Skip to main content

போனில் பேசி 50 லட்சம் லோன் தருவதாக கூறி 15 லட்சத்தை ஏமாற்றிய இளம்பெண் உட்பட 7 பேர் கைது!

Published on 14/10/2018 | Edited on 14/10/2018

நம்முடை செல்போனுக்கு அடிக்கடி பிரபலமான பைனாஸ் நிறுவனங்களில் இருந்து உங்களுக்கு லோன் தருகிறோம் என்று மெசெஜ் வரும் அல்லது இளம் பெண்கள் இனிப்பான குரலில் லோன் தருகிறோம் என்று அடிக்கடி உங்களுக்கே வந்திருக்கலாம். அந்த குரல்களுக்கு நீங்கள் மதிப்பு கொடுத்து பேசினால் திருச்சியில் காந்திமார்கெட் மொத்த வியாபாரி முருகப்ப செட்டியாருக்கு ஏற்பட்ட நிலையே உங்களுக்கு ஏற்படும். இது உங்களுக்கான எச்சரிக்கை செய்தி! 

 

LOAN

 

திருச்சி காந்திமார்க்கெட் மணிமண்டபசாலையில் உருளைகிழங்கு மண்டி வைத்து மொத்த வியாபாரம் செய்பவர் முருகப்ப செட்டியார். இவர் திருச்சி மாநகர போலீஸ் கமிஷனர் அமல்ராஜை சந்தித்து புகார் மனு ஒன்றை அளித்தார். அந்த மனுவில், “கடந்த ஜூலை மாதம் 20-ந் தேதி என்னை செல்போனில் ஒரு பெண் தொடர்பு கொண்டார். அந்த பெண் தனது பெயர் நிஷா என்றும், மகேந்திரா பைனான்ஸ் நிறுவன மேலாளராக இருப்பதாகவும் அறிமுகம் செய்து கொண்டார்.

 

பின்னர் தங்களது நிதி நிறுவனத்தில் ரூ.25 லட்சம் முதல் ரூ.50 லட்சம் வரை கடன் தருவதாகவும், அதற்கு உங்களுடைய வங்கி கணக்கு எண் மற்றும் ஏ.டி.எம். கார்டு எண்ணை கொடுக்கும்படி கேட்டார். நானும் அந்த எண்களை கொடுத்தேன். சிறிதுநேரத்தில் எங்களது நிறுவனத்தில் இருந்து உங்கள் செல்போனுக்கு ஓ.டி.பி. எண் வரும். அதனையும் கூறியபிறகு கடன் சம்பந்தமாக பரிசீலிக்கப்படும் என்றார். அதன்படி நானும் அனைத்து தகவல்களையும் கொடுத்தேன்.

 

LOAN

 

பின்னர் அதே நிறுவனத்தை சேர்ந்தவர்கள் என்று 7 பேர் என்னை பலமுறை தொடர்பு கொண்டு அவ்வப்போது ஓ.டி.பி.எண்ணை கேட்டனர். நானும் கொடுத்தேன். ஆனால் அவர்கள் கூறியபடி எனக்கு கடன் எதுவும் கொடுக்கவில்லை. மாறாக, கடந்த 10-ந் தேதி வரை எனது வங்கி கணக்கில் இருந்து ரூ.15 லட்சத்து 60 ஆயிரம் எடுக்கப்பட்டு இருந்தது.

 

இது தொடர்பாக நிஷா என்ற பெண்ணை செல்போனில் தொடர்பு கொண்டு கேட்டபோது, அது தங்களது நிறுவனம் கடன் கொடுப்பதற்கான பரிசீலனை தொகை என்றும், விரைவில் ரூ.50 லட்சம் கடன் தருவதாகவும் கூறினார். அதன்பிறகு மேலும் 2 மாதங்கள் கழிந்தபிறகும் கடன் கொடுக்கவில்லை. அப்போது தான் என்னை மோசடி செய்தது தெரியவந்தது. ஆகவே அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்“ என்று கூறி இருந்தார். இந்த மோசடி குறித்து சைபர்கிரைம் போலீசாரின் உதவியுடன் குற்றவாளிகளை கண்டுபிடிக்க கமிஷனர் உத்தரவிட்டார். இதையடுத்து சைபர்கிரைம் போலீசார் முதற்கட்டமாக நிஷா என்ற பெண் பேசிய செல்போன் எண்ணை வைத்து விசாரணை செய்தனர். விசாரணையில் அவர் சென்னை கே.கே.நகர் அம்பேத்கார் காலனியை சேர்ந்த அனுஷா(வயது 25) என்பதும், இந்த மோசடியில் மேலும் 6 பேர் ஈடுபட்டதும் தெரியவந்தது.

