Skip to main content

மீண்டும் 'துப்பறிவாளன் 2'; விஷாலின் அப்டேட்டால் ரசிகர்கள் மகிழ்ச்சி

Published on 06/12/2021 | Edited on 06/12/2021

 

vishal starring thupparivalan 2 movie new update out now

 

கடந்த 2017 ஆம் ஆண்டு இயக்குநர் மிஸ்கின் இயக்கத்தில் வெளியான 'துப்பறிவாளன்' திரைப்படம் பெரும் வெற்றி பெற்றது. இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து  நடிகர் விஷால் மற்றும் பிரசன்னா இருவரையும் வைத்து இயக்குநர் மிஷ்கின் துப்பறிவாளன் இரண்டாம் பாகத்தை இயக்கி வந்தார். இளையராஜா இசைக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு லண்டனில் நடைபெற்று வந்தது.

 

இதனிடையே நடிகர் விஷாலுக்கும், இயக்குநர் மிஷ்கினுக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டதையடுத்து மேடையில் ஒருவரை ஒருவர் மாறி மாறி திட்டிக் கொண்டனர். இதனால் 'துப்பறிவாளன்' படத்தின் இரண்டாம் பாகம் வெளியாகுமா என்ற சந்தேகம் ரசிகர்கள் மத்தியில் எழும்பியது. இதனை தொடர்ந்து 'துப்பறிவாளன்' இரண்டாம் பாகத்தை தாமே இயக்கப் போவதாக அறிவித்திருந்தார்.

 

ad

 

இந்நிலையில் நடிகர் விஷால் இப்படம் குறித்த புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட ட்விட்டர் பதிவில்,  'துப்பறிவாளன் இரண்டாம் பாகத்தின் படப்பிடிப்பு ஜனவரி மாதம் லண்டனில் தொடங்கி ஏப்ரல் மாதம் நிறைவடையும் எனக் குறிப்பிட்டுள்ளார். நடிகர் விஷால் இயக்கி நடிக்கும் இப்படத்திற்கு இளையராஜா இசையமைக்க, நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்ய உள்ளார். நீண்ட நாள்களுக்கு பிறகு துப்பறிவாளன் படத்தின் அப்டேட் கிடைத்திருப்பதால் ரசிகர்கள் பெரும் மகிழ்ச்சியில் உள்ளனர்.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்ன ஆகும்” - இளையராஜா வழக்கில் நீதிமன்றம் கேள்வி

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
ilaiayaraaja copyright case update

இளையராஜாவின் 4500 பாடல்களை பயன்படுத்துவதற்காக எக்கோ, அகி உள்ளிட்ட நிறுவனங்கள் அவரிடம் ஒப்பந்தம் செய்திருந்தார்கள். ஆனால் 2014ஆம் ஆண்டு, ஒப்பந்தம் முடிந்த பிறகும் காப்புரிமை இல்லாமல் தனது பாடல்களை பயன்படுத்தியதாக எக்கோ, அகி மியூசிக் உள்ளிட்ட சில நிறுவனங்கள் மீது சென்னை உயர்நீதிமன்றத்தில் இளையராஜா வழக்கு தொடர்ந்திருந்தார். 

இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், 2019ஆம் ஆண்டு தீர்ப்பு வழங்கியது. அதில் தயாரிப்பாளரிடம் உரிமை பெற்று இளையராஜா பாடல்களை பயன்படுத்த இசை நிறுவனங்களுக்கு உரிமை உள்ளதென்றும், இளையராஜாவுக்கும் இந்தப் பாடல்கள் மீது தனிப்பட்ட தார்மீக சிறப்பு உரிமை இருக்கிறதென்றும் தனி நீதிபதி உத்தரவு பிறப்பித்தார். இந்த உத்தரவை எதிர்த்து இளையராஜா உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். 

இந்த மேல்முறையீட்டு மனு இரு நீதிபதிகள் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அவர்கள்,  இளையராஜா பாடல்களை பயன்படுத்த இசை நிறுவனங்களுக்கு இடைக்கால தடை விதித்தனர். இந்த தீர்ப்பை எதிர்த்து, பாடல்களின் காப்புரிமையை தயாரிப்பாளரிடமிருந்து பெற்றுள்ளோம் என்றும் அதனடிப்படையில் இந்த பாடல்களை பயன்படுத்த எங்களுக்கு அதிகாரம் இருக்கிறது என்றும் எக்கோ நிறுவனம் உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. 

