
துருக்கியில் காஸியண்டெப் நகரில் கடந்த 6 ஆம் தேதி இந்திய நேரப்படி அதிகாலை 4.17 மணிக்கு ரிக்டர் அளவுகோலில் 7.8 ஆக பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. அதன் பிறகு பிற்பகலில் எல்பிஸ்டான் பகுதியில் 7.5 ரிக்டர் அளவில் மேலும் ஒரு நிலநடுக்கமும், 3வது முறையாக 6.0 ரிக்டர் அளவில் நிலநடுக்கமும் ஏற்பட்டன. நிலநடுக்கத்தில் அடுக்குமாடிக் குடியிருப்புகள் சரிந்ததால் குடியிருப்புகளில் சிக்கியிருந்தவர்களை மீட்கும் பணிகள் தொடர்ந்து நடந்து வருகிறது. நிலநடுக்கப் பாதிப்பில் துருக்கி, சிரியாவில் உயிரிழந்தோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே உள்ளது. இதுவரை மொத்த உயிரிழப்பு 34 ஆயிரத்தைக் கடந்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
இதனைத் தொடர்ந்து இந்தியாவிலும் நிலநடுக்கம் ஏற்பட வாய்ப்பு இருப்பதாகக் கூறப்பட்ட நிலையில் நேற்று வடகிழக்கு மாநிலமான அசாமில் நிலநடுக்கம் உணரப்பட்டது. இந்நிலையில் இன்று அதிகாலை 4.15 மணியளவில் மற்றொரு மாநிலமான சிக்கிமில் லேசான நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது. சிக்கிமின் யுக்சோம் பகுதியிலிருந்து 70 கி.மீ தூரத்தில் ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 4.3 ஆகப் பதிவானது. இந்த நிலநடுக்கம் காரணமாக எந்தவித உயிர்ச்சேதமோ பொருள் சேதமோ ஏற்படவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் நிலநடுக்கத்தின் காரணமாகப் பொதுமக்கள் தங்களது வீடுகளை விட்டு சாலையில் தஞ்சமடைந்துள்ளனர்.