 

LOAN

 

உடனே தனிப்படை போலீசார் சென்னைக்கு சென்று மோசடியில் ஈடுபட்ட சென்னை நய்னியப்பன்தெருவை சேர்ந்த முகமதுஜாவீத் வேலூர் மாவட்டம் வாலாஜாபேட்டையை சேர்ந்த சதீஷ்குமார், காஞ்சீபுரம் செய்யூர் சீக்கினான் குப்பத்தை சேர்ந்த கார்த்திக் சென்னை மடிப்பாக்கத்தை சேர்ந்த விக்கி நிகேதன் காஞ்சீபுரம் தாழம்பூர் கூட்டுரோடை சேர்ந்த முத்துக்குமார், காஞ்சீபுரம் காரப்பாக்கத்தை சேர்ந்த சிலம்பரசன் ஆகியோரை பிடித்து வந்தனர்.

 

LOAN

 

இவர்கள் 7 பேரும் கூட்டாக சேர்ந்து மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து இந்த சம்பவம் குறித்து காந்திமார்க்கெட் போலீசார் வழக்கு பதிவு செய்து, 7 பேரையும் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ரூ.1 லட்சத்து 14 ஆயிரத்து 900, மடிக்கணினி 2, செல்போன் 11, ஏ.டி.எம். கார்டு 20 ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.

 

திருச்சியில் வியாபாரியிடம் போனில் பேசியே இப்படி பணம் பறித்த கும்பலிலின் செயலை கண்டு வியாபாரிகள் எல்லாம் அதிர்ச்சியில் இருக்கிறார்கள். இன்னும் எவ்வளவு பேரை இப்படி ஏமாற்றியிருக்கிறார்ளோ என்கிற கவலை திருச்சி தனிப்படை போலிசார் மத்தியில் இருக்கிறது. 

 

துரிதமாக நடவடிக்கை எடுத்து குற்றவாளிகளை கைது செய்த தனிப்படையினரை திருச்சி மாநகர காவல்துறை ஆணையர் அமல்ராஜ் பாராட்டினார்.

சார்ந்த செய்திகள்

Next Story

போலீசுக்கே விபூதி; ரா அதிகாரி என மிரட்டிய போலி அதிகாரி கைது 

Published on 22/02/2024 | Edited on 22/02/2024
Vibhuti to the police; Fake officer who threatened to be RAW officer arrested

கடலூர் மாவட்ட  காவல்துறையினர் மற்றும் சில பொதுமக்களுக்கு செவ்வாய்க்கிழமை தொலைபேசி அழைப்பு ஒன்று வந்துள்ளது. இந்த அழைப்பில் பேசியவர் ரா உளவுத் துறையைச் சேர்ந்த உயர் அதிகாரி என்றும் டெல்லியில் இருந்து வந்திருப்பதாகவும், சிதம்பரத்தில் உள்ள முக்கிய அரசியல் பிரமுகரின் மகனை கைது செய்ய வந்துள்ளதாகவும், இதற்கு தேவையான நடவடிக்கையை  எடுக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளார்.

இதனைத் தொடர்ந்து பல கேள்விகளை காவல் அதிகாரிகள் கேட்டுள்ளனர். அதற்கு அவர் தெளிவாக பதிலை கூறியுள்ளார். இந்த தகவல் உண்மை என நம்பிய காவல்துறை  அதிகாரிகள். கைது நடவடிக்கைக்கு தேவையான காவலர்களை சிதம்பரம் நகர காவல் நிலையத்தில்  செவ்வாய்க்கிழமை இரவு 9 மணி வரை இருக்க உத்தரவிட்டனர்.