இந்த மனு கடந்த மாதம் நீதிபதிகள் சுப்பிரமணியன் மற்றும் சக்திவேல் அடங்கிய அமர்வின் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது வழக்கின் விசாரணையில் இருந்து விலகுவதாக நீதிபதி சுப்பிரமணியன் அறிவித்தார். மேலும் இந்த வழக்கை வேறு அமர்வில் பட்டியலிடும் வகையில் வழக்கை தலைமை நீதிபதிக்கு பரிந்துரைத்தும் உத்தரவிட்டார். இதையடுத்து இந்த மனு விசாரணைக்கு வந்தபோது, மனுதாரர் தரப்பிற்கும் இளையராஜா தரப்பிற்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிமன்றம் வழக்கின் விசாரணையை ஒத்திவைத்தது. 

இந்த நிலையில் இந்த மனு இன்று நீதிபதிகள் மகாதேவன் மற்றும் முகமது ஷஃபிக் முன்பு மீண்டும் விராணைக்கு வந்தது. அப்போது எக்கோ நிறுவனம் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், “இசையமைத்ததற்கு இளையராஜாவிற்கு தயாரிப்பாளர் ஊதியம் கொடுத்து விடுவதால், அதன் உரிமை தயாரிப்பாளரிடம் சென்றுவிடும். தயாரிப்பாளரிடம் உரிமை பெற்றுள்ளதால் பாடல்கள் தங்களுக்கு சொந்தமாகிவிடும்” என தெரிவித்தார். இதற்கு பதிலளித்த இளையராஜா தரப்பு வழக்கறிஞர், “இசையமைப்பது என்பது கிரியேட்டிவ் பணி என்பதால் காப்புரிமை சட்டம் பொருந்தாது” என்றார். 

அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், “பாடல் வரிகள், பாடகர் அனைத்தும் சேர்ந்து தான் பாடல் உருவாகிறது. வரிகள் இல்லை என்றால் பாடல் இல்லை. அப்படி இருக்கும் போது, பாடலுக்கு பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்ன ஆகும்” என்ற கேள்வியை முன் வைத்தார்கள். மேலும் பாடல்கள் விற்பனை செய்ததன் மூலம் வணிக ரீதியாக இளையராஜா பெற்ற தொகை யாருக்குச் சொந்தம்? அவர் பெற்ற தொகை மேல்முறையீட்டு வழக்கின் இறுதித் தீர்ப்புக்கு கட்டுப்பட்டது என தெரிவித்துள்ளனர். அதே போல் பாடலாசிரியருக்கு உரிமை கோருவதற்கு வாய்ப்பிருக்கிறதா, அது குறித்து தங்களின் விளக்கம் என்ன என்று இளையராஜா தரப்பிடம் கேட்டு விசாரணையை ஒத்திவைத்துள்ளார்கள். 

Next Story

“சாதியைத் தூக்கிப் பிடித்து எந்தக் காலத்திலும் படம் வந்தது கிடையாது” - ஹரி

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
hari about caste related cinema in rathnam movir promotion

விஷால் - ஹரி கூட்டணியில் மூன்றாவது படமாக உருவாகியுள்ள படம் ரத்னம். இப்படத்தை கார்த்திக் சுப்புராஜ் தயாரிக்க பிரியா பவானி ஷங்கர் கதாநாயகியாக நடித்துள்ளார். கௌதம் மேனன், சமுத்திரக்கனி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார். இப்படம் ஏப்ரல் 26ஆம் தேதி உலகெங்கும் தமிழ் மற்றும் தெலுங்கில் வெளியாகவுள்ளது. இதனால் தற்போது புரொமோஷன் பணிகளில் படக்குழு தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. அந்த வகையில் ரத்னம் படத்தின் போஸ்டர் மற்றும் பெரிய திரை (எல்இடி) உடன் கூடிய வேன் கடந்த 4ஆம் தேதி முதல் தமிழகம் முழுவதும் உலா வரும் என அறிமுகப்படுத்தப்பட்டது. 

