Skip to main content

முத்து எனக்கு முதல் பாடல் எழுதிய நினைவு... - சீமான்

Published on 12/07/2018 | Edited on 12/07/2018

நா.முத்துக்குமாரை தமிழ் திரையுலகுக்கு அறிமுகப்படுத்தியவரும் அவர் மீது மிகுந்த அன்பு கொண்டவருமான 'நாம் தமிழர் கட்சி'யின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், முன்பு முத்துக்குமார் குறித்த நினைவுகளைப் பகிர்ந்தது...

 

na.muthukumar seeman



பச்சையப்பன் கல்லூரியில் தமிழ் இலக்கியம் படித்துக்கொண்டிருக்கும் காலகட்டத்திலேயே எங்களோடு நெருக்கமானவன் முத்து. அறிவுமதியின் அறையில் நாங்களெல்லாம் ஒன்றுகூடுவோம். அந்த சமயத்தில் வந்த இலக்கியங்கள், பாடல்கள் குறித்து அக்குவேறு ஆணி வேறாக அலசுவான். அவனது தந்தை தமிழாசிரியர் என்பதால் இலக்கிய ஆர்வம் சிறிய வயதிலேயே அவனுக்கு அதிகமிருந்தது. "பட்டாம்பூச்சி விற்பவன்' கவிதைத் தொகுப்பு அவனுக்கு பலரின் பாராட்டுதல்களைப் பெற்றுத் தந்தது. அதேபோல அவன் எழுதிய தூர் கவிதையை இலக்கியக் கூட்டம் ஒன்றில் எழுத்தாளர் சுஜாதா சிலாகித்துப் பேச, அனைவரின் கவனத்தையும் ஈர்த்ததோடு பெரிய தாக்கத்தையும் ஏற்படுத்தியது அந்த கவிதை. கவியரங்க மேடைகளிலும் இலக்கியக் கூட்டங்களிலும் கலந்துகொண்டு தன் கவிதைகளால் பலரின் கவனத்தையும் இளம் வயதிலேயே ஈர்த்தவன் முத்து.

ஒரு கட்டத்தில் அவனை தனது உதவி இயக்குநராக சேர்த்துக்கொண்டார் பாலுமகேந்திரா. அவனது கனவு இயக்குநர் ஆவதுதான் என்பது பல பேருக்கு தெரியாது. பாலுமகேந்திரா அழைக்கிறார் என்கிற விசயத்தை முதன் முதலிலில் எங்களிடம்தான் பகிர்ந்துகொண்டான் முத்து. அவரிடம் 4 வருடங்கள் உதவி இயக்குநராக பணிபுரிந்தான். அறிவுமதி அறையும் எனது வீடும்தான் முத்துவுக்கு எப்போதும் வேடந்தாங்கல். கல்லூரிவிட்டதும் அவன் நேராக வருவது என்னுடைய வீடு அல்லது அறிவுமதியின் அறையாகத்தான் இருக்கும். ஐந்துகோவிலான், சீனு ராமசாமி எல்லோரும் ஒன்றாகத்தான் இருந்தோம். ஒன்றாகவேதான் சமைத்துச் சாப்பிடுவோம். அப்படி ஒரு நெருக்கமான உறவும் நட்பும் கலந்தது அது.

 

 