இந்நிலையில் செவ்வாய்க்கிழமை நள்ளிரவில் சிதம்பரம் நகர காவல்துறையினர் சிதம்பரம் பேருந்து நிலையத்தில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது சந்தேகத்திற்குரிய முறையில் திரிந்த வாலிபர் ஒருவரை பிடித்து விசாரணை செய்துள்ளனர். அப்போது அவர் ரா அதிகாரி என்று கூறி மிரட்டியுள்ளார். காவலர்கள் அவரை காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டதில் அவர் பரங்கிப்பேட்டை ஆற்றங்கரையை தெருவைச் சேர்ந்த நீல ஒளி மகன் சிவசுப்பிரமணியன் ( 35)  எனவும் இவர் கடல் வாழ் உயிரினங்கள் குறித்து பட்டய படிப்பு முடித்துள்ளதாகவும், இவர் மும்பை பகுதியில் பணியில் இருந்த போது போதை பொருட்களுக்கு அடிமையாகி செங்கல்பட்டு போதை  மறுவாழ்வு மையத்தில் சிகிச்சையில் இருந்ததாகவும், கடந்த சில மாதங்களுக்கு முன்பு சென்னை பகுதியில் உள்ள எம்எல்ஏ ஒருவரை தொலைபேசியில் மிரட்டியதற்காக சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டு பிணையில் விடுதலையானவர் என்றும் தெரியவந்தது.

புதன்கிழமை இரவு சிதம்பரம் நகர போலீசார் அவர் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். இதனால் மாவட்ட காவல்துறை மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Next Story

 ‘நான் தான் மத்திய அரசு அதிகாரி பேசுறேன்...’- போலீஸை மிரட்டிய போலி அதிகாரி

Published on 04/11/2023 | Edited on 05/11/2023

 

the fake officer who threatened the police

 

மத்திய அரசு அதிகாரி என்று கூறி ஆள்மாறாட்டத்தில் ஈடுபட்டவரை மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர் கைது செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

சென்னை மாங்காடு பகுதியைச் சேர்ந்தவர் நாகசுப்பிரமணியன் (57). இவர் சென்னையில் உள்ள தனியார் கட்டுமான நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். இந்த நிலையில், நாக சுப்பிரமணியன் அந்த பணியை முடிப்பதற்காக டெல்லி மத்திய நிதி அமைச்சகத்தில் இருந்து இணை செயலாளர் பேசுவது போல் காவல் ஆணையர் அலுவலகத்தில் உள்ள அதிகாரி ஒருவருக்கு போன் செய்துள்ளார். அதன் பின்பு, அந்த அதிகாரியிடம் அவர்,அந்த நிறுவனம் தொடர்பான வழக்கு ஒன்று நிலுவையில் உள்ளது. அதனை விரைந்து முடிக்குமாறு மிரட்டும் தொனியில் பேசி போனை துண்டித்து விட்டார்.

 

அதன் பின்னர், நாகசுப்பிரமணியன் ஆணையர் அலுவலகத்திற்கு நேரடியாக வந்து டெல்லியில் இருந்து ஐ.ஏ.எஸ் அதிகாரி அனுப்பியதாக தெரிவித்துள்ளார். ஆனால், மத்திய குற்றப்பிரிவு போலீஸார் சந்தேகமடைந்து நாகசுப்பிரமணியை விசாரித்துள்ளனர். மேலும், நாகசுப்பிரமணியன் எண்ணையும், டெல்லி ஐ.ஏ.எஸ் அதிகாரி எண்ணையும் சரியாக இருக்கிறதா? என்று சரிபார்த்துள்ளனர். அப்போது, நாகசுப்பிரமணியன் அதிகாரி போல் பேசியது காவல்துறையினருக்கு தெரியவந்தது. 

 

மேலும், ஆள்மாறாட்டத்தில் ஈடுபட்ட நாகசுப்பிரமணியனை மத்திய குற்றப்பிரிவு போலீஸார் கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர். அந்த விசாரணையில், நாகசுப்பிரமணியன் நிறுவனத்தின் வழக்கு ஒன்று மத்திய குற்றப்பிரிவில் நிலுவையில் உள்ளதாக கூறப்படுகிறது. நீண்ட நாட்களாக அந்த வழக்கு கிடப்பில் உள்ளதாக கூறப்படும் அந்த வழக்கை விரைந்து முடிக்க கட்டுமான நிறுவனம் இவரை நியமித்துள்ளது. அதனால், நாக சுப்பிரமணியன் அந்த பணியை முடிப்பதற்காக டெல்லி மத்திய நிதி அமைச்சகத்தில் இருந்து இணை செயலாளர் பேசுவது போல் காவல் ஆணையர் அலுவலகத்தில் பேசியுள்ளார் என்பது தெரியவந்தது.