Skip to main content

பா.ரஞ்சித் மீதான விமர்சனங்கள்! - படைப்பு ரீதியா பகையுணர்வா?

Published on 10/05/2018 | Edited on 10/05/2018

நடிகர் ரஜினிகாந்த் - இயக்குனர் ரஞ்சித் கூட்டணியில் வெளிவர இருக்கும் இரண்டாவது படம் காலா. மும்பை வாழ் தமிழ் மக்களின்  வாழ்வியலை பின்னணியாகக் கொண்டு உருவாக்கப்படும் இந்தப் படம் கபாலி ஏற்படுத்திய தாக்கத்தினாலும் நானா படேகர், ஹுமா குரேஷி போன்ற பிரபல ஹிந்தி நடிகர்கள் இடம் பெற்றிருப்பதாலும் இந்திய அளவில் பெரிதாக எதிர்பார்க்கப்படுகிறது. 

 

kaala ranjith



மேலும் தற்போது ஒடுக்கப்பட்டவர்களுக்கு எதிராக செயல்படும் மோடி தலைமையிலான இந்திய அரசு ஆட்சியில் இருக்கும் சூழலில், ரஞ்சித்தின் அடுத்த படத்திற்கு அவர் ரசிகர்கள் ஆவலாக காத்திருக்கின்றனர். தன் அரசியல் நிலைப்பாட்டினாலும், சாதி முறையினையும்  அடித்தட்டு மக்கள் மீது அதன் விளைவுகளையும் பற்றி  அடிக்கடி கேள்வி கேட்பதாலும் கபாலி படம் வெளியான நேரத்திலிருந்தே இயக்குனர் ரஞ்சித் படைப்பைத் தாண்டி சாதி ரீதியாகவும் பலவகையான தாக்குதல்களுக்கு உள்ளாகியுள்ளார். இந்த நிலையில் ரஞ்சித்தின் அடையாள அரசியலும், ஒடுக்கப்பட்டவர்களுக்கான சிந்தனையும் வலுவாக இடம் பெற்றிருக்கும் காலா திரைப்படத்தின் பாடல்கள் இணையத்தில் பல முரண்பாடான விமர்சனங்களுக்கு மத்தியில் வெளியாகியுள்ளன. ’காலா படத்தின் பாடல்கள் அமைதியை சீர்குலைக்கும் வகையில் இருந்தால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்‘ என அதிமுக  அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார். 

குத்து, ராப், ஹிப்-ஹாப், மெலடி வகைகள் என 9 பாடல்கள் உள்ளடங்கியுள்ளது காலாவின் ஆல்பம். மும்பை தாராவி பகுதியை சார்ந்த 'டோப்அடெலிக்ஸ்' (dopeadelicz) என்னும் குழுவினரும் இயக்குனர் ரஞ்சித்தினால் சில மாதங்கள் முன்பு ஒன்று சேர்க்கப்பட்ட  'தி கேஸ்ட்லெஸ் கலெக்டிவ்' (The Casteless Collective) இசைக் குழுவும் இப்படத்தில் பாடியிருப்பது குறிப்பிடத்தக்கது. சிலர் பாடல்களின்  உயிரோட்டமான ஒலி அமைப்பையும், வரிகளையும்  பாராட்ட, பிறர் பாடல்கள் எதிர்பார்த்த அளவில் பாதியளவு கூட  இல்லை என ஏமாற்றம் அடைந்துள்ளனர். 

 

ranjith directs rajnikanth


 

 


