Skip to main content

குரூப்-1 தேர்வு முறைகேட்டில் சிபிஐ விசாரணை வேண்டும்-ஸ்டாலின்  

Published on 17/05/2018 | Edited on 17/05/2018

 

குரூப்-1 தேர்வில் நடந்துள்ள முறைகேட்டில் சிபிஐ விசாரணை வேண்டும் என திமுக செயல் தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

 
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் 2016 ஆம் ஆண்டுக்கான குரூப்-1 தேர்வில் மிகப்பெரிய மோசடி நடைபெற்று இருப்பதும், இந்த மோசடி மூலம் மனித நேயம் - அப்பல்லோ பயிற்சி மையத்திலிருந்து தேர்வு எழுதியவர்கள் டி.எஸ்.பி. மற்றும் ஆர்.டி.ஓ. பதவிகளில் தேர்வாகி இருக்கிறார்கள் என்று வெளியாகியுள்ள செய்திகளும் அதிர்ச்சியை அளிக்கின்றன. வேலை இல்லாமல் தவித்துக் கொண்டிருக்கும் பட்டதாரி இளைஞர்கள் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் மீது நம்பிக்கை வைத்து இரவுபகலாக படித்தும், வெளியூர்களில் இருந்து குறிப்பாக கிராமப்பகுதிகளில் இருந்தும் கடன் வாங்கிக் கொண்டு வந்து, சென்னையில் தங்கியிருந்து படித்தும் குரூப்-1 தேர்வுகளை எழுதுகிறார்கள்.

 

stalin

 

ஆனால், 2016 ஆம் ஆண்டு குரூப்-1 தேர்வில், 74 பதவிகளுக்கு மனிதநேயம் - அப்பல்லோ பயிற்சி மையத்தில் பயிற்சி பெற்று தேர்வு எழுதியவர்கள் 62 பதவிகளுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார்கள் என்பதும், இந்த மையத்தில் வழங்கப்பட்ட மாதிரித் தேர்வுகளில் உள்ள கேள்விகளில் 60 சதவீதம் கேள்விகள் குரூப்-1 தேர்வில் கேட்கப்பட்டுள்ளன என்பதும் மிகப்பெரிய மோசடியாகவும், நேர்மையாகத் தேர்வு எழுதும் வேலைவாய்ப்பு இல்லாத இளைஞர்களின் கனவுகளைத் தகர்க்கும் விதத்திலும் அமைந்துள்ளது.

 

இந்தத் தேர்வில் இமாலய முறைகேடு செய்த வழக்கில், முக்கிய குற்றவாளிகளைக் கைது செய்யாமலும், கைது செய்யப்பட வேண்டிய குற்றவாளிகளுக்கு முன்ஜாமீன் கொடுப்பதற்கு உதவியாகவும் சென்னை மாநகரக் காவல்துறையும், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியும் செயல்பட்டுக் கொண்டிருப்பது கடும் கண்டனத்திற்குரியது மட்டுமல்ல, எண்ணற்ற இளைஞர்களின் எதிர்காலத்தைப் பாழ்படுத்தும் மாபெரும் துரோகச் செயலாகும். தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வு வாரியத்தால் தயாரிக்கப்பட்ட கேள்வித்தாள் மனித நேயம் - அப்பல்லோ பயிற்சி மையத்திற்கு எப்படிக் கிடைத்தது? அதற்கு உடந்தையாக இருந்த முக்கிய புள்ளிகள் யார்? என்பது பற்றியெல்லாம் காவல்துறை விசாரிக்காமல் இருப்பது உள்ளபடியே வேதனை மிகுந்ததாக இருக்கிறது.

 

அதுமட்டுமின்றி, 18.1.2018 அன்று அப்பல்லோ பயிற்சி மையத்தில் நடைபெற்ற காவல்துறை ரெய்டில் கைப்பற்றப்பட்ட முக்கிய ஆவணங்கள் மற்றும் செல்பேசிகளில் இருந்த தொலைபேசி எண்கள் அடிப்படையில் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் மூடி மறைத்தது ஏன்? ஒரு பக்கம் அரசு வேலைவாய்ப்புகளில் சத்துணவு சமையல்காரர் முதல் தலைமைச் செயலகம் வரை ஊழல் தலைவிரித்தாடுகிறது. இன்னொரு பக்கம் அரசு வேலைவாய்ப்புகளுக்கு தேர்வு நடத்தும் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தில் உள்ளவர்களும், மனிதநேயம் - அப்பல்லோ பயிற்சி மையமும் ரகசியக் கூட்டணி வைத்து முறைகேட்டில் ஈடுபடுகிறார்கள்.

