Skip to main content

“காங்கிரசையும் கமல்ஹாசனையும் யார் நினைத்தாலும் பிரிக்க முடியாது” -  ஈ.வி.கே.எஸ். இளங்கோவன்

Published on 23/01/2023 | Edited on 23/01/2023

 

evks elangovan talk about kamalhaasan

 

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் காங்கிரஸ் சார்பாக போட்டியிடும் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசனை நேரில் சந்தித்து ஆதரவு கோரினார். அதன் பின் செய்தியாளர்களைச் சந்தித்த அவர்,  “கமலிடம் எங்களுக்கு ஆதரவு தர வேண்டும் என்று கேட்டோம். அவரும் நிர்வாகிகளுடன் கலந்து ஆலோசித்து ஒரு நல்ல முடிவை தெரிவிக்கிறோம் என்றார். கமலின் இரத்தத்தில் தேசியமும், காங்கிரஸும் கலந்த ஒன்று என்று எல்லாருக்கும் தெரியும். அவரது தந்தையார் காங்கிரஸில் தியாகியாக இருந்தவர். அதுமட்டுமல்லாமல், மறைந்த காமராசருக்கு நெருக்கமான நண்பராக இருந்தவர். ஆகவே காங்கிரஸையும், கமல்ஹாசனையும் யார் நினைத்தாலும் பிரிக்க முடியாது என்பதுதான் உண்மை. 

 

இடைத்தேர்தலில் கமல் கைகொடுப்பது மட்டுமல்ல கை சின்னத்திற்கு வாக்கும் சேகரிப்பார் என்று நான் முழுமையாக நம்புகிறேன். என்னுடைய மனதளவில் அவர் ஆதரவு கொடுத்துவிட்டதாக நினைக்கிறேன். ஆனால் அவர் வார்த்தை அளவில் நிர்வாகிகளை கலந்து ஆலோசித்து சொல்கிறேன் என்றார். அவர் எங்களை வரவேற்ற விதத்தில் இருந்தே உள்ள அன்போடு எங்களை அரவணைக்கும் நோக்கத்தில் இருந்தே புரிந்துகொள்ள முடிந்தது. 

 

நாங்கள் ஜனநாயக முறைப்படி எல்லாரையும் எங்களுக்கு வாக்களியுங்கள் என்று கேட்கிறோம். ஆனால் பாஜக கட்சிகளை மிரட்டி தங்களுடன் சேர்த்துக்கொள்கின்றனர். அப்படி நாங்கள் இல்லை. கொள்கை ரீதியாக ஆட்களை சந்தித்துக் கொண்டிருக்கிறோம். என்னை பொறுத்தவரையில் கமல்ஹாசன் மதச்சார்பின்மையில் நம்பிக்கை கொண்டவர் என்றும், அவருக்கு சாதி வித்தியாசம் கிடையாது என்றும் எனக்கு தெரியும். ஆகவே இந்த தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணிக்கு கமலின் ஆதரவு நிச்சயம் இருக்கும் என்று நம்புகிறோம். கடந்த தேர்தலில் மக்கள் நீதி மய்யம் 11 ஆயிரம் வாக்குகளைப் பெற்றிருக்கிறது. இது ஒன்றும் சாதாரணமல்ல. தனிமனிதனாக நின்று இந்த வாக்குகளை பெற்றிருக்கிறார் என்றால் மக்கள் மத்தியில் அவரது கட்சிக்கான செல்வாக்கை பிரதிபலிக்கிறது. 

 

 

சார்ந்த செய்திகள்