எம்.எஸ் தோனியின் வாழ்க்கை வரலாற்றுப் படத்தில் நடித்த சுசாந்த் சிங் ராஜ்புத், நேற்று மும்பை பாந்த்ராவிலுள்ள இல்லத்தில் தற்கொலை செய்துகொண்டுள்ள சம்பவம் பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. 34 வயதே ஆன சுசாந்த், தனது பொறியியல் படிப்பைப் பாதியிலேயே விட்டுவிட்டு, நடிப்பின் மீது ஆர்வம் கொண்டு ஹிந்தி டிவி சீரியலில் நடிகராக நடிக்க தொடங்கினார். அதன்பின் டிவி சீரியலிருந்து விடைபெற்று சினிமாக்களில் நடிக்க தொடங்கினார்.
'கை போ சே', 'ஷுத் தேஸி ரொமான்ஸ்', 'டிடெக்டிவ் ப்யோம்கேஷ் பாக்ஷி' உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ள சுசாந்த், சில வெற்றிகளையும் தோல்விகளையும் ஒரு சேர ருசித்துள்ளார். கடந்த ஐந்து மாதங்களாக மன அழுத்தத்தில் இருக்கிறார் என்று போலீஸார் நடத்திய முதல்கட்ட விசாரணையில் தெரிகிறது. இவரின் மறைவிற்குத் திரையுலக பிரபலங்கள், அரசியல் தலைவர்கள், இந்திய விளையாட்டு வீரர்கள் என அனைவரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், சுசாந்தின் அலுகலத்திலிருந்து அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், ''சுஷாந்த் நம்மை விட்டுப் பிரிந்துவிட்டார் என்பது மிகுந்த வலியை ஏற்படுத்துகிறது. அவரது ரசிகர்களாகிய நீங்கள் இத்தனை நாட்களும் செய்தது போலவே அவரை உங்கள் நெஞ்சில் நிறுத்தி அவரது வாழ்வையும், பணியையும் கொண்டாடுமாறு கேட்டுக் கொள்கிறோம்.
இந்தத் துயர்மிகு நேரத்தில் எங்கள் அந்தரங்க உரிமைகளைப் பாதுகாக்க எங்களுக்கு உதவுமாறு ஊடக நண்பர்களைக் கேட்டுக் கொள்கிறோம்''.என்று குறிப்பிடப்பட்டுள்ளது.