Skip to main content

"கரோனா நோயின் தாக்கத்தை அறியாமல் மக்கள் வெளியே வருகின்றனர்"- முதல்வர் பழனிசாமி பேட்டி!

Published on 01/04/2020 | Edited on 01/04/2020


சென்னை சாந்தோமில் உள்ள அம்மா உணவகத்தில் முதல்வர் பழனிசாமி நேரில் ஆய்வு செய்தார். அப்போது அம்மா உணவகத்தில் சமூக இடைவெளி முறையாகக் கடைப்பிடிக்கப்படுகிறதா? எனவும், அம்மா உணவகத்தில் வழங்கப்படும் இட்லியைச் சாப்பிட்டு அதன் தரம் குறித்து சோதனை செய்தார். மேலும் உணவின் தரம் குறித்து பொதுமக்களிடம் கேட்டறிந்தார். அதனைத் தொடர்ந்து சென்னை கலங்கரை விளக்கம் அருகே உள்ள அம்மா உணவகத்திலும் முதல்வர் ஆய்வு செய்தார்.
 

coronavirus tamilnadu cm palanisamy press meet


ஆய்வுக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர் பழனிசாமி, "பல்வேறு மாநிலங்களில் பாராட்டப்பட்ட அம்மா உணவக திட்டம் இன்று மக்களுக்குக் கைகொடுக்கிறது. அம்மா உணவகங்களில் ஒரு ரூபாய்க்கு ஒரு இட்லி தரப்படுகிறது. அம்மா உணவகத்தில் தினமும் 4.5 லட்சம் பேர் உணவருந்துகின்றனர். இஎம்ஐ வசூல் என்பது மத்திய அரசின் பிரச்சனை என்பதால் நிதி அமைச்சரின் கவனத்துக்குக் கொண்டு செல்வோம். டெல்லி மாநாட்டில் தமிழகத்திலிருந்து 1,131 பேர் பங்கேற்றுள்ளனர் அவர்களின் விவரங்கள் தெரியாததால் அரசுக்குத் தாங்களாகவே தெரிவிக்க கோரினோம். தாங்களாகவே முன்வந்து தெரிவித்தால் பாதிக்கப்பட்டோருக்கு சிகிச்சை அளிக்கப்படும். தமிழகத்தில் நேற்றிரவு வரை 124 பேருக்கு கரோனா தொற்று உறுதியாகியுள்ளது. 17,000 படுக்கை வசதிகள் தமிழகத்தில் ஏற்கனவே ஏற்படுத்தப்பட்டுள்ளன.

கரோனா அறிகுறி இருந்தால் ஈஷா கூட்டத்தில் பங்கேற்றவர்களையும் சோதனைக்கு உட்படுத்துவோம். கோயில், தேவாலயம், மசூதிகள் மூடப்பட வேண்டும். கரோனா நோயின் தாக்கத்தை அறியாமல் மக்கள் வெளியே வருகின்றனர். மக்கள் ஒத்துழைப்பு இருந்தால் தான் வைரஸ் பரவலைத் தடுக்க முடியும். ஒவ்வொரு உயிரும் அரசுக்கு முக்கியம். ஏப்ரல் 14- ஆம் தேதிக்குப் பிறகு ஊரடங்கு நீட்டிக்கப்படுமா என்பது குறித்து மத்திய அரசு தான் முடிவு செய்யும்." இவ்வாறு முதல்வர் பேசினார்.

 

சார்ந்த செய்திகள்