இரண்டாண்டுகளுக்கு முன்பு இதே நாள்!
கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு நிலம், நீர், காற்று ஆகியவனற்றில் மாசு ஏற்படுத்தும் ஸ்டெர்லைட் ஆலை ஸ்டெர்லைட் மீது நடவடிக்கை எடுங்கள் என குடிநீர், பால், உணவு எடுத்துக்கொண்டு குழந்தைகள் முதல் பெண்கள், முதியவர்கள் என குடும்பத்துடன் திருவிழாவிற்கு செல்வது போல் மாவட்ட ஆட்சியரிடம் முறையிடச் சென்றார்கள் தூத்துக்குடி மாவட்ட மக்கள்.
நடந்தது என்னவோ.?! வாயில் சுடப்பட்டும், தலையில், நெஞ்சில் சுட்டு படுகொலை செய்யப்பட்டனர். காவல்துறையினரால் சுட்டுக்கொல்லப்பட்டவர்கள் 12 நபர்கள், காவல்துறையினரால் அடித்து உதைக்கப்ப்ட்டு இறந்தவர்கள் 3 நபர்கள், செய்துங்கநல்லூரில் பேருந்தில் கொளுத்தப்பட்டவர் ஒருவர் என நாசகார ஸ்டெர்லைட் ஆலைக்காகக் கொல்லப்பட்டவர்கள் மட்டும் 16 நபர்கள். அவர்களுக்காக இன்று நினைவேந்தலை செலுத்தி வருகின்றனர் தூத்துக்குடி மாவட்ட மக்கள். கூட்டம் கூடிவிடக்கூடாது, மீண்டும் ஒற்றுமையாக கை கோர்த்துவிடக் கூடாது என்பதற்காக இன்றும் கடுமையாக நெருக்கடி கொடுத்து வருகின்றது மாவட்ட காவல்துறை. அஞ்சலி செலுத்த வருபவர்களின் ஆதார் எண்ணைக் கேட்பது தான் அடக்குமுறையின் உச்சம் என்கின்றனர் மக்கள்.
நினைவோடு கலந்த வலிகள், உணர்வோடு கலந்த உயிரிழப்புகள் ஏதும் எளிதில் மறைவதில்லை என்பதற்கேற்ப ஆண்டுகள் இரண்டாகினாலும் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டங்களும், துப்பாக்கிச் சூடு உயிரிழப்புகளின் சுவடுகளும் இன்னும் தூத்துக்குடியில் ஆறாத ரணமாகவே உள்ளது. பல ஆண்டுகால போராட்டம், பல நூறு தடைகள், பல உயிரிழப்புகள் என எல்லாவற்றையும் தாங்கி நின்ற ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான விவகாரம் தற்போது நீர் விட்டு அணைக்கப்பட்ட தீ கனல்களில் கசியும் புகையைப் போல் கசிந்திட தொடங்கி உள்ளது.
வழக்கு விசாரணைகளை காரணம் காட்டி ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டத்தின்போது உயிரிழந்தவர்களின் நினைவேந்தல் நிகழ்ச்சிக்கு மறுத்து வந்த நிலையில் தற்போது இரண்டாம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்ச்சிக்கும் அனுமதி தரவில்லை.
ஸ்டெர்லைட்டிற்கு ஆதரவான காவல்துறையும் பொது வெளியில் ஒன்று சேரக்கூடாது என ஸ்டெர்லைட் எதிர்ப்பு குழுவினருக்கு சம்மனை அனுப்பி வைத்து எச்சரிக்க ஆரம்பித்தது. மடத்தூர் பகுதியில் நினைவேந்தல் பேனரை அப்புறப்படுத்தி, பேனர் வைத்தவர் மீதும் வழக்குப் பதிவு செய்தது. எனினும், இதனைப் பொருட்படுத்தாது இன்றைய தினத்தில் தூத்துக்குடி மக்களுக்காக தங்களது இன்னுயிரைக் கொடுத்த ஈகியர்களுக்கு மாநகரிலுள்ள பண்டாரம்பட்டி, மடத்தூர், குமாரரெட்டியாபுரம், தோமையா நகர், இனிகோ நகர், லயன்ஸ் டோன், புதுத்தெரு, சில்வர்புரம் உள்ளிட்ட இடங்களிலும் மறைந்த ஈகியரை நினைவு கூறும் விதமாக, முகத்தில் கறுப்பு வண்ண முகக்கவசம் அணிந்தும், மெழுகுவர்த்தியும் அஞ்சலியை பெரும்பாலானோர் நினைவஞ்சலி செலுத்த, உயிரிழந்த ஈகியரின் குடும்பத்தார்களோ தங்களது உயிர் உறங்கும் கல்லறையில் அஞ்சலி செலுத்த, குடும்பத்தினர் தவிர கல்லறைக்கு அஞ்சலி செலுத்த வருபவர்களை அந்தப் பகுதி சாலையிலேயே தடுத்து நிறுத்தி அவர்களிடம் ஆதார் எண்ணைக் கேட்டு, அதனை வாங்கிய பின்னரே நினைவஞ்சலிக்கு அனுமதிக்கின்றனர்.
எனினும் தொடர்ந்து அஞ்சலி செலுத்தி வரும் மக்கள் இன்று (22/05/2020) மாலை 07.00 மணியளவில் அவரவர் வீட்டின் முன்பு மெழுகுவர்த்தி ஏற்றி அஞ்சலி செலுத்தவுள்ளது குறிப்பிடத்தக்கது.