Skip to main content

சர்தார்ஜிகள் சூழ் டெல்லி! என்ன நடக்கிறது தலைநகரில்..?

Published on 30/11/2020 | Edited on 30/11/2020

 

delhi chalo

 

'டெல்லி சலோ' என்கிற விவசாயிகளின் போராட்டமானது இன்றுடன் ஐந்தாவது நாளை எட்டியுள்ளது. பஞ்சாபிலிருந்து சிறு சிறு விவசாயச் சங்கங்களைச் சேர்ந்த விவாசாயிகளுடன் டெல்லியை நோக்கிய தங்களின் டிராக்டர், பைக், லாரிகளில் பேரணியைத் தொடங்கியவர்களை ஹரியானா எல்லைப் பகுதியில் நிறுத்திய போலீஸார், அவர்களை தடுத்து நிறுத்த தடியடி போன்ற வன்முறைகளைக் கையாண்டனர். பொதுவாகவே பலசாலிகள், எதற்கும் துணிந்தவர்கள் என்று சொல்லப்படும் சர்தார்ஜிகளோ, தடைகளையும், இரும்பு வேலிகளையும் உடைத்தெறிந்து டெல்லி எல்லையில் கால்பதித்தனர். விவசாயிகள் அதிகமானோர் டெல்லியில் கூடுவார்கள் என்று அஞ்சிய மத்திய அரசாங்கமோ டெல்லிக்கு வர இருந்த ரயில்களை அப்படியே பாதிவழியில் நிறுத்தியது. சில ரயில்களை ரத்து செய்தும் விட்டது. இருந்தபோதிலும் டெல்லிக்குள் நுழைய இருக்கும் சாலை எல்லையைப் பயன்படுத்தி விவசாயிகள் படையெடுத்து வந்து குவிகின்றனர்.

 

ஹரியானா, ராஜஸ்தான், உ.பி-யிலிருந்து விவசாயிகள் அணிதிரண்டு வந்திருந்தாலும் பஞ்சாபைச் சேர்ந்த விவசாயிகள்தான் அதிகமாக இதில் கலந்துகொண்டுள்ளனர். இரண்டாம் நாள், ஹரியானா வழியாக டெல்லியை அடைந்த விவசாயிகளை தண்ணீர் பீய்ச்சியும், கண்ணீர்ப் புகைக் குண்டு வீசியும், லத்தி ஆகிய ஆயுதங்களுடனும் போலீஸ், இராணுவ வீரர்கள் வரவேற்றனர். எங்கு பார்த்தாலும் தடைக்கற்கள், இரும்பு முள் வேலிகளை வைத்து எல்லைப் பகுதிகளை அடைத்திருந்தனர். ஆனால், கூட்டம் கூட்டமாக வந்த விவசாயிகளோ, போலீஸிடம் மல்லுக்கட்டி, தடைக்குப் பயன்படுத்திய வேலிகளை மீறி உள்ளே சென்றுகொண்டே இருந்தனர். இதனால், டெல்லி முழுவதும் பதற்றச் சூழலாகவே இதுவரை இருக்கிறது. 

 

டெல்லியைச் சுற்றி, நெடுஞ்சாலைகளில் தேனி கூட்டத்தைப் போல விவசாயிகள் கொத்துக் கொத்தாக நிற்கின்றனர். ஒரு பக்கம் சிவப்புக் கொடிகள் பிடித்துக் கூட்டம் இருக்கிறது. மற்றொரு பக்கம் பச்சை, வேறொரு பக்கம் மஞ்சள் என்று கலர்கலராகக் கொடிகள் அசைந்த வண்ணம் காட்சியளிக்கிறது இந்தியத் தலைநகரின் எல்லை. அதேபோல பெரும்பாலும் சர்தார்ஜிகள் இந்த விவசாயப் போராட்டத்தில் கலந்து கொண்டிருக்கிறார்கள் என்பதைப் பல நிறங்களில் டர்பன்கள் உலாவுவதைப் பார்க்கும்போது புரிகிறது. சீக்கியர்கள் அதிகம் கலந்துகொண்டிருப்பதால், சில வலதுசாரி அமைப்புகள் தங்கள் பங்குக்கு "டெல்லியைச் சுற்றி காளிஸ்தான் ஆதரவு பெற்றவர்கள் இப்போராட்டத்தில் கலந்துகொண்டுள்ளனர், இதனால் ஆபத்து அதிகம்" என்று சமூக வலைதளங்களில் பதிவுகளைப் பறக்கவிடத் தொடங்கிவிட்டனர்.  

