Skip to main content

“இந்த சீனெல்லாம் இங்க செல்லாது” - சமுத்திரக்கனி அதிரடி

Published on 30/11/2023 | Edited on 30/11/2023

 

samuthirakani about gnanavel raja issue

 

இயக்குநர் அமீர் மற்றும் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா இருவருக்கும் நீண்ட காலமாக பருத்தி வீரன் படம் தொடர்பாகப் பிரச்சனை இருந்து வருகிறது. இது தொடர்பாக சமீபத்திய பேட்டியில் பேசிய ஞானவேல் ராஜா, அமீர் மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் வைத்தார். இதையடுத்து அதை மறுத்து அமீர் அறிக்கை வெளியிட்டார். இந்த விவகாரம் தொடர்பாக சசிகுமார், சமுத்திரக்கனி, பொன்வண்ணன் உள்ளிட்டோர் அமீருக்கு ஆதரவாக நின்றனர். மேலும் ஞானவேல் ராஜாவிற்கு எதிராக காட்டமாக அவர்களது எக்ஸ் தள பக்கத்தில் பதிவிட்டிருந்தனர். இவர்களைத் தொடர்ந்து கரு. பழனியப்பன், பாரதிராஜா உள்ளிட்டோரும் ஞானவேல் பேச்சுக்கு கடும் கண்டனம் தெரிவித்தனர்.

 

இப்படி தொடர்ந்து திரைப் பிரபலங்கள் இந்த விவகாரம் தொடர்பாக பேசி வந்த நிலையில், ஞானவேல் ராஜா மௌனம் காத்து வந்தார். ஒருவழியாக மௌனம் கலைத்த அவர், வருத்தம் தெரிவிப்பதாக அறிக்கை வெளியிட்டார். அந்த அறிக்கையில், “பருத்தி வீரன் பிரச்சனை கடந்த 17 ஆண்டுகளாக நடந்து கொண்டிருக்கிறது. நான் இதுநாள் வரை அதை பற்றி பேசியது இல்லை. என்றைக்குமே ‘அமீர் அண்ணா’ என்றுதான் நான் அவரை குறிப்பிடுவேன். ஆரம்பத்திலிருந்தே அவர் குடும்பத்தாருடன் நெருங்கிப் பழகியவன். அவரது சமீபத்திய பேட்டிகளில் என் மீது அவர் சுமத்திய பொய்யான குற்றச்சாட்டுகள் என்னை மிகவும் காயப்படுத்தியது. அதற்கு பதில் அளிக்கும்போது நான் பயன்படுத்திய சில வார்த்தைகள் அவர் மனதை புண்படுத்தி இருந்தால் அதற்கு நான் மனப்பூர்வமாக வருத்தம் தெரிவித்துக் கொள்கிறேன். என்னை வாழவைக்கும் சினிமா துறையையும் அதில் பணிபுரியும் அனைவரையும் மிகவும் மதிப்பவன் நான்” எனக் குறிப்பிடப்பட்டிருந்தது. 

 

இதையடுத்து போலியான வருத்தத்திற்கு உண்மையைப் பலி கொடுக்க முடியாது எனக் குறிப்பிட்டு சசிகுமார் அறிக்கை வெளியிட்டிருந்தார். மேலும் , “திட்டமிட்டு ஒருவரை அவமானப்படுத்திவிட்டு அவருக்கு அவரே வருந்துவது என்ன மாதிரியான வருத்தம்? பெயரிடப்படாத அந்தக் கடிதம் யாருக்கு?” எனப் பல்வேறு கேள்விகளை எழுப்பினார். இந்த நிலையில் சமுத்திரக்கனி, வருத்தம் தெரிவிக்கிற சீனெல்லாம் இங்க செல்லாது எனக் குறிப்பிட்டு ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில், “பிரதர்... இந்த வருத்தம் தெரிவிக்கிற சீனெல்லாம் இங்க செல்லாது... நீங்க செய்ய வேண்டியது., எந்த பொதுவெளியில எகத்தாளமா உக்காந்துக்கிட்டு அருவருப்பான உடல் மொழியால சேற்ற வாரி இறைச்சீங்களோ... அதே பொது வெளியில பகிரங்கமா மன்னிப்பு கேக்கணும்..! நீங்க கொடுத்த அந்த கேவலமான, தரங்கெட்ட இன்டெர்வியூவை சமூக வலைத்தளங்களில் இருந்து துடைச்சு தூர எறியணும்...! 

 

அன்னைக்கு கொடுக்காம ஏமாத்திட்டுப் போன பணத்தை ஒத்த பைசா பாக்கி இல்லாம திருப்பிக் கொடுக்கணும். ஏன்னா... கடனா வாங்குன நிறைய பேருக்கு திருப்பிக் கொடுக்க வேண்டியது இருக்கு... அப்புறம் பருத்தி வீரன் திரைப்படத்தில் வேலை பார்த்த நடிகர்கள், தொழில்நுட்ப கலைஞர்கள் பல பேருக்கு இன்னும் சம்பள பாக்கி இருக்கு. பாவம்... அவங்கெல்லாம் எளிமையான குடும்பத்துல இருந்து வந்து வேல பாத்தவங்க... நீங்கதான், அம்பானி பேமிலியாச்சே...” எனக் குறிப்பிட்டுள்ளார். 

 

 

 

சார்ந்த செய்திகள்