அப்படி ஓடிக்கொண்டிருந்த நாட்களில், 'வீரநடை' படத்தை இயக்கிக் கொண்டிருக்கிறேன். அந்த சமயத்தில் ஒருமுறை எல்லோரும் சேர்ந்து சமைத்து சாப்பிட்டுக் கொண்டிருக்கும்போது, "முத்து, இந்த படத்துல பாட்டு எழுதேன்" என நான் சொல்ல, "வேணாம்னே" என அவன் சொல்ல, "இல்லை இல்லை நீ எழுதறே" என எல்லாரும் வலிலியுறுத்தினோம். சரி என ஒப்புக்கொண்டதும் பாட்டுக்கான சூழலை சொன்னேன். ஒரு சாதாரணமான கிராமத்துப் பொண்ணு. அவளுக்கு பல விசயங்களில் பிரமிப்பு இருக்கும், பல விசயங்கள் புடிச்சிருக்கும். அவளுக்கு என்ன என்ன புடிக்கும்ங்கிற மாதிரி பாட்டு வரிகள் இருக்கணும்னு சொன்னேன். அவன் பெயரிலேயே பாட்டை ஆரம்பிச்சான் தம்பி. "முத்து முத்தா பூத்திருக்கும் முல்லைப் பூவ புடிச்சிருக்கு" என்கிற அந்த பாட்டு எல்லோரையும் கவர்ந்தது. பாட்டு முழுக்க ஹைக்கூ படிமத்திலேயே எழுதியிருப்பான். மிகவும் ரசனையாக இருக்கும் அந்த படிமம். 'காதல் தோல்விதானோ ஆட்டுத்தாடி புடிச்சிருக்கு, நட்சத்திரம் கால் பதிக்கும் வாத்துக்கூட்டம் புடிச்சிருக்கு' என போகும் அந்தப் பாடலின் வரிகள். இந்தப் பாடலை எந்த நேரமும் எல்லோரும் பாடிக்கொண்டே இருப்போம். இசையமைப்பாளர் தேவாவிடம் ஒருமுறை பாடிக்காட்டியபோது மெய்சிலிர்த்துப்போனார்.
 

 

muthu yuvan seeman



அடுத்தடுத்து, இயக்குநர்கள் வசந்த், ரவிக்குமார், செல்வராகவன், வசந்தபாலன் என பலரும் வாய்ப்புகளைத் தர, புகழ் ஏணியின் உச்சத்துக்கு விரைந்து சென்றான் முத்து. பல பாடல்கள் அவனுக்கு தனித்த அடையாளத்தைத் தந்தன. மிக மிக எளிய நடையில் அவன் எழுதிய 'தேவதையை கண்டேன் காதலில் விழுந்தேன்', 'அவள் அப்படி ஒன்றும் அழகில்லை', 'பூக்கள் பூக்கும் தருணம்', 'கண் பேசும் வார்த்தைகள்', 'நினைத்து நினைத்துப் பார்த்தேன்', 'முதல் மழை எனை நனைத்ததே', 'உனக்கென இருப்பேன்', 'முன் பனியா முதல் மழையா', 'அனல் மேலே பனித்துளி' போன்ற நூற்றுக்கணக்கான பாடல்கள் நவீன காதலின் அடையாளமாக இருக்கின்றன.

 

 

ஒவ்வொரு பாடல் எழுதி முடித்ததும், அதை என்னிடம் வாசித்துக் காட்டி, 'எப்படிண்ணே  இருக்கு?' என என் கருத்தை கேட்பதில் அவனுக்கொரு ஆனந்தம். புகழின் உச்சிக்கு அவன் சென்றுகொண்டிருந்த போதும், ஒரு முறைகூட அவனுக்கு தலைக்கனம் ஏற்பட்டதில்லை. பாட்டெழுதி எவ்வளவு சம்பாதித்தாலும் முடிந்த அளவு மற்றவருக்கு உதவுவதில் அவனிடம் சலிப்பை பார்த்ததில்லை. மற்றவர்களுக்கு உதவி செய்வதில் மன நிறைவு அடையற மனுசன் அவன். கணக்குப் பார்த்து உதவுபவன் அல்ல. உதவியதை திருப்பிக் கேட்கும் பழக்கமும் அவனிடத்தில் இருந்ததில்லை. அப்படியொரு உயர்ந்த பண்பாட்டிற்கு சொந்தக்காரனாக இருந்தான். ஆடம்பர வாழ்க்கையை வெறுத்தவன். வாசிப்புப்பழக்கம் அவனை எப்போதும் ஆக்ரமித்திருக்கும். உலக இலக்கியங்கள், உலகத் திரைப்படங்கள் குறித்து அவனது பார்வை வேறுவிதமாக இருக்கும். அவைகளை படித்து என்னிடம் விவாதிக்கும் போதும் தர்க்கம்புரியும்போதும் தமிழ் இலக்கியங்கள் மீது அவனுக்கிருந்த அசைக்க முடியாத காதலை புரிந்துகொள்ள முடிந்தது.
 