 

இந்த ஈனச்செயல்கள் எல்லாம் அதிமுக அரசின் புரையோடிப் போன ஊழலுக்கான கறைபடிந்த சாட்சியங்களாக இருக்கின்றன. கேள்வித்தாள், தேர்வு மையங்கள், விடைத்தாள் திருத்துவது, நேர்முகத்தேர்வின் போது மதிப்பெண் வழங்குவது உள்ளிட்ட நான்கு கட்டங்களாக நடைபெற்ற 2016 குரூப்-1 தேர்வில், டி.என்.பி.எஸ்.சி.யில் நடைபெற்றுள்ள முறைகேடு குறித்து சத்தியம் தொலைக்காட்சியில் செய்தியாக வெளி வந்தபோது, அந்தத் தொலைக்காட்சி மீதே நடவடிக்கை எடுக்க தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தில் இருந்து புகார் அளித்து, இந்த இமாலய முறைகேடுகளை ஒட்டுமொத்தமாக மூடி மறைக்க நடைபெற்ற சதிகளும் விசாரணையில் அம்பலமாகியிருக்கிறது.

 

அதுமட்டுமின்றி, இந்த மனித நேயம் - அப்பல்லோ பயிற்சி மையத்தின் பின்னணியில் முன்னாள் மேயரும், அதிமுகவின் முக்கிய புள்ளியுமான சைதை துரைசாமியிடம் காவல்துறை இதுவரை விசாரணை நடத்தவில்லை. அப்பல்லோ பயிற்சி மையத்தின் இயக்குனர் சாம் ராஜேஸ்வரனுக்கு முன்ஜாமின் அளிப்பதை அதிமுக அரசு எதிர்க்கவில்லை. குரூப்-1 தேர்வில் நடைபெற்றுள்ள மிக மோசமான இந்த முறைகேட்டை மூடி மறைக்க அதிமுக அரசு வரிந்து கட்டிக் கொண்டு செயல்பட்டு வருகிறது.

 

ஆகவே, சென்னை மாநகர காவல்துறையிடமிருந்து இந்த விசாரணையை சென்னை உயர் நீதிமன்றத்தின் நேரடிப் பார்வையில் சி.பி.ஐ.க்கு மாற்ற வேண்டும் என்றும், இந்த முறைகேட்டிற்குத் துணைபோன தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் உயரதிகாரிகள், மனித நேயம் - அப்பல்லோ பயிற்சி மையத்தின் முக்கிய புள்ளிகள் உள்ளிட்டவர்களைக் காலம் தாழ்த்தாமல் கைதுசெய்து கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், 2016 குரூப்-1 தேர்வு மட்டுமின்றி, இந்தப் பயிற்சி மையத்தின் முறைகேடுகள் அரசின் மற்ற போட்டித் தேர்வுகளிலும் பரவி இருக்கிறதா என்பதைக் கண்டறிய தீவிர விசாரணை மேற்கொள்ள வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கிறேன் கூறியுள்ளார்.

சார்ந்த செய்திகள்

Next Story

'வெறுப்பும் பாகுபாடும் தான் மோடியின் உத்தரவாதம்'-முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டனம்

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
'Hatred and discrimination is Modi's guarantee'- CM Stalin condemns


18ஆவது நாடாளுமன்றத் தேர்தல், நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. 7 கட்டங்களாக இந்தத் தேர்தல் நடைபெறும் நிலையில் முதற்கட்ட வாக்குப்பதிவு, கடந்த 19ஆம் தேதி நடைபெற்று முடிந்துள்ளது. இதில் தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்கள் அடங்கும். இதையடுத்து மற்ற மாநிலங்களில் அடுத்தடுத்து வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. ஜூன் 1ஆம் தேதி கடைசி நாள் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. ஜூன் 4ஆம் தேதி தேர்தலின் முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளன.

இதனால் இரண்டாம் கட்ட தேர்தலுக்கான பிரச்சாரம் வட இந்திய மாநிலங்களில் களைகட்டி வருகிறது. அரசியல் தலைவர்கள் தங்களின் பிரச்சாரத்தைத் தீவிரமாக செய்து வருகின்றனர். அந்த வகையில் ராஜஸ்தான் மாநிலம் பன்ஸ்வாராவில் பிரதமர் மோடி நேற்று தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது, “காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையில் தாய்மார்கள் மற்றும் மகள்கள் வைத்திருக்கும் தங்கம் கணக்கீடு செய்யப்பட்டு பங்கீடு செய்யப்படும் என்று வாக்குறுதி அளிக்கப்பட்டுள்ளது. முன்பு காங்கிரஸ் ஆட்சி காலத்தின் போது நாட்டின் உடைமைகளில் இஸ்லாமியர்களுக்கு முன்னுரிமை இருக்கிறது என்று கூறினார்கள். அப்படியென்றால் யாருக்கு உங்கள் வளங்கள் போகப்போகிறது?. நாட்டில் ஊடுருவி வருபவர்களுக்கும், அதிக குழந்தைகளைப் பெற்றெடுப்பவர்களுக்கும், மக்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்த செல்வத்தை காங்கிரஸ் கட்சி பங்கிட்டுக் கொடுத்துவிடும்.

