
தமிழகம் முழுவதும் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக்கோரியும், ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரியும் பல்வேறு வகையான போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இதில் சென்னையில் நடந்த ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிக்கு எதிராக சேப்பாக்கம் ஸ்டேடியத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தியபோது போலீசாருக்கும், போராட்டக்காரர்களுக்கும் மோதலும், தடியடி சம்பவங்களும் நடந்தன. இப்படி எதிர்ப்பை மீறி ஐ.பி.எல். போட்டி நடத்தப்பட்டு சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெற்றி பெற்றது. பின்னர் இந்த வெற்றி குறித்து டைரக்டர் வெங்கட் பிரபு தனது ட்விட்டர் பக்கத்தில்...“நான் ஒன்றும் சொல்லலப்பா” என பதிவிட்டிருந்தார். இதையடுத்து இந்த பதிவை கண்டித்து இயக்குனர் பாண்டிராஜ் தனது ட்விட்டர் பக்கத்தில்...“உண்மையான விவசாயி யாரும் ஐ.பி.எல். பார்க்க கூடாது என்றோ, எல்லோரும் எங்களுக்கு போராடுங்கள் என்றோ சொல்ல மாட்டார்கள். நாம் விவாதித்துக்கொண்டிருக்கும் இந்த நேரத்தில் அவர்கள் விவசாயம் செய்து கொண்டிருப்பார்கள் நாம் சாப்பிடுவதற்கு, அதுதான் விவசாயி. அந்த வலி புரிந்தவர்கள் போராடுகிறார்கள். புரியாதவர்கள்... போராட்டங்களில் நிறைய பேரிடம் பொதுநலமின்றி சுயநலமே தெரிகிறது. தயவு செய்து அரிசியிலும் அரசியல் பண்ணாதீர்கள். வாடிய பயிரை கண்டபோதெல்லாம் வாடுபவன் விவசாயி. வெங்கட் பிரபு சார், சென்னை சூப்பர் கிங்ஸ்சை ரசியுங்கள். அது உங்கள் உரிமை. தயவு செய்து விவசாயிகளை வைத்து காமெடி பண்ணாதீர்கள்” என பதிவிட்டிருந்தார்.