Skip to main content

முன்பு விமானம்...இப்போது ரேஸ் கார்... வெளிநாட்டில் 'பேட்ட' செய்யும் நூதன ப்ரமோஷன்

Published on 08/01/2019 | Edited on 08/01/2019
petta

 

ரஜினிகாந்த் நடிப்பில் தற்போது உருவாகி இருக்கும் படம் ‘பேட்ட’. சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்தை கார்த்திக் சுப்புராஜ் இயக்கியுள்ளார். இப்படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனவரி 10ம் தேதி உலகமெங்கும் வெளியாக உள்ளது. இப்படத்தை மாலிக் ஸ்ட்ரீம் கார்ப்பரேஷன் நிறுவனம் இந்தியாவை தவிர உலகமெங்கும் வெளியிடும் உரிமையை பெற்றுள்ளது. இந்நிலையில் இந்நிறுவனத்தின் விளம்பர யுக்தியை கண்டு உலக மக்கள் பலரும் வியந்து போய் வருகின்றனர். சமீபத்தில் நடைபெற்ற ‘ட்ரிப்ட் சேலஞ்ச் 2018’ (DRIFT Challenge 2018) கார் ரேசில் 'பேட்ட' படத்தின் போஸ்டர்கள் ஒட்டப்பட்ட கார் வெகுவாக ரசிகர்களை கவர்ந்தது. மேலும் மலேசியாவில் பல கார்களில் 'பேட்ட' படத்தின் போஸ்டர்கள் ஒட்டப்பட்டது. அதுபோல் பேருந்துகளில் ஒட்டப்பட்ட போஸ்டர் அதிக ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது. தற்போது மலேசியாவின் முக்கிய வீதிகளிலும் மக்கள் அதிகம் கூடும் இடங்களில் வீடியோக்கள் ஒளிபரப்பட்டு வருகிறது.இது ரஜினி ரசிகர்களிடையே அதிக தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. ரஜினி ரசிகர்கள் மட்டுமில்லாமல் மற்ற ரசிகர்களிடையும் அதிக எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தி இருக்கிறது. மலேசியாவில் இதுவரைக்கும் யாரும் செய்யாதளவிற்கு ‘பேட்ட’ படத்தின் விளம்பரங்கள் செய்யப்பட்டு வருகிறது. 

 

 

மலேசியாவில் திரைப்படத் துறையில் முத்திரை பதித்து வரும் மாலிக் ஸ்டிரீம்ஸ் கார்ப்பரேசன் நிறுவனத்தின் 23ஆவது திரைப்படமான "பேட்ட" 3 கோடி வெள்ளிக்கு வசூல் சாதனை படைக்கும் என்று அதன் தலைமை நிர்வாக அதிகாரி டத்தோ அப்துல் மாலிக் நம்பிக்கை தெரிவித்துள்ளார். மேலும் மலேசியாவில் நடைபெற்ற விழாவில் ‘பேட்ட’ படங்கள் பொறிக்கப்பட்ட டி-சர்ட் அறிமுகம் செய்யப்பட்டது. மலேசியாவில் 140 திரையரங்குகளில் "பேட்ட" திரைப்படம் வெளியாக உள்ளது. மேலும் "உல்லாலா" பாடலை மலாய் பாடகர்கள் அஸ்வான், முவாட்ஸ் இருவரும் தமிழ்மொழியில் பாடி அசத்தியுள்ளனர். தற்போது, இந்த வீடியோ வைரலாகி வருகிறது. இத்துடன், மலாய் பாடகர்கள் பாடிய வீடியோ, மலேசிய வீதிகளில் செய்யப்பட்டுள்ள விளம்பர வீடியோ இணைக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே கலைப்புலி தாணு தயாரிப்பில் வெளியான 'கபாலி' படத்தின் ப்ரமோஷன் போஸ்டர் விமானத்தில் ஒட்டப்பட்டு ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தக்கது. 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

மீண்டும் ட்ரெண்டான தமிழ்நாட்டு மீசை! தமிழகமும் மீசையும்...

Published on 02/03/2019 | Edited on 02/03/2019

கடந்த மூன்று நாட்களாக இந்திய அளவில் சமூக வலைத்தளங்களில் ஒலிக்கும் பெயர் 'அபிநந்தன் வர்தமன்'.

