Skip to main content

வேலையில்லாமல் பட்டினி... ஆட்டிறைச்சி வியாபாரிகள், தொழிலாளர்களின் வேதனை குரல்கள்...!!  

Published on 06/07/2020 | Edited on 06/07/2020
Mutton hall chennai

 

 

சென்னை பெரம்பூரில் மாநகராட்சி ஆட்டிறைச்சிக் கூடம் கரோனா தொற்று காரணமாக, 100 நாட்களையும் தாண்டி திறக்கப்படாததால், இந்த இறைச்சி கூடத்தை நம்பி உள்ள ஆயிரக்கணக்கானவர்கள் நூறு நாட்களையும் தாண்டி ஒரு வேளை சாப்பாட்டுக்கே கஷ்டப்படுகிறார்கள், பல நாட்கள் பட்டினிக் கிடக்கிறார்கள் என்கின்றனர் அங்குள்ள வியாபாரிகள்.

 

சென்னை ஆட்டிறைச்சி மொத்த வியாபாரிகள் சங்கத்தின் தலைவர் சபீர் அகமது மற்றும் செயலாளர் கோவிந்தராஜ் ஆகியோரை சந்தித்தோம். 

 

அவர்கள் நம்மிடம், “கரோனா தொற்று பரவக்கூடாது என்பதற்காக மார்ச் 22ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை ஒரு நாள் ஊரடங்கு நடத்தினார்கள், அன்று விடுமுறை அளித்தோம். மார்ச் 25ல் இருந்து ஏப்ரல் 14 வரை ஊரடங்கு. அந்த நேரத்தில் இறைச்சி கூடத்தை மூடச் சொல்லி எங்களை கேட்கவில்லை, நாங்களாக முன் வந்து 15 நாட்கள் இறைச்சிக் கூடத்தை மூடினோம். அதற்கு பிறகு ஏப்ரல் 26ஆம் தேதியில் இருந்து இன்று வரை திறக்கவில்லை. கரோனா தொற்று பரவக்கூடாது என்பதற்காக ஊரடங்கு தொடங்கும்போது, நாங்களாகவே 15 நாட்கள் கடைகளை மூடி வைத்திருந்தோம். தொடர் ஊரடங்கால் 100 நாட்களையும் தாண்டி கடைகள் மூடப்பட்டுள்ளது. 

 

ஆட்டிறைச்சிக் கடைகளில் 700க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் உள்ளனர். மாட்டிறைச்சி கூடங்களில் 300க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் உள்ளனர். மேலும் இந்த இறைச்சி கடைகளை நம்பி ரிக்க்ஷா ஓட்டுநர்கள், ஆட்டோ ஓட்டுநர்கள், சுமை தூக்குபவர்கள், வெளியூரில் இருந்து ஆடு கொண்டுவருபவர்கள் உள்ளனர். இது இல்லாமல் 3,242 ஆட்டிரைச்சி கடைகளுக்கு சென்னை மாநகராட்சி லைசென்ஸ் கொடுத்துள்ளது. இதில் 90 சதவீத இறைச்சி கடைகளுக்கு இங்கிருந்துதான் இறைச்சி செல்கிறது. மாட்டிறைச்சியை பொறுத்தவரை நூறு சதவீதம் இங்கிருந்துதான் செல்கிறது. சைதாப்பேட்டை போன்ற இடங்களில் 40, 50 ஆடுகள் அறுக்கும் கூடங்கள் உள்ளன. அது அந்தந்த பகுதிகளுக்கு தேவைக்கு பயன்படும். ஆயிரக்கணக்கான ஆடுகளை அறுக்க வேண்டுமென்றால் இங்குதான் வர வேண்டும். அந்த அளவுக்கு வசதிகளும், தொழிலாளர்களும் உள்ள இடம் இது. 

 

தினந்தோறும் அதிகாலை மூன்றரை மணிக்கு வரும் தொழிலாளர்கள், வேலை முடிந்துதான் செல்வார்கள். அனைவரும் தினக்கூலித் தொழிலாளர்கள். இந்த தொழிலாளர்கள் அனைவரும் பொருளாதாரத்தில் மிகவும் பின்தங்கியவர்கள். 

