மனைவி நாகபிரியாவையும், அவருடன் தொடர்பில் இருப்பதாக தான் சந்தேகிக்கும் மாரீஸ்வரனின் தந்தை அருணாசலத்தையும், மாரீஸ்வரனின் சகோதரன் மாரியப்பனையும் அரிவாளால் வெட்டிவிட்டு தப்பியோடிய கணேசனை, விருதுநகர் மாவட்டம் – ஆமத்தூர் காவல்துறையினர் தேடி வருகின்றனர்.
என்ன விவகாரம் இது?
விருதுநகர் மாவட்டம் – செங்கோட்டை – செங்குன்றாபுரத்தைச் சேர்ந்த கணேசனுக்கும் நாகபிரியாவுக்கும் 6 வருடங்களுக்கு முன் திருமணம் நடந்தது. இத்தம்பதியருக்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். பக்கத்து வீட்டில் வசிக்கும் மாரீஸ்வரனுக்கும் தன் மனைவி நாகபிரியாவுக்கும் திருமணத்தை மீறிய உறவு இருந்து வருவதாகச் சந்தேகப்பட்ட கணேசனால், வீட்டில் அடிக்கடி சண்டை நடந்திருக்கிறது. பிரச்சனை ஏற்படும்போதெல்லாம், பக்கத்தில் குடியிருக்கும் நாகபிரியாவின் அக்கா சந்தனமாரியும், அவருடைய கணவர் ஆறுமுகமும் கணேசனை கண்டித்து வந்துள்ளனர்.
சம்பவத்தன்று காலை 5 மணிக்கெல்லாம் கணேசன் வீட்டில் எழுந்த சத்தம் கேட்டு சந்தனமாரியும் ஆறுமுகமும் சென்று பார்த்தபோது, நாகபிரியாவிடம் கணேசன் “ஒழுங்கா இருக்கமாட்டேங்கிற... செத்துப்போடி..” என்று அரிவாளால் மாறிமாறி பல இடங்களில் வெட்டியிருக்கிறார். அடுத்து வீட்டுக்கு வெளியே வந்து, தான் சந்தேகப்படும் மாரீஸ்வரன் ஊரில் இல்லாத நிலையில் அவருடைய தந்தை அருணாசலத்திடம் “உன் மகனால்தான்டா என் குடும்பத்துல பிரச்சனை. இத்தோடு செத்து தொலைடா..” என்று வெட்டியிருக்கிறார். தந்தைக்கு வெட்டு விழுவதைப் பார்த்து தடுக்க வந்த அருணாசலத்தின் இன்னொரு மகன் மாரியப்பனை கடித்து காயம் ஏற்படுத்திவிட்டு, அரிவாளோடு தப்பியோடிவிட்டார். ஆமத்தூர் காவல்நிலைய போலீசார் கணேசன் மீது மூன்று பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவுசெய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.