
வங்கக்கடலில் உருவான யாஷ் புயல், கடந்த 26 ஆம் தேதி ஒடிஷா மற்றும் மேற்குவங்கம் ஆகிய மாநிலங்களுக்கிடையே கரையை கடந்தது. இதனையொட்டி புயலால் பாதிக்கப்பட்ட இடங்களை பார்வையிட்ட பிரதமர் மோடி, ஒடிசா முதல்வர் மற்றும் அதிகாரிகளுடன் புயல் பாதிப்பு குறித்து ஆலோசனை நடத்தினார்.
இதனைத்தொடர்ந்து மேற்குவங்கம் சென்ற பிரதமர் மோடி, அம்மாநில முதல்வர் மம்தா மற்றும் அதிகாரிகளோடு ஆலோசனை நடத்துவதாக இருந்தது. இந்தநிலையில் மேற்குவங்க முதல்வர் மம்தாவும், மேற்குவங்க தலைமை செயலாளரும் 30 நிமிடங்கள் தாமதமாக ஆலோசனை கூட்டத்திற்கு வந்ததாகவும், வந்தவுடன் புயல் தாக்கம் குறித்த பேப்பர்களை வழங்கிவிட்டு வேறு கூட்டங்கள் இருப்பதாக கூறி உடனடியாக சென்றுவிட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. தொடர்ந்து மோடி சில அதிகாரிகளோடு மட்டும் ஆலோசனை நடத்தியாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்தநிலையில் பிரதமர் மோடி செய்த ஆய்வு தொடர்பாக பிரதமர் அலுவலகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் கூறப்பட்டுள்ளவை; ஒடிசாவின் பத்ராக் மற்றும் பலேஸ்வர் மாவட்டங்களிலும், மேற்கு வங்காளத்தின் பூர்பா மெடினிபூரிலும் புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் பிரதமர் மோடி வான்வெளி ஆய்வு மேற்கொண்டார். நடைபெற்று வரும் நிவாரண பணிகள் குறித்து புவனேஸ்வரில் நடைபெற்ற ஆய்வு கூட்டத்திற்கு பிரதமர் மோடி தலைமை தாங்கினார். புயல் காரணமாக ஒடிசாவில் அதிக சேதம் ஏற்பட்டுள்ளது என்றும், மேற்கு வங்கம் மற்றும் ஜார்க்கண்டின் சில பகுதிகளும் பாதிக்கப்பட்டுள்ளன என்றும் பிரதமருக்கு விளக்கப்பட்டது. பிரதமர் மோடி, உடனடி நிவாரண பணிகளுக்காக ரூ .1000 கோடி நிதி உதவியை அறிவித்துள்ளார். இதில் ஒடிசாவுக்கு உடனடியாக ரூ .500 கோடி வழங்கப்படும். மேற்கு வங்கம் மற்றும் ஜார்க்கண்டிற்கு அறிவிக்கப்பட்டுள்ள 500 கோடி, சேதத்தின் அடிப்படையில் அளிக்கப்படும்.
சேதத்தின் அளவை மதிப்பிட மத்திய அரசு, மத்திய மந்திரிகள் அடங்கிய குழுவை அமைக்கும். அக்குழு மாநிலங்களுக்குச் சென்று ஆய்வு செய்யும். அதனடிப்படையில் மேலும் உதவி வழங்கப்படும். இந்த கடினமான நேரத்தில் மாநில அரசுகளுடன் மத்திய அரசு நெருக்கமாக செயல்படும் என்று ஒடிசா, மேற்கு வங்கம் மற்றும் ஜார்க்கண்ட் ஆகிய மாநிலங்களுக்கு பிரதமர் உறுதியளித்தார். பிரதமர் புயல் காரணமாக பாதிக்கப்பட்ட அனைவருக்கும் தனது ஆதரவை வெளிப்படுத்தினார் மேலும் இந்த பேரழிவின் போது உறவினர்களை இழந்த குடும்பங்களுக்கு ஆழ்ந்த வருத்தத்தை தெரிவித்தார். இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு 2 லட்சமும், பலத்த காயமடைந்தவர்களுக்கு 50 ஆயிரமும் நிவாரணமாக அவர் அறிவித்தார்.