மேலும் சிலரோ, 'பாடல்களை விமர்சனம் செய்தால் சாதி வெறியன் என முத்திரை குத்தி விடுவார்கள்' என பகடி செய்து வருகின்றனர். இது, கடந்த சில நாட்களாகவே, அதாவது காலா படத்தின் டீஸர் வெளியான சமயத்தில் இருந்தே வைக்கப்படும் கேலி. எல்லா நகைச்சுவையும் ஒருவித உயர்வு  மனப்பான்மையின் வெளிப்பாடு  என்பது கிரேக்க தத்துவவாதி அரிஸ்டோட்டலின் கூற்று . இது எல்லா இடங்களில் பொருந்தாவிட்டாலும் இங்கே கனகச்சிதமாய் பொருந்தும். ரஞ்சித்தின் கலை முயற்சிகளை அவரவர் மதிப்பீட்டினை அளவுகோலாக வைத்து கேலியோ விமர்சனமோ செய்வது வேறு, அவர் கலைப் படைப்பின் மீதுள்ள தங்கள் மதிப்பீட்டினை காரணம் காட்டி அவரின் சமூக நிலைப்பாட்டையும் அவர் எழுப்பும் எதிர்க்குரலையும் கேலி செய்வது வேறு . 

  pa.ranjith on stage



இங்கே வெளிப்படும் அரிஸ்டாட்டில் கூறும் உயர்வு மனப்பான்மை சாதி தருவது. இந்த நகைச்சுவை தற்கால தமிழ் சூழலில் ரஞ்சித்தின்  முக்கியத்துவத்தையும் அவர் பேசும் அரசியலையும் சிறுமைப்படுத்தும் முயற்சி. தெரிந்தோ தெரியாமலோ தன் கலையையும் அரசியலையும் பிரித்துப்பார்க்க முடியாத ஒரு கட்டத்திற்கு இப்பொழுது ரஞ்சித் வந்துவிட்டார். அவர் சினிமா வாழ்வில் நிகழும் ஒவ்வொரு சறுக்கலும் அவர் அரசியல் பேச நினைக்கும் குரலினை நசுக்க பயன்படுத்தப்படும். 

 

 


இந்தியாவின் மிகப்பெரிய சூப்பர்ஸ்டாரை இரண்டாவது முறையாக இயக்கும் வாய்ப்பு ரஞ்சித்திற்கு அவரது படைப்புத்திறன் மூலமாக  கிடைத்துள்ளது. தனக்குக் கிடைக்கும் வாய்ப்புக்களைப் பயன்படுத்தி, முடிந்த அளவு ஒடுக்கப்பட்டவர்களுக்கான அரசியலை பேசிவரும் அவர், இந்த விமர்சனங்களையும் தன் படங்களின் வெற்றி மூலம் கடந்து, தான் பேச நினைப்பதை தன் கலையின் வாயிலாக பேசி, தான் குரல் கொடுக்க நினைக்கும் மக்களின் குரலாக ஒலிப்பார் என எதிர்பார்ப்போம்.  

 

 

 

Next Story

“அப்போதான் இளையராசான்னு பேரை கேக்கிறேன்” - நினைவலைகளைப் பகிர்ந்த சேரன்

Published on 21/03/2024 | Edited on 21/03/2024
Cheran shared his memories about ilayaraja

இசையமைப்பாளர் இளையராஜாவின் வாழ்க்கை வரலாறு திரைப்படமாக உருவாகிறது. கனெக்ட் மீடியா, பி.கே. ப்ரைம் புரடக்‌ஷன் மற்றும் மெர்குரி மூவிஸ் என மூன்று நிறுவனங்கள் இணைந்து பிரம்மாண்ட பொருட்செலவில் தயாரிக்கும் இப்படத்தில், இளையராஜா கதாபாத்திரத்தில் தனுஷ் நடிக்கவுள்ளார். இளையராஜா எனத் தலைப்பு வைக்கப்பட்டுள்ள இப்படம் தமிழ், மலையாளம், தெலுங்கு உள்ளிட்ட 5 மொழிகளில் வெளியாகவுள்ளது. அறிவிப்பு போஸ்டர் வெளியாகி பலரது கவனத்தை ஈர்த்து வருகிறது.

