தமிழ்நாடு முழுவதும் வரும் 4ஆம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்படவிருக்கிறது. இதற்காகப் பொதுமக்கள், விடுமுறை நாளான நேற்று துணிகளை வாங்கக் குவிந்தனர். இதில் கூட்டத்தோடு கூட்டமாகத் திருடர்களும் தங்கள் கைவரிசைகளைக் காட்டி வருகின்றனர். அந்த வகையில் நேற்று திருச்சியில் உள்ள பிரபல ஜவுளிக் கடையில் வாடிக்கையாளர்களிடம் கைவரிசை காட்டாமல், வாடிக்கையாளர்கள் போல் கடையில் கைவரிசை காட்டிய பெண் வசமாகச் சிக்கினார்.
திருச்சியில் உள்ள பிரபல ஜவுளிக் கடையில், வாடிக்கையாளர்களுடன் வாடிக்கையாளரைப் போல் கடைக்குள் சென்ற பெண் ஒருவர், 3 பேண்ட், 4 சட்டை, 3 டீ சர்ட் உள்ளிட்டவற்றைத் தான் அணிந்திருந்த ஆடைக்குள் மறைத்து வைத்துத் திருடினார். இதனைக் கவனித்த பணியாளர்கள் அவரை கையும் களவுமாகப் பிடித்துக் கடை மேலாளரிடம் கொடுத்தனர். அவர் காவல்துறையிடம் இதுகுறித்து புகார் அளித்தார். அந்தப் புகாரின் அடிப்படையில் கோட்டை குற்றப்பிரிவு காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து அப்பெண்ணைச் சிறையில் அடைத்தனர்.