பின்பு விஷால் மற்றும் ஹரி இருவரும் சென்னை, திருச்சி உள்ளிட்ட ஊர்களில் கல்லூரியில் புரொமோஷன் நிகழ்ச்சி நடத்தி படத்தை விளம்பரப்படுத்தி வருகின்றனர். அந்த வகையில் புதுச்சேரியில் ஹரி, கடை வீதிகளில் ஒவ்வொரு கடையாக சென்று படத்தை பார்க்கும்படி கேட்டுக்கொண்டார். பின்பு திரையரங்கு ஒன்றில், ரசிகர்களைச் சந்தித்து பேசிய அவர், “ஒரு படம் நல்லாயிருக்கு என்றால் எந்த காலத்தில் ரிலீஸ் செய்தாலும் வருவோம் என வந்திருக்கிறீர்கள். அதற்கு நன்றியும் வாழ்த்துகளும். உங்களை மாதிரி ஆடியன்ஸ் இருக்கும் போது எங்களுக்கு நல்ல சினிமா எடுக்க வேண்டும் என தோன்றும். அந்த வகையில் என்னுடைய ரத்னம் படம் ரிலீஸாகிறது. முதல் முறையாக யோகி பாபு ஆக்‌ஷன் காட்சிகளில் நடித்திருக்கிறார். ரோட்ல ஒரு பொண்ணுக்கு பிரச்சனை என்றால் விடக்கூடாது. இந்தக் காலத்தில் போலிஸுக்கு பயந்து கொண்டு எதுவுமே பண்ணுவதில்லை. ஆனால் பிரச்சனை என்றால் தட்டி கேக்கணும். அந்த மாதிரி தட்டி கேட்கும் வேலையை தான் விஷால் படத்தில் பண்ணியிருக்கார்” என்றார்.     

பின்பு செய்தியாளர்களிடம் பேசிய அவர், “ரத்னம் படம் ஆக்‌ஷம் படம் என்றாலும் எமோஷனலும் இருக்கும். அதனால் குடும்பத்தோடு வந்து பார்க்கலாம். நாட்டில் எவ்வளவோ அநியாயம் நடந்துட்டு இருக்கு. நிறைய பேரு கெட்டவனா மாறிட்டான். சூழ்நிலை மாற வைக்கிறது. போதை பொருள்களும் புழக்கத்தில் சுத்திட்டு இருக்கு. இதனிடையே நல்லவர்களும் இருக்கிறார்கள். கெட்டவங்கிட்ட இருந்து நல்லவங்கள காப்பாத்தனும். மனிதனுக்கு மனிதன் தான் எதிரி” என்றார்.  

அவரிடம் சாதி வைத்து படமெடுப்பது குறித்து கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், “சாதியை மையமாக வைத்து எடுப்பது என்பதை, அவரவர்களுக்கு தெரிந்ததை வைத்து படமாக்குகிறார்கள் என்று தான் நல்ல நோக்கத்தோடு பார்க்க வேண்டும். தமிழ்நாட்டைப் பொறுத்தவரை ஒரு குறிப்பிட்ட ஊரை வைத்து படமெடுத்தாலே அங்கிருக்கிற சாதி, இயல்பாகவே கதைக்குள் வந்துவிடும். யாருமே வேணும் என்று சாதி வைத்து படமெடுப்பேன், என் சாதிக்காரன் மட்டும் பார்த்தால் போதும் என நினைப்பதில்லை. எல்லாருமே படம் பார்க்கணும். பக்கத்து மாநிலங்களில் இருப்பவர்களும் படம் பார்க்க வேண்டும். 

சாதி உயர்ந்தது, சாதியை தூக்கிப் பிடியுங்கள் என யாருமே படமெடுக்க மாட்டார்கள். எந்தக் காலத்திலும் அப்படி வந்தது கிடையாது. படத்தில் ஒரு நெகட்டிவ் கேரக்டர் இருக்கும். அவன் அப்படித் தான் சாதி பற்றி பேசிட்டு இருப்பான். ஆனால் கடைசியில் மனம் திருந்துவது போல் தான் இருக்கும். சினிமாவைப் பொறுத்தவரை எல்லா இன மக்களும் வேலை பார்த்தால் தான் படமெடுக்க முடியும். எல்லா மக்களும் பார்த்தால் தான் ஒரு சினிமா வெற்றியடைய முடியும். அதனால் சினிமா என்பது மதம், சாதி, இனம், மொழி என எல்லாத்துக்கும் அப்பாற்பட்டது” என்றார்.