Skip to main content

நுங்கம்பாக்கம் ரயில்நிலையத்தில் செல்போன் பறிப்பு - கல்லூரி மாணவர்கள் 2 பேர் கைது!

Published on 11/03/2018 | Edited on 11/03/2018
college-student-2


சென்னை நுங்கம்பாக்கம் ரயில்நிலையத்தில் செல்போன் பறிப்பில் ஈடுபட்ட 2 கல்லூரி மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சென்னை நுங்கம்பாக்கம் லயோலா கல்லூரியை சேர்ந்தவர் மானஷ் (19) இவர் கடந்த 8ம்தேதி மாலை கல்லூரி முடிந்து வீட்டிற்கு செல்வதற்காக நுங்கம்பாக்கம் மின்சார ரயில் நிலையம் வந்துள்ளார்.

ரயிலுக்காக மானஷ் காத்துக்கொண்டிருந்த நேரத்தில், திடீரென அங்கு வந்த 2 பேர் மானஷை சரமாரியாக தாக்கி அவரது கையில் இருந்த செல்போனை பறித்து சென்றனர். இதில் அதிர்ச்சியடைந்த மானஷ் ரயில்வே காவல்துறையினரிடம் உடனடியாக புகார் தெரிவித்துள்ளார்.

மானஷ் புகாரின் பேரில், சம்பவம் நடந்த இடத்தில் இருந்த சிசிடிவி காட்சிகளை கொண்டு காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டதில், பச்சையப்பன் கல்லூரியை சேர்ந்த மாவணர்கள் முத்துக்குமார், திவாகரன் என கண்டறியப்பட்டனர்.

இதைதொடர்ந்து, அவர்கள் இருவரும் நேற்று இரவு கைது செய்யப்பட்டனர். அவர்களிடமிருந்த செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இதையடுத்து எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட இருவரும் பின் புழல் சிறையில் அடைக்கப்பட்டனர்.

சார்ந்த செய்திகள்