Skip to main content

தொகுப்பாளரின் கேள்வி; திடீரென எழுந்து நின்று பதிலளித்த சூர்யா

Published on 23/10/2024 | Edited on 23/10/2024
suriya about rajinikanth in kanguva promotion

சிறுத்தை சிவா - சூர்யா கூட்டணியில் உருவாகி வரும் படம் கங்குவா. ஸ்டூடியோ கிரீன் மற்றும் யுவி கிரியேஷன்ஸ் இணைந்து தயாரிக்கும் இப்படத்தில் பாலிவுட் நடிகை திஷா பதானி கதாநாயகியாக நடித்துள்ளார். இப்படம் மூலம் தமிழுக்கு அறிமுகமாகிறார். மேலும் வில்லனாக பாலிவுட் நடிகர் பாபி தியோல் நடித்துள்ளார். இவரும் இந்தப் படம் மூலம் தமிழுக்கு அறிமுகமாகிறார். இவர்களைத் தவிர்த்து யோகி பாபு, ரெடின் கிங்ஸ்லி, கோவை சரளா, ஆனந்த் ராஜ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். 

தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்து வரும் இப்படத்தின் க்ளிம்ஸ், டீசர், ட்ரைலர் மற்றும் ‘ஃபயர் சாங்...’, ‘யோலோ’ ஆகிய பாடல்கள் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இப்படத்தின் இசை வெளியீட்டு விழா வருகிற 26ஆம் சென்னையில் நடக்கவுள்ளது. நவம்பர் 14ஆம் தேதி 3டி தொழில்நுட்பத்தில் 38 மொழிகளில் பிரம்மாண்டமாக வெளியாகவுள்ளது. இதனால் தற்போது புரொமோஷன் பணிகளில் பிஸியாக உள்ளது படக்குழு. 

அந்த வகையில் மும்பை, டெல்லி என படக்குழு தொடர்ந்து நிறைய ஊடகங்களுக்கு பேட்டி கொடுத்து வருகின்றனர். அதில் ஒரு பேட்டியில் தொகுப்பாளினி கேள்விக்கு திடீரென எழுந்து நின்று பதிலளித்தார் சூர்யா. அந்த பேட்டியில் சூர்யா, பாபி தியோல், திஷா பதானி, தேவி ஸ்ரீ பிரசாத் ஆகியோர் கலந்து கொண்டனர். அப்போது சூர்யாவை சூப்பர் ஸ்டார் என்று தொகுப்பாளினி குறிப்பிட்டு ஒரு கேள்வி கேட்டார். அதற்கு உட்கார்ந்திருந்த சூர்யா, எழுந்து நின்று, “எங்களுக்கு சூப்பர் ஸ்டார் என்பது ரஜினிகாந்த் தான். எப்போதும் ஒரே ஒரு சூப்பர் ஸ்டார்தான். ஒருவரிடம் இருந்து வெறும் பெயரை மட்டும் எடுத்து கொண்டு அதை இன்னொருவருக்கு ஒட்ட முடியாது” என்றார்.

இது தொடர்பான வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது. முன்னதாக கங்குவா கடந்த அக்டோபர் 10ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டு பின்பு அதே தேதியில் ரஜினியின் வேட்டையன் வந்ததால் இப்படம் தள்ளி போனது குறிப்பிடத்தக்கது.

சார்ந்த செய்திகள்