 

abinandhan



கடந்த பிப்ரவரி 27ஆம் தேதி இந்திய எல்லைக்குள் வந்த பாகிஸ்தான் விமானங்களுக்கு பதிலடி கொடுக்க பாகிஸ்தான் எல்லைக்குள் விமானத்தில் சென்ற அபிநந்தன் பாகிஸ்தான் எல்லைக்குள் சிக்கினார். பாகிஸ்தான் ராணுவ மேஜர் ஒருவர் அபிநந்தனை விசாரிக்கும் வீடியோவில் பாகிஸ்தான் ராணுவம் தன்னை நாகரிகமாக நடத்துவதாகத் தெரிவித்திருந்தார் அபிநந்தன். அந்த வீடியோவில் அவர்களது கேள்விகளுக்கு அபிநந்தன் பதிலளித்த விதமும், அந்த சூழ்நிலையை அபிநந்தன் அணுகிய முறையும் அவர்கள் கேட்கும் தகவல்களை தர உறுதியாகவும் மென்மையாகவும் மறுத்த விதமும் இந்தியா முழுக்க மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது.

 

abinandhan pics



பாகிஸ்தான் ராணுவத்தின் பிடியில் தனி ஆளாக இருக்கும்போதிலும், தன் கண்கள் கட்டப்பட்டு, தாக்கப்பட்டதில் முகத்தில் காயம் ஏற்பட்டு நிற்கும்போதும் அவர் சற்றும் நிலைகுலையாமல் நிமிர்ந்து நின்ற விதமும் அவர்கள் கேட்ட கேள்விகளில் எந்த கேள்விகளுக்கு பதிலளிக்க வேண்டும், எந்த கேள்விகளுக்கு பதிலளிக்கக் கூடாது என்பதில் காட்டிய தெளிவும் அதை மிக மென்மையாக அதே நேரம் உறுதியாக தெரிவித்த விதமும் அந்த வீடியோக்கள் மூலம் வெளியாகின. அவர் ஆங்கிலம் பேசிய விதம், அளவான வார்த்தைகள் என அவரது மொழியும் மிகத் தெளிவாக இருந்தன. குறுகிய நேர வீடியோக்கள் என்றாலும் தனது செயல்பாடு மற்றும் பேச்சால் மக்கள் மத்தியில் ஒரு நாயகனாக உயர்ந்தார் அபிநந்தன். அவரது அந்த பிம்பத்திற்கு வலு சேர்த்தது அவரது மீசை. தமிழ்நாட்டை சேர்ந்த அபிநந்தன் தமிழ்நாட்டு பாணியில் நீண்ட பெரிய மீசை வைத்திருந்தார். சமூக ஊடகங்களில் அவரது அந்த 'கெத்'தான தோற்றம் குறித்தும் பேசப்பட்டது. பாகிஸ்தானால் அமைதி நடவடிக்கையாக ஒப்படைக்கப்பட்ட அபிநந்தன் பத்திரமாக மீண்டு வந்திருக்கும் வேளையில் அவரை புகழ்ந்தும் வரவேற்றும் சமூக ஊடகங்களில் செய்திகள் நிறைந்துள்ளன.

 

barathiyar jeyakanthan



அபிநந்தனை அவரது பேட்சில் (batch) 'வீரப்பன்' என்று சக வீரர்கள் அழைப்பார்களாம். காரணம், அவரது நீண்ட மீசை. வீரப்பன் பெரிய மீசை வைத்திருந்தவர். ஆனால், இரண்டும் வேறு வேறு பாணி.

 

veerappan



தமிழகத்துக்கும் பெரிய மீசைக்கும் இருக்கும் தொடர்பு அனைவரும் அறிந்ததே. குறிப்பாக தென் தமிழகத்தில் பெரிய மீசை வைப்பவர்கள் அதிகம். வீரத்தின் அடையாளமென நம்பப்படும் இந்த மீசை பல பிரபலங்களின் அடையாளமாக இருக்கிறது. வீரபாண்டிய கட்டபொம்மனின் உருவம் பெரிய மீசையுடன்தான் வரையப்பட்டது. திரைப்படத்தில் அந்தப் பாத்திரத்தில் நடித்த சிவாஜி கணேசன் பெரிய மீசையுடன்தான் நடித்தார். இன்று அவரது தோற்றமே கட்டபொம்மனின் தோற்றமாக பதிவாகி இருக்கிறது. பாரதியின் மீசை புகழ் பெற்றது. அவரது கவிதையில் இருக்கும் ரௌத்திரம் அவரது தோற்றத்திலும் இருக்கக் காரணம் அந்த மீசை. எழுத்தாளர் ஜெயகாந்தனின் பெரிய மீசை அனைவரையும் ஈர்த்தது.