தனது ஒவ்வொரு பிறந்தநாளின்போதும், நான் ஊரில் இருந்தால் நேரில் வந்து வாழ்த்துப்பெற்றுச் செல்வான். ஊரில் இல்லையெனில், தொலைபேசியில் தொடர்பு கொண்டு வாழ்த்துப்பெறுவான். அவனது இந்த பிறந்தநாளில் அவன் இல்லை என நினைக்கிறபோதே வார்த்தைகளால் விவரிக்கமுடியாத தக்கை ஒன்று, தொண்டையை அடைத்துக்கொள்கிறது. 

 

 

 

 

Next Story

2024 மக்களவை தேர்தல்; ஓய்ந்தது பிரச்சாரம்

Published on 17/04/2024 | Edited on 17/04/2024
2024 Lok Sabha Elections; The campaign is over

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி, முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தமிழகத்தில் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதில் இருந்து தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. தமிழகத்தில் அரசியல் கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்து பிரச்சாரங்கள் சூடு பறக்க நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், இன்று தேர்தல் பிரச்சாரத்திற்கான கடைசி நாள் என்பதால் அனைத்துக் கட்சிகளும் இறுதிக்கட்ட பிரச்சாரத்தில் இறங்கியது. திமுக சார்பில் மு.க.ஸ்டாலின்  பெசன்ட் நகரிலும், அதிமுக சார்பில் எடப்பாடி பழனிசாமி சேலத்திலும், நாம் தமிழர் கட்சியின் சீமான் சென்னையிலும், விசிகவின் திருமாவளவன் சிதம்பரத்திலும், பாமகவின் அன்புமணி ராமதாஸ் தர்மபுரியிலும் இறுதிக்கட்ட பிரச்சாரம் செய்த நிலையில் தற்போது தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 2024 மக்களவை தேர்தலுக்கான அனல் பறக்கும் பிரச்சாரம் ஒரு வழியாக ஓய்ந்தது. பிரச்சாரம் முடிவடைந்ததால் வாக்கு சேகரிப்பு தொடர்பான எந்தப் பரப்புரைக்கும் அனுமதி இல்லை. அதேபோல தொகுதிக்குச் சம்பந்தம் இல்லாத நபர்கள் ஆறு மணியோடு வெளியேற வேண்டும் என்பது நடைமுறை. நாளை மறுநாள் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. 

Next Story

“தி.மு.க. அரசு தொடர்ந்து வேண்டாத வேலைகளில் ஈடுபட்டு வருகிறது” - சீமான் பிரச்சாரம்

Published on 16/04/2024 | Edited on 16/04/2024
 D.M.K. Govt continues to engage in unnecessary work says Seeman campaign

கடலூர் நாடளுமன்ற தொகுதியில்,  நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர் மணிவாசகத்தை ஆதரித்து கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர் சீமான் வடலூரில் நேற்று பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், “வள்ளலார் 1867ஆம் ஆண்டு ஏற்றி வைத்த அணையா அடுப்பு இன்று வரை பசிப்பிணியை போக்கி வருகிறது. வள்ளலார் சத்திய ஞான சபை பெருவெளியில் 10 லட்சம் முதல் 15 லட்சம் மக்கள் வரை நின்று வழிபட்டு வருகின்றனர். அந்த இடத்தில் திராவிட மாடல் அரசு, தோண்டி சர்வதேச மையம் அமைக்கப் போகிறது. திடீரென தி.மு.க. அரசிற்கு வள்ளலார் மீது என்ன கரிசனம். இதற்கு முன் இவர்கள் ஆட்சி செய்தார்கள்

அப்போதெல்லாம் வள்ளலாரை  தெரியவில்லையா? காரணம் இந்த சர்வதேச மையம் அமைக்க ரூ100 கோடி நிதி ஒதுக்கி, முதல்வர் ஸ்டாலின் மைத்துனர் பொறுப்பாளராக உள்ளார். சர்வதேச மையம் அமைப்பது மகிழ்ச்சி தான். ஆனால், அதனை மக்கள் கூடி வழிபடும் பெருவெளியில் அமைக்கக்கூடாது வேறு இடத்தில்  அமைத்துக் கொள்ளலாம். தேர்தல் நேரத்தில் இதனை ஏன் செய்ய வேண்டும். இன்னும் இரண்டு நாட்கள் பரப்பரை முடிந்தவுடன் இவர்கள் எப்படி தோண்டுகிறார்கள் என பார்ப்போம் .