 

ஆயிரக்கணக்கான தொழிலாளர்களையும், வியாபாரிகளையும், சில்லரை வியாபாரிகளையும் காப்பாற்ற உடனடியாக இந்த இறைச்சி கூடங்களை திறக்க அனுமதிக்க வேண்டும். எங்களின் வாழ்வாதாரத்தை காப்பாற்ற வேண்டும். 

 

 

chennai

 

கரோனா காலத்தில் அதற்கான வழிமுறைகள் என்னென்ன என்று சொல்லுங்கள், அதனை நாங்கள் பின்பற்றுகிறோம். முக கவசம் அணிவது, கையுறை அணிவது, மாநகராட்சி என்னென்ன சொல்கிறதோ அதனை முழுமையாக கடைப்பிடிக்கிறோம் என நாங்கள் எழுத்துப்பூர்வமாக மனு கொடுத்துவிட்டோம். 

 

மண்டல அலுவலகத்திற்கு போனால், 'எங்களுக்கு அதிகாரம் இல்லை' என்கிறார்கள். மண்டல இணை ஆணையர் அலுவலகத்திற்கு சென்றால் 'உங்கள் மனுவை மேலிடத்திற்கு அனுப்பியிருக்கிறோம், அதற்கான அதிகாரம் எங்களுக்கு இல்லை' என்கிறார்கள். இந்த இறைச்சி கூடத்திற்கு பொறுப்பாக இருக்கக்கூடிய விஓ,  'எங்களுக்கு அதிகாரம் இல்லை, கமிஷ்னர் தான் ஆர்டர் போடணும்' என்கிறார்கள். 

 

 

chennai

                                  ஆட்டிறைச்சி மொத்த வியாபாரிகள் சங்கத்தின் தலைவர் சபீர் அகமது

 

கமிஷ்னர் அலுவலகத்திற்கும் சென்றோம். அங்கும் பேச்சுவார்த்தை நடத்தினோம். இங்குள்ள கடைகளை இரண்டு பகுதியாக பிரித்து, பாதி வியாபாரிகளையும், பாதி தொழிலளார்களை ஒரு நாள் வேலை செய்ய விடுவது, மறுநாள் அந்த கடைகளுக்கும் தொழிலாளர்களுக்கும் விடுமுறைவிட செய்து, மீதி பாதி வியாபாரிகளையும், பாதி தொழிலளார்களை அடுத்த நாளில் பணி செய்ய விடலாம், இதுபோன்ற சுழற்றி முறையில் செய்தால் கூட்டத்தை கட்டுப்படுத்தலாம், அதிக கூட்டம் கூடாது என்றோம். 

 

நாங்களே முன்வந்து இன்னொன்றும் சொன்னோம். ஞாயிற்றுக்கிழமைதான் எங்களுக்கு வியாபாரமே. அந்த ஞாயிற்றுக்கிழமைகளில் நாங்கள் விடுமுறை விட்டுவிடுகிறோம் என்று சொன்னோம். அரசு கடந்த ஒரு மாதமாகத்தான் ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு என சொல்கிறது. ஞாயிற்றுக்கிழமைகளில் நாங்கள் கடைகளை மூடுகிறோம் என கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பே ஆணையர், இணை ஆணையர் அவர்களுக்கு எழுத்துப்பூர்வமாக மனுவாக கொடுத்திருக்கிறோம். 

 

mmmm

 

இது இல்லாமல் நாங்களே ஒரு குழு அமைத்திருக்கிறோம். அந்த குழுவினர், கடைக்கு வருபவர்கள் மற்றும் கடையில் உள்ளவர்களை சமூக இடைவெளியை கடைப்பிடிப்பது, மாஸ்க் அணிவது, கையுறை அணிவதை கடைப்பிடிக்கிறார்களா, கடைப்பிடிக்கவில்லை என்றால் கடைப்பிடிக்க அவர்கள் அறிவுறுத்துவார்கள் என்பதையும் எழுத்துப்பூர்வமாக மனுவாக கொடுத்திருக்கிறோம். அதிகாரிகள் எதற்கும் பதில் அளிக்கவில்லை. 

