காவிரியில் கரை புரண்டு ஓடி வரும் தண்ணீர் என்ற நம்பிக்கையோடு தமிழ்நாடு காவிரி பாசனப் பகுதியில் குருவை சாகுபடிக்காக ஜூன் 12ம் தேதி முதலமைச்சர் தண்ணீர் திறந்துவிட்டார். தண்ணீர் வரத் தொடங்கியதுடன் டெல்டா மாவட்டங்களில் குருவை சாகுபடி செய்யத் தொடங்கிய சில நாட்களில் மேட்டூர் அணையில் படிப்படியாக தண்ணீர் குறைந்தது.
சாகுபடி செய்யப்பட்ட குருவைப் பயிரைக் காப்பாற்ற தண்ணீர் பற்றாக்குறை ஏற்படும் நிலையில் கர்நாடகம் தமிழ்நாட்டுக்கு ஜூன், ஜூலை, ஆகஸ்ட் மாதத்திற்கான தண்ணீரை வழங்கக் கோரி தமிழ்நாடு அரசு கோரிக்கை வைத்தும் தண்ணீர் கிடைக்கவில்லை. காவிரி ஆணையத்திலும் தீர்வு கிடைக்கவில்லை.
இந்த நிலையில் தான் தமிழ்நாடு விவசாயிகள் தொடர் போராட்டங்களை முன்னெடுத்துள்ளனர். இதே போல இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மத்திய அரசு அலுவலகங்கள், வங்கிகள் முன்பு தண்ணீர் தர மறுக்கும் கர்நாடக அரசைக் கண்டித்தும், தண்ணீரைப் பெற்றுத் தராத மத்திய அரசைக் கண்டித்தும் கருகிய நெல் பயிர்களுக்கு ஏக்கருக்கு ரூ. 30 ஆயிரம் இழப்பீடு வழங்க வலியுறுத்தியும் குறுவைப் பயிர்க் காப்பீடு திட்டத்தை உடனடியாக நடைமுறைப்படுத்த வலியுறுத்தியும் ஆர்ப்பாட்டம் நடத்தினார்.
புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி அருகே நாகுடியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் செங்கோடன் தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்டோர் நாகுடி பேருந்து நிலையத்திலிருந்து பேரணியாகச் சென்று இந்தியன் வங்கி முன்பு கர்நாடக அரசு மற்றும் மத்திய அரசுக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதே போல தமிழ்நாடு முழுவதும் போராட்டங்கள் நடந்தது.