ஏர்போர்ட் வேண்டாம் அந்த இடத்தில் விவசாயம் செய்ய வேண்டும் என்று கூறினால் ஏர்போர்ட் கட்டுவோம் என கூறுகின்றனர். இயற்கை துறைமுகங்கள் இருக்க செயற்கை துறை முகங்கள் ஏன் எனக் கேட்டால் 1111 ஏக்கரில் செயற்கை துறைமுகம் கட்டுவோம் என கூறுகின்றனர். ஏற்கெனவே வ .உ .சி., காமராஜர் பெயரில் இருக்கும் இரண்டு துறைமுகங்களில் 50 சதவீதம் வேலை இல்லாத போது செயற்கை துறைமுகம் எதற்கு? தொடர்ந்து வேண்டாத வேலைகளில் திராவிட மடல் அரசு ஈடுபட்டு வருகிறது.

சர்வதேச சமயத்தை பெருவழியில் அமைக்க வேண்டாம். அரசில் தொடர்ந்து நீங்களே நீடிக்கப் போவதில்லை. சர்வதேச  மையத்தை  பெருவெளியில் அமைத்தால் மீண்டும் பழையபடி அந்த இடத்தில் மக்கள் வழிபடும் நிலைக்கு கொண்டு வரும் வீண் செலவை எங்களுக்கு வைக்காதீர்கள்.  திருவண்ணாமலையில் சிப்காட் வேண்டாம் என மக்கள் போராட்டம் நடத்தினால் அதை அமைச்சர் எ.வ.வேலு மூலம் மீண்டும் கொண்டுவர முயற்சி செய்கின்றார். தில்லியில் போராடிய விவசாயிகளை மீது துப்பாக்கி சூடு நடத்துகிறது மோடி அரசு.

தமிழகத்தில் போராடும் மக்கள் மீது குண்டர் சட்டத்தை போட்டு அடக்குமுறையை கையாளுகிறது தி.மு.க. அரசு. இந்த இரண்டு அரசுகளுக்கும் எந்த வேறுபாடும் இல்லை. இந்தியாவில் 60 ஆண்டுகளாக காங்கிரஸ் ,பி.ஜே.பி. தான் தொடர்ந்து ஆண்டு வருகிறது. கல்வியில் தரம் உயர்ந்திருக்கிறதா? குடிநீருக்கு வழியுள்ளதா? மருத்துவ கட்டமைப்பு உயர்ந்துள்ளதா? எதுவும் இல்லை. மக்கள் துன்பம், துயரம், பசி, பட்டினி, வேலையில்லா திண்டாட்டம் என தொடர்ந்து வருகிறது.

மாற்றம், முன்னேற்றம் எதுவுமே இல்லை. இது ஒரு மாற்றத்தை கொண்டு வருவதற்கான தேர்தல். நீங்கள் சிந்தித்து வாக்களிக்க வேண்டும். கடந்த முறை 39 தொகுதியிலும் தி.மு.க. கூட்டணி வெற்றி பெற்றது. ஏதாவது மாற்றத்தை கொண்டு வந்தார்களா. இந்த தொகுதியில் படித்தவர், ஓய்வு பெற்ற தலைமையாசிரியர், ஆசிரியர் சங்கத் தலைவராக இருந்தவர் மணிவாசகம்  வேட்பாளராக இருக்கிறார். சிந்தித்துப் பார்த்து  அவருக்கு மைக் சின்னத்தில் வாக்களிக்க வேண்டும்” என்றார்.

நாம் தமிழர் கட்சி தொகுதி தலைவர் ராமச்சந்திரன், மாவட்ட நிர்வாகி சீனிவாசன், சுமதி உட்பட பலர் கலந்து கொண்டனர்