ராக்கி, சாணிக் காயிதம், கேப்டன் மில்லர் ஆகிய படங்களை இயக்கிய இயக்குநர் அருண் மாதேஷ்வரன் இயக்கும் இப்படத்தின் தொடக்க விழா நேற்று சென்னையில் நடைபெற்றது. இந்த விழாவில், கமல்ஹாசன், தனுஷ், இளையராஜா, பாரதிராஜா, வெற்றிமாறன், அருண் மாதேஷ்வரன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். இளையராஜா கதாபாத்திரத்தில் நடிக்கவிருக்கும் தனுஷ் புகைப்படம் கொண்ட போஸ்டரை கமல்ஹாசன் வெளியிட்டு வாழ்த்து தெரிவித்தார். 

இளையராஜாவின் வாழ்க்கை வரலாற்றை திரைப்படமாக உருவாக்குவதற்கு பலரும் தங்களது மகிழ்ச்சியை தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் இயக்குநர் சேரன், தன்னுடைய நினைவலைகளைப் பகிரிந்து வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் தனது எக்ஸ் தளத்தில் கூறியதாவது, “சின்ன வயசுல ஊர்ல நாடகம் போட்டா முதல்ல போடுற பாட்டு மச்சானை பாத்தீங்களா தான்.. படம் அன்னக்கிளி. அப்போதான் இளையராசான்னு பேரை கேக்கிறேன். புதுப்பய பாட்டு போட்டிருக்கான்னு எங்க ஊரு பெரியவங்க சொல்றாங்க.

அப்பறம் கறுப்பு வெள்ளைல போட்டோ பாக்குறேன். ஒருத்தர் மீசை இல்லாம ஹிப்பி ஸ்டைல், பாபி காலர் சட்டைல அழகா சிரிக்கிறார். அவர் மேல பிரியம் வருது. (அவர்கூட பின்னாளில் பணிபுரிய போறேன்னு அப்போ தெரியாது). எனக்கு பிடிச்ச சிவாஜிக்கு பாட்டு போடுறாரு. தியாகம் படம். தேன் மல்லிப்பூவேன்னு... படம் வெறித்தனமா ஓடுது. ராசா பாட்டுத்தான் காரணம்னு சொல்றாக. அந்த ராசா அப்போ எப்படிலாம் இருந்திருப்பார்னு 2025ல பாக்க போறோம். சினிமா மட்டுமே பார்வையாளனுக்கு நினைக்க முடியாத ஆச்சரியங்களை தரும். இளையராஜா அவர்களின் வாழ்க்கை சிறப்பை படமாக்க முயன்றிருக்கும் தனுஷ் மற்றும் படக்குழுவினருக்கு வாழ்த்துகள். ஒரு சாமானியனின் வெற்றியாய் வளரட்டும். இளையராஜா வரலாறு...” என்று பதிவிட்டுள்ளார். 

Next Story

“இரு மொழிப் பிரச்சனை; நிச்சயமா இந்த படம் விவாதத்தை உருவாக்கும்” - பா. ரஞ்சித்

Published on 12/03/2024 | Edited on 12/03/2024
pa.ranjith speech in gv prakash rebel movie audio launch

ஸ்டூடியோ கிரீன் தயாரிப்பில் ஜி.வி. பிரகாஷ் நடிப்பில் அறிமுக இயக்குநர் நிகேஷ் ஆர்.எஸ். இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ரெபல். இப்படத்தில் ஜி.வி. பிரகாஷுக்கு ஜோடியாக மமிதா பைஜு நடிக்க கருணாஸ், வெங்கடேஷ்.விபி, ஷாலு ரஹீம் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். ஜி.வி. பிரகாஷே இசைப் பணிகளையும் கவனித்துள்ளார். இப்படத்தின் டீசர் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் வெளியான நிலையில், ட்ரைல்ர் நேற்று வெளியாகி பலரது கவனத்தை ஈர்த்தது. உண்மைச் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ள இப்படம் மார்ச் 22 ஆம் தேதி திரைக்கு வருகிறது. இதையொட்டி பத்திரிகையாளர்களைச் சந்தித்தது படக்குழு. இதில் படக்குழுவினரோடு இயக்குநர் மற்றும் தயாரிப்பாளர் பா. ரஞ்சித் கலந்து கொண்டுள்ளார்.  

