Skip to main content

உருட்டுக் கட்டையுடன் கல்லூரிக்குள் நுழைந்த வடமாநில தொழிலாளர்கள்; கோவையில் பரபரப்பு

Published on 15/02/2023 | Edited on 15/02/2023

 

Clash between students and North State workers in Coimbatore

 

கோவையில் உள்ள தனியார் கல்லூரியில் மாணவர்களும் வடமாநிலத் தொழிலாளர்களும் தாக்கிக் கொள்ளும் வீடியோ வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

 

கோவை மாவட்டம் சூலூர் பகுதியில் பிரபலமான தனியார் கல்வி நிறுவனம் ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்தக் கல்லூரியில் தமிழ்நாடு மட்டுமின்றி கேரளா, புதுச்சேரி, கர்நாடகா போன்ற மாநிலங்களைச் சேர்ந்த மாணவ மாணவிகளும் படித்து வருகின்றனர். அதே நேரம்,  இந்த கல்லூரியில் கேண்டீன், ஹவுஸ் கீப்பிங் உள்ளிட்ட பணிகளில் வடமாநில தொழிலாளர்களே அதிகளவில் பணியாற்றி வருகின்றனர். இந்நிலையில், நேற்றிரவு கல்லூரி வளாகத்தில் இருக்கக்கூடிய கேண்டீனில் மாணவ மாணவிகள் ஒன்றாக அமர்ந்து உணவு சாப்பிட்டுக் கொண்டிருந்தனர். அப்போது உணவு பரிமாறுவதில் மாணவர்களுக்கும் வடமாநில தொழிலாளர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. இதனிடையே வடமாநில தொழிலாளர் ஒருவர் அங்கிருந்த கல்லூரி மாணவியை கிண்டல் செய்ததாகக் கூறப்படுகிறது.

 

இதனால், விரக்தியடைந்த மாணவர்கள் அந்த வடமாநில இளைஞரை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். அப்போது, ஒன்று சேர்ந்த வடமாநில தொழிலாளர்கள் அந்த மாணவர்களைத் தாக்கியுள்ளனர். இதற்கு பதிலடியாக மாணவர்கள் பதில் தாக்குதல் நடத்தினர். ஒருகட்டத்தில் இந்த பிரச்சனை தீவிரமடையவே வடமாநில தொழிலாளர்கள் ஒன்று சேர்ந்து உருட்டுக் கட்டைகளுடன் கேண்டினுக்குள் நுழைந்துள்ளனர்.

 

இதனால், மாணவர்களுக்கும் வடமாநில தொழிலாளர்களுக்கும் கடுமையான மோதல் ஏற்பட்டுள்ளது. மேலும், இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த மாணவிகள் நாலாபுறமும் பதறியடித்து ஓடினர். பின்னர், இச்சம்பவம் குறித்து தகவலறிந்த போலீசார் உடனடியாக கல்லூரிக்கு வந்து மாணவர்களையும் - வடமாநில தொழிலாளர்களையும் சமாதானப்படுத்தியுள்ளனர். இது தொடர்பாக கல்லூரி நிர்வாகம் தரப்பில் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே சமயம், வடமாநில தொழிலாளர்கள் சிலர் கல்லூரி வளாகத்திற்குள் உருட்டுக் கட்டைகளுடன் சுற்றித் திரியும் வீடியோ காட்சி தற்போது சோசியல் மீடியாவில் அதிகளவில் ஷேர் செய்யப்படுகிறது.

 

 

 

சார்ந்த செய்திகள்