 

கடைசியாக பேச்சுவார்த்தையில் இறைச்சிக் கூடத்திற்கு பொறுப்பாக இருக்கக்கூடிய விஓ, பாதி கடைகளை திறந்து, பாதி தொழிலாளர்களை வைத்து இறைச்சி கூடத்தை நடத்தலாம் என்றார். அதற்கும் நாங்கள் ஒப்புக்கொண்டோம். 

 

மாநகராட்சி ஆணையரை நாங்கள் நான்கு முறை சந்திக்க சென்றோம். ஒவ்வொரு முறையும் இரண்டு மணி நேரம், இரண்டு மணி நேரம் என உட்கார்ந்து காத்திருந்தோம். விசிட்டிங் கார்டு வாங்கிக்கொள்கிறார்களேயொழிய மாநகராட்சி ஆணையரை சந்திக்க முடியவில்லை. எங்களை சந்திக்காமல் நிராகரித்துவிட்டார். என்ன காரணத்திற்காக சந்திக்காமல் நிராகரிக்கிறார் என தெரியவில்லை. ஒரு நிமிஷம் எங்களை சந்தித்து, என்ன காரணத்திற்காக இறைச்சிக் கூடம் திறக்கவில்லை. எப்போது திறப்போம், என்ன திட்டம், யோசனை ஏதாவது தெரிவிக்கலாம். எந்த பதிலும் அளிக்கவில்லை. எந்த அறிக்கையும் அளிக்கவில்லை. இதுதான் எங்களுக்கு மிகப்பெரிய வருத்தமாக இருக்கிறது.

 

118 ஆண்டுகள் பழமை வாய்ந்த இறைச்சிக் கூடம் ஆங்கிலேயர் காலத்தில் பெரம்பூரில் 1903ம் ஆண்டு திறக்கப்பட்டது. இந்த இறைச்சிக்கூடத்தில் தலைமுறை தலைமுறையாக பணியாற்றி வருகிறார்கள். இந்த இறைச்சிக் கூடத்தை நம்பி உள்ள ஆயிரக்கணக்கானவர்கள், நூறு நாட்களையும் தாண்டி ஒரு வேளை சாப்பாட்டுக்கே கஷ்டப்படுகிறார்கள். பட்டிணிக் கிடக்கிறார்கள். அத்தனைப் பேரும் அன்றாடம் சம்பாதித்து சாப்பிடக்கூடிய தொழிலாளர்கள். சில்லரை வியாபாரியும் தினக்கூலித் தொழிலாளர்களைப் போலத்தான். 

 

இன்று காலை தொழிலாளர்கள், வியாபாரிகள் எல்லாம் ஒன்று கூடி எங்களுக்கு ஏதாவது பதில் சொல்லுங்கள் என்றோம். இந்த ஏரியாவின் இந்த ஜோனல் எக்ஸ்கியூடிவ் இன்ஜினீயர், புளியந்தோப்பு காவல் ஆய்வாளர், துணை ஆய்வாளர் வந்திருந்தார்கள். மாலைக்குள் அதிகாரிகளுடன் பேசி முடிவை சொல்கிறோம். கலைந்து செல்லுங்கள் என கேட்டுக்கொண்டார்கள். நாங்களும் கலைந்து சென்றோம். நல்ல முடிவு வரும் என எதிர்பார்க்கிறோம்'' என்றனர் நம்பிக்கையுடன். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

சென்னையில் ஒரு வருடத்திற்கு போக்குவரத்து மாற்றம்!

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
Traffic change in Chennai for a year

சென்னை தெற்கு உஸ்மான் சாலை முதல் வடக்கு உஸ்மான் சாலை வரை மேம்பாலம் கட்டுமானப் பணி துவங்க உள்ளதால் நாளை (27.04.2024) முதல் அடுத்த ஆண்டு ஏப்ரல் 26 ஆம் தேதி (26.04.2025) வரை போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

