Skip to main content

பூணூல் அறுப்பு விவகாரம்: 4 பேர் காவல்நிலையத்தில் சரண்!

Published on 07/03/2018 | Edited on 07/03/2018
dk


சென்னை திருவல்லிக்கேணியில் 4 பேரின் பூணூலை அறுத்ததாக திராவிடர் விடுதலை கழகத்தைச் சேர்ந்தவர்கள் 4 பேர் காவல்நிலையத்தில் சரணடைந்துள்ளனர்.

பெரியார் சிலையை உடைப்போம் என்று பதிவிட்ட பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜாவை கண்டித்து பல இடங்களில் கண்டன போராட்டங்கள் நடைப்பெற்று வருகின்றன. இந்நிலையில் இன்று காலை திருவல்லிக்கேணி பகுதியில் சாலையில் சென்று கொண்டிருந்தவர்களின் பூணூலை அடையாளம் தெரியாத நபர்கள் சிலர் அறுத்துச் சென்றதாக காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் கிடைத்தது.

அதனடிப்படையில் அங்கு விரைந்த ஐஸ் ஹவுஸ் காவல்துறையினர், சம்பவம் தொடர்பான விவரங்களைச் சேகரித்தனர். இதுதொடர்பாக யாரும் புகார் அளிக்காத நிலையில், அங்கிருந்த சிசிடிவி கேமரா காட்சிகளின் அடிப்படையில் விசாரணை நடைபெற்று வந்தது. இந்நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக திராவிடர் விடுதலை கழகத்தைச் சேர்ந்த நான்கு பேர், ராயப்பேட்டை காவல்நிலையத்தில் சரணடைந்துள்ளனர்.

சார்ந்த செய்திகள்

Next Story

தேர்தல் நடத்தை விதிகள்; சமயோசிதமாகச் செயல்பட்ட திராவிடர் கழகத்தினர்

Published on 18/03/2024 | Edited on 19/03/2024
Rules of Conduct for Elections Dravidar Kazhagam who worked strategically

பல்வேறு எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் நேற்று முன்தினம் (16.03.2024) நாட்டின் 18வது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டது. நாடு முழுவதும் மொத்தமாக ஏழு கட்டங்களாக இந்த தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. இந்த நாடாளுமன்றத் தேர்தலின் வாக்குப்பதிவு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதனையொட்டி அரசியல் கட்சிகள் கூட்டணி, தொகுதிப் பங்கீடு எனத் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது. அதே வேளையில் நாடு முழுவதும் தேர்தல் நடத்தை விதிகளைத் தேர்தல் ஆணையம் அமலுக்கு கொண்டு வந்துள்ளது.

இது குறித்த அறிவிப்பில், ‘சமூக வலைத்தளங்களில் அரசியல் கட்சியினர் பொறுப்புடன் நடந்துகொள்ள வேண்டும். ஆன்லைன் மூலம் வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா செய்வதைத் தடுக்க ஆன்லைன் பரிவர்த்தனையும் கண்காணிக்கப்படும். தேர்தல் ஆணையர்கள் உள்பட யாரை வேண்டுமானாலும் விமர்சனம் செய்யலாம். ஆனால், வதந்தி பரப்பக் கூடாது. மாலை, இரவு நேரங்களில் வங்கிகள் வாகனங்களில் பணம் எடுத்துச் செல்லத் தடை விதிக்கப்பட்டுள்ளது. முன்கூட்டியே அறிவிக்கப்படாத தனி விமானப் பயணங்கள் அனைத்தும் கண்காணிக்கப்படும். வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா செய்வதைத் தடுக்க கடும் நடவடிக்கை எடுக்கப்படும். தலைமைச் செயலகம் உள்ளிட்ட அரசு அலுவலகங்களில் உள்ள அரசியல் கட்சிகளின் தலைவர்கள் படங்கள் அகற்றப்பட வேண்டும்’ என்று தெரிவித்திருந்தது. அந்த வகையில் தேர்தல் நடத்தை அமலுக்கு வந்த பிறகு தேர்தல் ஆணையம், போலீசார் மற்றும் அரசு அதிகாரிகள் பல்வேறு அதிரடி நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

இந்நிலையில், தேர்தல் நடத்தை விதிகளைக் காரணமாக வைத்து திண்டுக்கல்லில் தந்தை பெரியாரின் சிலையைத் துணியைக் கொண்டு மறைத்துள்ளனர். இத்தகைய செயலுக்கு திராவிடர் கழகத்தினர் கடும் கண்டனத்தைத் தெரிவித்தனர். மேலும் திராவிடர் கழகத்தைச் சேர்ந்த கழக அமைப்பாளர் இரா. வீரபாண்டியன், திண்டுக்கல் மாவட்டத் தலைவர் ஆனந்த முனிராசன், திண்டுக்கல் மாவட்டச் செயலாளர் காஞ்சித்துரை ஆகியோர், கடந்த 2011 ஆம் ஆண்டு பிறப்பிக்கப்பட்ட சென்னை உயர் நீதிமன்ற உத்தரவின்படி பெரியாரின் சிலையை மூடக்கூடாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது என்ற உத்தரவின் நகலைக் காண்பித்து சிலை மூடப்பட்ட அரை மணி நேரத்தில் பெரியார் சிலை மீண்டும் திறக்க வைத்தனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பாகக் காணப்பட்டது.