 

ஏற்கனவே டெல்லி மக்கள் நச்சுப் புகை, டிராஃபிக், கரோனா என்று புலம்பிக்கொண்டிருக்கும் நிலையில், விவசாயிகளின் இந்த வலுவான போராட்டத்தால் டெல்லிவாழ் மக்களின் அன்றாட வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. டெல்லி மக்கள் அவர்கள் பக்கம் உள்ள நியாத்தைச் சொல்லி புலம்பி வருகின்றனர். இந்தப் பக்கம் விவசாயிகள் தங்களின் பக்கம் நியாயத்தைக் கூறி பேரணியாகத் திரண்டு வருகின்றனர். அதனால் இதற்கு விரைவில் டெல்லியில் இருக்கும் பிரதமர் அலுவலகம்தான் எட்டிப் பார்த்து நியாயம் தரவேண்டும். வழக்கமான விவசாயிகளின் போராட்டம் போல இருந்துவிடும், எதாவது ஒரு அதிகாரியை அனுப்பி பேச்சுவார்த்தை மூலம் பிரச்சனையை முடித்துவிடலாம் என்று கணக்குப் போட்டவர்களை ஏமாற்றும் வகையில், விவசாயிகள் கூட்டம் கூட்டமாக வருவது மட்டுமல்லாமல் டெல்லியில் முகாமிட்டுப் போராட்டத்தை நடத்த திட்டமிட்டுக் கிளம்பியுள்ளனர். அவர்களுக்கு ஒரு மாதத்திற்குத் தேவையான சமையல் பொருட்கள், கோதுமை மாவு, விறகு, போர்வை, உடை என்று முழு திட்டத்துடன் வந்து இறங்கியுள்ளனர். போராட்டத்தில் கலந்துகொண்டுள்ள விவசாயிகளில் பெரும்பாலானோர் 'புராரி' மைதானத்தில் முகாமிட்டுள்ளனர். அங்குதான் சமைத்து உண்டு, உறங்கி, தங்களின் கோஷங்களைக் கர்ஜித்து வருகின்றனர். 

 

cnc

 

‘தர்தி மாதா கி ஜெய்’ போன்ற கோஷங்களை எழுப்பி வருகின்றனர். ‘ஹம் ஹோங்கே காம்யாப்’ போன்ற தேசப்பற்று பாடல்களையும் ஒலிக்கவிடுகின்றனர். சில முதிய விவசாயிகள் இளைஞர்களுக்காக சப்பாத்தி மாவைப் பிசைந்து உருட்டி, தீயில் வாட்டி, காய்கறிகளை நருக்கி சமைத்துக் கொடுக்க, அருகிலேயே தார்ப்பாயை விரித்து, இரண்டு வரிசைகளாக அமர்ந்து உணவைச் சாப்பிட, அங்கு ஒரு லங்காரையே அமைத்துவிட்டனர் சர்தார்ஜிக்கள். மத்திய அரசு எவ்வளவு காலம் வேண்டுமானாலும் காத்திருக்க வைக்கலாம் என்கிற எண்ணம் இருந்ததாலோ என்னவோ, இப்படி எல்லாத்திற்கும் ரெடியாக வந்திருக்கிறார்கள் விவசாயிகள். 

 

இதற்குப் பின்னால் விவசாயிகள் இல்லை, பின்னணியில் அரசியல்வாதிகள்தான் இருக்கிறார்கள் என்றும் ஒருபக்கம் இந்தப் போராட்டத்தை விமர்சிக்கிறார்கள். எனினும், கொத்தாக இருக்கும் விவசாயிகள் கூட்டத்தில் ஒரு பகுதி, ‘சாஹே குச் பி கர்லோ ஹும் பதே ஜாயேங்கே’ என்று ஒருசேர ஒருமனதாகக் குரலெழுப்புகின்றனர். அதாவது 'என்ன தடை வந்தாலும், நாங்கள் வளர்வோம்' என்பது பொருளாகும். மற்றொரு பக்கம் வழக்கமான தைரியத்துடன் ‘இன்குலாப் ஜிந்தாபாத்’ எனக் குரலெழுப்பும் சர்தார்ஜிகள். இப்படி லட்சக்கணக்கான விவசாயிகளின் கோஷங்களுக்கு மத்தியில் டெல்லி ஆம் ஆத்மீ அரசின் விருந்தோம்பலும், கரோனா விழிப்புணர்வும் போராட்டக் களத்தினூடே சுற்றிவர, சர்தார்கள் சூழ் நிலமாக மாறியுள்ளது டெல்லி.  