இது குறித்து சென்னை பெருநகர போக்குவரத்து காவல் துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பில், “மேட்லி சந்திப்பு தெற்கு உஸ்மான் சாலை முதல் வடக்கு உஸ்மான் சாலை வரை மேம்பாலம் கட்டுமானப் பணி துவங்க உள்ளதால் 27.04.2024 முதல் 26.04.2025 வரை ஒரு வருடத்திற்கு போக்குவரத்து மாற்றுப்பாதைகளில் செயல்படுத்தப்படுகிறது. அதன்படி வடக்கு உஸ்மான் சாலையில் இருந்து தி.நகர் பேருந்து நிலையம் நோக்கி வரும் வாகனங்கள் பனகல் பார்க் அருகில் உள்ள உஸ்மான் சாலை மேம்பாலத்தில் செல்லத் தடை செய்யப்பட்டுள்ளது. அதற்கு பதிலாக வாகனங்கள் மேம்பாலத்தின் அனுகு (சர்வீஸ் ரோடு) சாலை வழியாக சென்று பிரகாசம் சாலை, பாஷ்யம் சாலை, தியாகராயர் சாலை, பர்கிட் சாலை வழியாக தி.நகர் பேருந்து நிலையத்தை அடையலாம். 

Traffic change in Chennai for a year

பர்கிட் சாலை, மூப்பாரப்பன் தெரு சந்திப்பில் இருந்து மேட்லி நோக்கி செல்வதற்கு பேருந்துகள் மட்டும் அனுமதிக்கப்படும். மற்ற வாகனங்கள் மூப்பாரப்பன் தெரு, மூசா தெரு, தெற்கு தண்டபானி தெரு, மன்னார் தெரு வழியாக உஸ்மான் சாலை மூலம் தி.நகர் பேருந்து நிலையத்தை அடையலாம். தி. நகர் பேருந்து நிலையத்திலிருந்து சைதாப்பேட்டை அண்ணா சாலையை அடைய தெற்கு உஸ்மான் சாலை சென்று கண்ணம்மாபேட்டை சந்திப்பை அடைந்து தென்மேற்கு போக் சாலையில் சென்று சிஐடி நகர் நான்காவது பிரதான சாலை, சிஐடி நகர் மூன்றாவது பிரதான சாலை சென்று அண்ணா சாலையை அடையலாம். 

Traffic change in Chennai for a year

சிஐடி நகர் 1ஆவது பிரதான சாலையிலிருந்து வடக்கு உஸ்மான் சாலைக்குச் செல்லும் வாகனங்கள் கண்ணம்மாபேட்டை சந்திப்பில் தென்மேற்கு போக் சாலை வழியாகச் சென்று வெங்கட் நாராயணா சாலையில் சென்று நாகேஸ்வரன் ராவ் சாலை வழியாக வடக்கு உஸ்மான் சாலையை அடையலாம். தி.நகர் பேருந்து நிலையத்திலிருந்து வடக்கு உஸ்மான் சாலையை அடைய மேட்லி ரவுண்டானாவில் இருந்து பர்கிட் ரோடு சென்று வெங்கட் நாராயண சாலை வழியாக நாகேஸ்வர ராவ் சாலையில் இடதுபுறம் திரும்பி வடக்கு உஸ்மான் சாலையை அடையலாம். எனவே வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் ஒத்துழைக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Next Story

சென்னை விமான நிலையத்தில் கிடந்த தங்கம்; சுங்கத்துறையினர் விசாரணை!

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
Gold found at Chennai airport; Customs investigation

சென்னை விமான நிலைய குப்பைத் தொட்டியில் கிடந்த தங்கத்தை சுங்கத்துறையினர் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

சென்னை சர்வதேச விமான நிலைய குப்பைத் தொட்டியில் கேட்பாராற்று கிடந்த ரூ.85 லட்சம் மதிப்பிலான தங்கத்தை சுங்கத்துறையினர் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். குப்பைத் தொட்டியில் கிடந்த 1.2 கிலோ தங்க நகைகளைக் கைப்பற்றிய சுங்கத் துறையினர், சிசிடிவியை பார்க்காதபடி நகையை குப்பைத் தொட்டியில் போட்டுச் செல்லும் நபர் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

குப்பைத் தொட்டியில் கிடந்த மர்ம பார்சலில், வெடிகுண்டு இருக்குமோ என்ற சந்தேகத்தில் சோதனை நடத்திய போது, தங்கக் கட்டிகள் கண்டுபிடிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. சென்னை விமான நிலையத்தில் ரூ.85 லட்சம் மதிப்பிலான 1.25 கிலோ தங்கக் கட்டிகள் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் சென்னையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.