அவர் பேசுகையில், “இப்படத்தின் விஷுவல், டிரெய்லர், எடிட்டிங் எல்லாமே மிக நன்றாக இருக்கிறது. முல்லைப் பெரியாறு பகுதியில் இரு மாநிலங்கள் கலக்கும் பகுதியில் அங்குள்ள பிரச்சனையைப் பேசும் பின்னணியில் இந்தக் கதையை செட் செய்துள்ளார்கள். வாழ்த்துகள். ஜிவியை எனக்கு தங்கலான் மூலமாகத்தான் பழக்கம். எல்லோரும் அவரை நல்ல மனிதன் எனச் சொல்வார்கள். ஆனால் நேரில் பழகிய பிறகு தான் தெரிந்தது, மிக மிக நல்ல மனம் கொண்ட மனிதர். அவர் இன்னும் நிறைய ஜெயிக்க வேண்டும். நிறைய பேருக்கு நல்லது செய்ய வேண்டும். தயாரிப்பாளர் ஞானவேல் பலரது வாழ்வில் மிக முக்கியமான மனிதராக இருந்துள்ளார். என் வாழ்வில் அவர் முக்கியமானவராக இருந்துள்ளார்.

இந்தப் படத்தில் நிறைய முக்கியமான மனிதர்கள் பங்கேற்றுள்ளார்கள். எல்லோருக்கும் என் வாழ்த்துகள். இன்றைய சினிமாவில் சின்ன படங்களைக் கொண்டு சேர்ப்பது என்பது மிகக் கஷ்டமாகத்தான் இருக்கிறது. என்னைப் போன்ற தயாரிப்பாளர்களுக்கு ஏதோ ஒரு பலம் இருக்கிறது. அதன் மூலம் தியேட்டருக்கு கொண்டு வந்துவிடுகிறோம். ஆனால் கஷ்டப்படுகிற சின்ன படங்களை தியேட்டரில் ரிலீஸ் செய்ய உதவுகிறார் சக்தி பிலிம் சக்திவேலன். அவர் தொடர்ந்து நல்ல படங்களை மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும். இப்போது ஜெ. பேபி படம் வணிக ரீதியாக வெற்றியா என கேட்டால் அதில் சந்தேகம் இருக்கத்தான் செய்கிறது. படம் பார்த்தவர்களுக்கு எல்லாருக்குமே பிடித்திருந்தது. நிறைய பேர் கொண்டாடுறாங்க. அதை பார்க்கும்போது வணிக ரீதியாக வெற்றியை விட ஒரு படம் முக்கியமானதாக பார்க்கப்படும் போது படத்தில் பணியாற்றியவர்களுக்கு இன்னொரு வாழ்க்கை ஆரம்பிக்கும். இது போலத்தான் அட்டகத்தி எனக்கு ஆரம்பித்தது. 

ஒரு தயாரிப்பாளராக ஆக வேண்டும் என்ற நோக்கத்தில், நான் இந்த துறைக்கு வரவில்லை. எனக்கென்று சில வேலைகள் இருந்தது, அதை செய்ய வேண்டுமென்ற நோக்கத்தோடு தான் வந்தேன். அதன் பிறகு தயாரிப்பு பொறுப்பு வந்தவுடன் ரசித்து தான் பணியாற்றுகிறேன். ஒவ்வொரு கதைகளிலும் சரி, கதாபாத்திரங்களிலும் சரி, அனைத்திலும் என்னுடைய தலையீடுகள் இருக்கும். ஆனால் அது இயக்குநருக்கு பாதிப்பு ஏற்படாமல் தேவையான விஷயத்தை ஆதரிக்கிற வகையில் இருக்கும். நிகேஷ் இப்படத்தில் இரு மொழிப் பிரச்சனையைக்  கவனமுடன் பேசியிருப்பார் என நம்புகிறேன். நிச்சயமா இந்த படம் ஒரு விவாதத்தை உருவாக்கும் என நினைக்கிறேன். அந்த விவாதம் சரியான இடத்தை நோக்கி நகர வேண்டும் என நினைக்கிறேன்” என்றார்.