Next Story

“80 நாட்களுக்குள் அரை டஜன் அமைச்சராவது சிறைக்குப் போவார்கள்” - எச்.ராஜா

Published on 04/02/2024 | Edited on 04/02/2024
Within 80 days at least half of the ministry from DMK will go to jail says H. Raja

தமிழகத்தில், பா.ஜ., கட்சி மீது, போலீசாரைக் கொண்டு, தி.மு.க., திட்டமிட்ட பழி வாங்கும் போக்கை கடைபிடிக்கிறது. அரசியல் ரீதியாக ஹிந்து விரோத அரசாகத் தான் செயல்படுகின்றனர் என பாஜகவை சேர்ந்த எச்.ராஜா தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக திருச்சியில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “தமிழக அரசும், போலீசும் அரசியல் பாரபட்ச நடவடிக்கையைக் நிறுத்த வேண்டும். இல்லாவிட்டால் நிறுத்த வைப்போம். பாரபட்ச நடவடிக்கையை கண்டித்து, பா.ஜ., கட்சி போராட வேண்டியிருக்கும். தேசிய கட்சியான பா.ஜ.,வுக்கு கூட்டணி பற்றி ஒரு வழிமுறை உள்ளது. அகில இந்திய தலைமை தான், அதை பற்றி முடிவு செய்யும்.   இந்த நடிகர் அரசியலுக்கு வந்தார் எம்.ஜி.ஆர்., ஆனாரா? அந்த நடிகர் அரசியலுக்கு வந்தார் எம்.ஜி.ஆர்., ஆனாரா? என்றெல்லாம் கேட்டு, அதற்கு நான் ஏதாவது சொல்லி, அது வைரலாக்க வேண்டாம்.   அரசியல் கட்சி துவங்கியுள்ள நடிகர் விஜய், அரசியல் நிலைப்பாடு எடுத்து, கருத்து சொல்லும் போது தான், சரியா, தவறா என்று அதைப் பற்றி சொல்ல முடியும்.

என்னுடைய கணிப்பு, வரும் 80 நாட்களுக்குள் அரை டஜன் அமைச்சராவது சிறைக்கு போவார்கள். அப்போது, அவர் சொல்லும் கருத்தை வைத்து, பேசிக் கொள்ளலாம்.   அரசியலை பொருத்தவரை, இவருக்கு ஓட்டுப் போடுங்கள், என்று எப்படி மறைமுகமாக சொல்ல முடியும்; அப்படி சொல்ல முடியாது.   புள்ளி வச்ச கூட்டணியில், ஒரு அங்கம் தானே மம்தா பேனர்ஜி. அதில் உள்ள முக்கிய புள்ளி, காங்கிரஸ் கட்சியால் 40 தொகுதிகளில் கூட வெற்றி பெற முடியாது, என்று சொல்லி இருக்கிறார். லோக்சபா தேர்தலில், பா.ஜ.கட்சி 400 ப்ளஸ் தொகுதிகளில் கண்டிப்பாக வெற்றி பெரும்.   ஒன்பது முறை முதல்வரான நிதிஷ்குமார், பெரும்பாலான காலகட்டத்தில், லல்லுவின் ‘ஜங்கல் ராஜ்’க்கு எதிராகத் தான் அரசியல் செய்திருக்கிறார்.

நாம் தமிழர் கட்சியினரிடம் சோதனை நடத்தியதில், துப்பாக்கி, வெடி பொருட்கள் போன்ற ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டதாக கூறுகின்றனர். இது ஆபத்தான விஷயம். அதனால், அது மிகுந்த எச்சரிக்கையாக இருக்க வேண்டும். யாருக்கு எதிராக பயன்படுத்த ஆயுதம் சேகரித்தனர், என்று தெரிய வேண்டியது அவசியம். சட்ட விரோத நடவடிக்கை எண்ணம் இல்லாமல், ஆயுதங்கள் சேகரிக்க மாட்டார்கள். அடிப்படை ஆதாரம் இல்லாமல், என்.ஐ.ஏ., சோதனை நடத்தாது.

தமிழக அரசியலில் வளரும் சக்தி பா.ஜ.கட்சி மட்டுமே. எதிர்காலத்தில் மிகப்பெரிய சக்தியாக உருவெடுக்கும். ஊழலும், உளறலும் மிகுந்திருப்பதால், தி.மு.க., அழியும் நிலைக்கு சென்று கொண்டிருக்கிறது.   வரும் லோக்சபா தேர்தலில், கிழக்கு மற்றும் தென் மாநிலங்களில் மக்களை திரட்டுவதற்கு, பா.ஜ.கட்சி பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகிறது.

அரசியலில் பல்வேறு விதமான கணக்குகள் இருக்கிறது. தே.மு.தி.க.,வை பொருத்தவரை, அ.தி.மு.க., பக்கம் போனதாக உறுதியான தகவல் வரவில்லை.   அரசியலமைப்பு சட்டப்படி, மாநிலங்களில் கவர்னர் பதவி இருக்கும். முடிவு எடுக்கும் இடத்தில் இல்லாத விடுதலை சிறுத்தைகள் எதிர்ப்பு தெரிவிப்பதற்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டியதில்லை.

தமிழகத்தில், சமீப காலமாக போதைப் பொருட்கள் அதிகம் புழக்கத்துக்கு காரணம், நம் நாட்டுக்கு வெளியே பயங்கரவாத அமைப்புகளை கட்டமைக்க விரும்புவதாக செய்தி வந்துள்ளது. மிகக் குறைந்த அளவில் தான் போதை பொருட்கள் பிடிபடுகின்றன. அதற்கு, தேச விரோத நடவடிக்கைகள் கட்டமைப்படுவதே காரணம். நாம் தமிழர் மீதான நடவடிக்கை கூட அது தொடர்பானது தான்” இவ்வாறு, அவர் தெரிவித்தார்.