Skip to main content

திவ்யா சத்யராஜின் மகிழ்மதி இயக்கம்!

Published on 02/08/2020 | Edited on 02/08/2020

 

திவ்யா சத்யராஜ் மக்களிடம் நன்கு அறிமுகமான ஊட்டச்சத்து நிபுணர். தற்போது கரோனா ஊரடங்கு காரணமாகப் பெரும் இழப்புகளைச் சந்தித்த விவசாயிகளுக்கு நேரடி நஷ்ட ஈடு வழங்க வேண்டும் என்று சமீபத்தில் விவசாய அமைச்சரிடம் திவ்யா கேட்டுக் கொண்டார். 

 

திவ்யா சத்யராஜ் 'மகிழ்மதி' என்ற இயக்கத்தை ஆரம்பித்திருக்கிறார் “இந்தியாவில் ஓர் ஆண்டின் கணக்கின்படி பத்து மில்லியன் திருமணங்கள் நடைப்பெறுகின்றன. அந்தத் திருமண விழாக்களில் பரிமாறப்படும் முப்பது விழுக்காடு உணவு வீணாகின்றன. உணவும் ஊட்டச்சத்தும் வசதியுள்ளவர்களுக்கு மட்டும்தான் என்பது நியாயம் இல்லை. வறுமைக்கோட்டிற்குக் கீழ் உள்ள குடும்பத்தினரும், குழந்தைகளும் கரோனா போன்ற தொற்றுக்களில் இருந்து பாதுகாக்கப்பட வேண்டுமாயின் அவர்களுக்கும் நோய் எதிர்ப்பு சக்தி தரக்கூடிய உணவு தேவை.

 

'மகிழ்மதி இயக்கம் அரசியல் கட்சியோ, சாதி, மதம் சார்ந்த அமைப்போ கிடையாது. வறுமை கோட்டிற்கு கீழ் இருக்கும் பகுதிகளில் ஊட்டச்சத்து நிறைந்த உணவை இலவசமாக வழங்க உருவாக்கப்பட்ட ஓர் இயக்கம். கரோனா ஊரடங்கு நேரத்தில் வேலைகளுக்குச் செல்ல முடியாமல் வறுமையில் வாடும் குடும்பங்களுக்குத் தரமான உணவு வழங்குகிறோம். கரோனா நேரத்தில் மட்டும் இல்லாமல் தொடர்ந்து நலத்திட்ட உதவிகளை இவ்வியக்கம் மேற்கொள்ளும்.

 

'மகிழ்மதி இயக்கம்' என் கனவு. என் இயக்கத்திற்கு ஒரு நல்ல தமிழ்ப்பெயர் வைக்க வேண்டும் என்று யோசித்தபோது, மகிழ்மதி என்ற பெயர் தோன்றியது. என் அம்மா பெயர் மகேஸ்வரி அவர் பெயரின் முதல் பாதியை என் இயக்கத்தின் பெயரில் இணைக்க வேண்டும் என்பது என் ஆசை''. கரோனா காலத்தில் வறுமையில் உள்ளவர்களுக்கு உதவ முன்வந்துள்ள திவ்யா சத்யராஜ்க்கு பாராட்டு குவிகின்றன.