிப்பிடத்தக்கது. 

Next Story

மதுரையில் இளைஞர்கள் அட்டூழியம்; வெளியான சிசிடிவி காட்சிகள்!

Published on 28/04/2024 | Edited on 28/04/2024
madurai incident Released CCTV footage

மதுரை மாவட்டம் ஒத்தக்கடை பகுதியில் கடந்த 22 ஆம் தேதி (22.04.2024) சித்திரை திருவிழாவின் போது மது போதையில் இருந்த 5க்கும் மேற்பட்ட இளைஞர்கள் ஒத்தக்கடை பகுதிகளில் இரு சக்கர வாகனத்தில் சென்றவர்களை தாக்குவது, பெண்கள் மீது தாக்குதல் நடத்துவது, அப்பகுதியில் இருந்த பொருட்களை அடித்து நொறுக்குவது, வீட்டிற்கு வெளியே உள்ள இருசக்கர வாகனங்களைத் தள்ளிவிட்டு உடைப்பது, கடைகளை சேதப்படுத்துவது எனத் தொடர்ந்து அராஜகங்களில் ஈடுபட்டுள்ளனர். இது தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகி மக்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.

இத்தகைய சூழலில் தான் ஒத்தக்கடை பகுதியைச் சேர்ந்த கான் முகமது கான், கடந்த 22 ஆம் தேதி இரவு தனது பணியை முடித்துவிட்டு இருசக்கர வாகனத்தில் சுந்தரம் நகர் பகுதியில் வந்துள்ளார். அப்போது இந்த இளைஞர்கள் அவரை கடுமையாக தாக்கியுள்ளனர். இந்தத் தாக்குதலில் கான் முகமது கான் பலத்த காயம் அடைந்தார். அதன் பின்னர் மருத்துவனையில் அனுமதிக்கப்பட்ட்டு சிகிச்சை பெற்றார். இது குறித்து ஒத்தக்கடை காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

இதற்கிடையே இந்த இளைஞர்கள் ஐயப்பன் நகர் பகுகுதியில் சென்று அங்குள்ள இரண்டு கடைகளை அடித்து நொறுக்கினர். மேலும் கடையில் இருந்த பெண்கள் மீதும் தாக்குதல் நடத்தியுள்ளனர். இந்நிலையில் இது தொடர்பான சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகி மக்கள் மத்தியில் பதைபதைப்பை ஏற்படுத்தியுள்ளது. அதே சமயம் இந்தச் சம்பவத்தில் ஈடுபட்ட இளைஞர்கள் சிலரை போலீசார் கைது செய்துள்ளனர். மேலும் இருவரை கைது செய்ய போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.