 

rajini kamal ajith



இன்றும் தமிழ் தமிழ் திரைப்படங்களில் கதாநாயகர்களை வீரமாகக் காட்ட மீசை பயன்படுகிறது முன்பு தேவர் மகன், சீவலப்பேரி பாண்டி திரைப்படங்களும் சமீபத்தில் பேட்ட, விஸ்வாசம் திரைப்படங்களும் இதற்கு உதாரணம்.

 

nakkheeran gopal



நக்கீரன் ஆசிரியர் தோற்றத்தில் முக்கிய அம்சம் மீசை. அவரது அடையாளமாக இன்றும் அவரது மீசை இருக்கிறது. இப்படி தமிழகத்துக்கும் பெரிய மீசைக்கும் தொடர்புண்டு. இந்த வரிசையில் லேட்டஸ்ட் ட்ரெண்ட் ஆக அபிநந்தனின் மீசை இந்தியா முழுவதும் ட்ரெண்டாகி உள்ளது. அவரை பாராட்டும் வகையில் சமூக வலைதளங்களில் வெளியிடப்படும் ஓவியங்களில், புகைப்படங்களில் அவரது மீசைக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது, ஹைலைட்டாக இருக்கிறது. மீண்டும் ட்ரெண்டாகியுள்ளது தமிழ்நாட்டிலிருந்து ஒரு மீசை.

         

 

Next Story

 தியேட்டரில் திருமணம் செய்த ரசிகருக்கு பரிசு கொடுத்து வாழ்த்திய ரஜினி

Published on 21/02/2019 | Edited on 21/02/2019


 பேட்ட திரைப்படம் வெளியான தியேட்டரில் திருமணம் செய்துகொண்ட தம்பதியை அழைத்து வாழ்த்தினார் ரஜினிகாந்த்.

 

rrrr

 

தாம்பரத்தை அடுத்த படப்பையை சேர்ந்த தீவிர ரஜினி ரசிகர் அன்பரசு,  பேட்ட திரைப்படம் ரிலீஸ் அன்று சென்னை உட்லண்ட்ஸ் தியேட்டரில் தனது திருமணத்தை நடத்தினார். ‘பேட்ட’ படம் தொடங்குவதற்கு சிறிது நேரத்துக்கு முன்பு மணமக்கள் திருமணத்துக்கு தயார் ஆனார்கள். தியேட்டரின் அருகே அமைக்கப்பட்டிருந்த மேடையில் மணமக்கள் உட்கார்ந்தனர். புரோகிதர் மந்திரம் ஓத மணமகன் அன்பரசு, மணமகள் காமாட்சி கழுத்தில் தாலி கட்டினார்.  

 

r

 

அப்போது, அங்கு கூடி இருந்த மணமக்களின் உறவினர்கள், ரசிகர்கள் அட்சதை தூவி வாழ்த்தினார்கள். மணமக்கள் வாழ்க என்று வாழ்த்து முழக்கமிட்டனர். இதையடுத்து அங்கு கூடியிருந்த அனைவருக்கும் திருமண விருந்து வழங்கப்பட்டது. பேட்ட படம் பார்க்க வந்த ரசிகர்களும் விருந்து உண்டு மகிழ்ந்தனர். உட்லண்ட் தியேட்டரில் பேட்ட படம் பார்க்க வந்தவர்களுக்கு கல்யாண சாப்பாடு வழங்கப்பட்டது.  படம் தொடங்கியதும் புதுமண தம்பதியரும் ‘பேட்ட’ படத்தை பார்த்து மகிழ்ந்தனர்.   அத்தம்பதியினரை அழைத்து அவர்களுக்கு பரிசு கொடுத்து வாழ்த்தினார் ரஜினிகாந்த்.