 

 

 

Next Story

டெல்லி மேயர் தேர்தல் ரத்து; பா.ஜ.க.வுக்கு எதிராக ஆம் ஆத்மி ஆர்ப்பாட்டம்

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
 Aam Aadmi struggle for Canceled Delhi Mayoral Election

18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக கடந்த 19ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது. இதன் ஒரு பகுதியாக நாடு முழுவதும் 13 மாநிலங்களில் உள்ள 87 மக்களவைத் தொகுதிகளில் இன்று (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.

இதற்கிடையில், டெல்லி மேயர் மற்றும் துணை மேயரைத் தேர்வு செய்வதற்கான தேர்தல் இன்று (26-04-24) நடைபெற இருந்த நிலையில், திடீரென ரத்து செய்யப்பட்டுள்ளது. இதற்கு ஆம் ஆத்மி கட்சியினர் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

டெல்லி மாநிலத்தில் மொத்தம் 250 கவுன்சிலர்கள் உள்ளனர். டெல்லியில் உள்ள மேயரைத் தேர்ந்தெடுக்க 10 எம்.பி.க்கள், 14 எம்.எல்.ஏ.க்கள் மற்றும் 250 கவுன்சிலர்கள் 274 வாக்காளர்கள் வாக்களிப்பார்கள். இதில் மேயர் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளருக்கு அதிகபட்சமாக 138 வாக்குகள் தேவை. அந்த வகையில், ஆம் ஆத்மி கட்சிக்கு, காங்கிரஸ் கவுன்சிலர்கள் மற்றும் சுயேட்சை கவுன்சிலர்கள் உட்பட 151க்கும் மேற்பட்ட வாக்குகள் கிடைக்கப்பெற இருந்தது. இதனால், டெல்லி மேயர் தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி வெற்றி வாய்ப்பு அதிகமாக இருந்தது.

இந்த நிலையில், டெல்லி மேயர் தேர்தலை ஆளுநர் அலுவலகம் ரத்து செய்யப்படவுள்ளதாக டெல்லி மாநகராட்சி அறிவித்துள்ளது. இது குறித்து தெரிவிக்கையில், ‘தலைமை அதிகாரி நியமிக்கப்படாததால் டெல்லி மேயர் தேர்தல் தள்ளி வைக்கப்படுகிறது; எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு ஆம் ஆத்மி கடும் கண்டனம் தெரிவித்து மேயர் சபையில் போராட்டம் நடத்தி வருகின்றது.

இது குறித்து ஆம் ஆத்மி எம்.பி சஞ்சய் சிங் கூறுகையில், “ பட்டியலின சமூகத்தைத் தடுக்க இவர்கள் சதி செய்கிறார்கள். இந்த முறை, பட்டியலின சமூகத்தைச் சேர்ந்தவர்தான் டெல்லி எம்சிடியின் மேயராக வர இருந்தது. ஆனால் தேர்தலை ரத்து செய்ததன் மூலம், அவர் தனது பட்டியலின விரோத மனநிலை மற்றும் அரசியலமைப்புச் சட்டத்தை சிதைத்ததற்கு மற்றொரு சான்றைக் கொடுத்துள்ளனர்” எனப் பேசினார். தற்போது மேயர் ஷெல்லி ஓபராயின் பதவிக்காலம் மார்ச் 31-ஆம் தேதியுடன் முடிவடைந்த நிலையில் புதிய மேயர் தேர்ந்தெடுக்கப்படும் வரை அவர் பதவியில் நீடிப்பார் என்று கூறப்பட்டுள்ளது. 

Next Story

“இதை செய்ய சொன்னால் இந்தியாவை விட்டு வெளியேறுவோம்” - வாட்ஸ் அப் எச்சரிக்கை!