அதாவது, காங்கிரஸ் கட்சியினர் இந்தியாவுக்குள் ஊடுருவிய, அதிக குழந்தைகள் பெற்றுக் கொண்டவர்களுக்கு சொத்துகளை வழங்குவோம் என்கிறார்கள். நீங்கள் கடினமாக உழைத்து சேர்த்த சொத்தை அவர்களுக்குக் கொடுக்க ஒப்புக்கொள்ளப் போகிறீர்களா?” எனப் பேசினார். பிரதமரின் இந்தப் பேச்சு பெரும் சர்ச்சையானது.

பிரதமர் மோடியின் இத்தகைய வெறுப்பு பேச்சுக்கு தேர்தல் ஆணையம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் அபிஷேக் மனு சிங்வி, சல்மான் குர்ஷித், குர்தீப் சத்பால் ஆகியோர் தேர்தல் ஆணையத்திற்கு நேரில் சென்று புகார் மனு அளித்துள்ளனர். சமூகங்களுக்கு இடையே வெறுப்பை பரப்பும் வகையில் பேசிவரும் பிரதமர் மோடி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

'Hatred and discrimination is Modi's guarantee'- CM Stalin condemns

இந்நிலையில் பிரதமர் மோடியின் பேச்சுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். 'பிரதமர் மோடியின் நச்சு பேச்சு கேவலமானது, மிகவும் வருந்தத்தக்கது. மக்களின் கோபத்திற்கு அஞ்சி மத உணர்வுகளைத் தூண்டி வெறுப்பு பேச்சை நாடி உள்ளார் பிரதமர் மோடி. பிரதமரின் அப்பட்டமான வெறுப்பு பேச்சுக்கு தேர்தல் ஆணையம் நடுநிலைமையைக் கைவிட்டு விட்டது. வெறுப்பும் பாகுபாடும் தான் மோடியின் உண்மையான உத்தரவாதம்' என  தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார்.

Next Story

'கலைஞரின் பிறந்தநாள் பரிசாக தேர்தல் முடிவு இருக்கும்'-துரை வைகோ நம்பிக்கை

Published on 20/04/2024 | Edited on 20/04/2024
'The result of the election will be an kalaingar's birthday gift' - Durai Vaiko believes

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக நேற்று (19-04-24) தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.

தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிகளுக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் நேற்று(19-04-24) ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்றது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற்று முடிந்தது.

இந்நிலையில் சென்னை எழும்பூரில் செய்தியாளர்களைச் சந்தித்த மதிமுகவின் திருச்சி வேட்பாளர் துரை வைகோ பேசுகையில், ''தமிழகத் தேர்தல் முடிவுகள் தமிழக முதல்வர் மு.க ஸ்டாலினுக்கு முன்னாள் முதல்வர் கலைஞரின் பிறந்தநாள் பரிசாக இருக்கும். தனக்காக பரப்புரை செய்த தமிழக அமைச்சர்கள் மற்றும் தோழமை, கூட்டணி கட்சியினருக்கு என்னுடைய மனமார்ந்த நன்றிகள்.

இது ஜனநாயகத்திற்காக, மக்கள் நல அரசியலுக்காக மக்கள் ஆதரவளிக்க வேண்டும் என்பதற்கான தேர்தல். அதேவேளையில் மத அரசியல் புரிந்து மக்களை பிளவுபடுத்தும் ஜாதி, மத அரசியலுக்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்பதுதான் தேர்தல் பரப்புரையாக இருந்தது. இந்தத் தேர்தலை பொறுத்தவரை புதுவை உட்பட 40 தொகுதிகளிலும் இந்தியா கூட்டணி ஒரு மிகப்பெரிய வெற்றியைப் பெறும். ஜூன் நான்காம் தேதி தேர்தல் முடிவுகள் வரும் பொழுது கலைஞரின் 101 வது பிறந்தநாள் பரிசாக நமது முதல்வர் மு.க.ஸ்டாலினுக்குத் தேர்தல் முடிவுகள் இருக்கும் என நம்புகிறேன்'' என்றார்.