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
 WhatsApp warning May have to leave India

உலகம் முழுவதும் உள்ள கோடிக்கணக்கான மக்கள் உபயோகிக்கும் செயலி தான் வாட்ஸ் அப். இந்த செயலி மூலம், தகவல்களை பரிமாறவும், இணைய சேவை மூலம் எந்தவித கட்டணமுமின்றி வீடியோ கால், ஆடியோ கால் போன்றவற்றை பயன்படுத்தவும் முடியும். மேலும், புகைப்படங்கள், வீடியோக்கள், ஸ்டிக்கர்கள் என அனைத்து விதமான பரிமாற்றங்களையும் இந்த செயலி மூலம் அனுப்பக்கூடிய வசதிகள் உண்டு. இந்த செயலியை உபயோகிக்காத மக்கள் மிகவும் சொற்பமாக தான் இருக்க முடியும் என்றுதான் கூற வேண்டும். 

இதற்கிடையில் வாட்ஸ் அப் பயனர்களின் வசதிகளுக்கு ஏற்றவாறு வாட்ஸ் அப் நிறுவனம் அவ்வப்போது புதிய அப்டேட்களை அறிமுகப்படுத்தி வருகிறது. அந்த வகையில், இந்த செயலி மூலம் பயனர் ஒருவருக்கு அனுப்பும் செய்திகளை மூன்றாம் நபர்கள் பார்க்க முடியாதவாறு எண்டு டு எண்டு என்கிரிப்ஷன் ( End to End Encryption) முறையை கொண்டு வந்தது. இதனைப் பயன்படுத்தி பயனர்கள், தாங்கள் அனுப்பும் செய்திகளை பாதுகாத்து கொள்ளலாம். இதனால், தனிப்பட்ட ஒருவரின் செய்திகள் பாதுகாக்கப்படும் என்று கூறப்படுகிறது. 

இந்த நிலையில், கடந்த 2021ஆம் ஆண்டு இந்தியாவில் தகவல் தொழில்நுட்ப சட்டங்களில் மத்திய அரசு புதிய மாற்றத்தை கொண்டு வந்தது. மத்திய அரசு கொண்டு வந்த அந்த சட்டத்தில் கூறியதாவது, போலி செய்திகளையும், நாட்டின் பாதுகாப்பு காரணங்களுக்காகவும் தவறான செய்தி பகிர்வுகளை கண்டறிய வேண்டும். இதனால், வாட்ஸ் அப், பேஸ்புக் போன்ற செய்தி பகிர்வு செயலி வாயிலாக பகிரப்படும் அனைத்து செய்திகளும் சேமிக்கப்பட வேண்டும் என்று கூறப்பட்டது.

இதனை எதிர்த்து வாட்ஸ் அப், பேஸ் புக் ஆகிய நிறுவனங்கள் டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இது தொடர்பான வழக்கு நேற்று (25-04-24) டெல்லி உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது, மத்திய அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர் கூறுகையில், ‘வாட்ஸ் அப் எண்டு டு எண்ட் என்கிரிப்ஷன் காரணமாக போலி செய்திகளை கண்டறிவதில் சிக்கல் ஏற்படுகிறது. மேலும், இது போலி செய்திகளால் நாட்டில் நிலவும் அமைதி மற்றும் ஒற்றுமையை சீர்குலைத்துவிடும்’ என வாதிட்டார். 

இதனையடுத்து, வாட்ஸ் அப் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் தேஜஸ் காரியா, “இந்த சட்டத்தை அமல்படுத்துவதால் நாங்கள் ஒரு முழுமையான சங்கிலியை வைத்திருக்க வேண்டும். மேலும், மில்லியன் கணக்கான செய்திகளை பல ஆண்டுகளாக சேமிக்க வேண்டும் நிலை உருவாகும். உலகில் எந்த நாட்டிலும் இது போன்ற சட்டங்கள் இல்லை.  இது போன்ற சட்டங்களை கொண்டு வந்து  என்கிரிப்ஷனை எடுக்க சொன்னால் வாட்ஸ்அப் இந்தியாவை விட்டு செல்ல வேண்டி இருக்கும்” எனத் தெரிவித்தார். இருதரப்பு வாதங்களை கேட்ட நீதிபதிகள், இது தொடர்பான வழக்கை ஒத்திவைத்தனர்.