Skip to main content

அறிவுத்தந்தையை அறிவித்த மாரி செல்வராஜ்

Published on 29/02/2024 | Edited on 29/02/2024
mari selvaraj about thirumavalavan

விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் இளவந்திகை திருவிழா - எழுச்சி தமிழர் இலக்கிய விருதுகள் விழா சென்னையில் நடைபெற்றது. இதில் சிறந்த திரைப்பட பிரிவில் மாமன்னன் படத்திற்காக மாரி செல்வராஜுக்கு வழங்கப்பட்டது. பின்பு மேடையில் பேசிய மாரி செல்வராஜ், “பரியேறும் பெருமாள் ரிலீஸாகி மக்களால் கொண்டாடப்பட்டிருந்த சமயம். இந்த படத்திற்காக முதல் விருது எனக்கு கொடுக்கிறாங்க. என் வாழ்க்கையில் முதல் விருது அது. அதை வாங்குவதற்காக மேடையில் ஏறினேன். மேடைக்கு முன்னாடி என் குடும்பம் சார்ந்தவர்களோ என் நண்பர்கள் சார்ந்தவர்களோ யாருமே இல்லை. பாராதிராஜா சார் அந்த விருதை கொடுத்தார். நான் வாங்கிட்டு திரும்பும் போது, எங்க அப்பா மாதிரி உட்கார்ந்திருந்தார் திருமா அண்ணன். அவர் விருது கொடுக்கிறதுக்காக வந்திருக்கார். விருது வாங்கிட்டு கீழ போகும் போது என் காலும் அவர் கிட்ட தான் போனுச்சு. என் கையும் விருதை அவர் கையில் தான் கொடுத்துச்சு. அதை வாங்கி என்னை அவர் அனைத்துக் கொண்டார். அது தான் என் வாழ்க்கையினுடைய மிகச்சிறந்த தருணம். 

எல்லா இயக்குநர்களும் எல்லா திரைக்கதை ஆசிரியர்களும் தன் மனம் போன போக்கில், எழுதக் கூடிய ஒரு கலைவடிவமான திரைக்கதையை நான் ஒரு நாளும் என் மனம் போன போக்கில் எழுதியதே கிடையாது. அப்படி எழுதுவதற்கான சாத்தியக் கூறுகள், தமிழ் சினிமாவிலோ நம் சமூகத்திலோ இல்லை. அண்ணன் சொல்கிற மாதிரி எதிரிகளை ஜனநாயகப் படுத்த வேண்டும். அதை மனதில் வைத்து தான் ஒவ்வொரு திரைக்கதையையும் உருவாக்கினேன்.  

மாமன்னன் படத்தில் இண்டர்வல் பிளாக்காகட்டும், பரியேறும் பெருமாள் படத்தில் அப்பா ஓடி போகிற சீனாகட்டும், கர்ணனில் பஸ் உடைக்கப்பட்டு அந்த பையனை அப்பா வெளியே கூட்டிட்டு போகிறதாகட்டும்... இப்படி எல்லா சீனும் படமாக்கப்பட்ட முந்தைய நாள், என்ன பண்ணுவேன் என்றால். அது மட்டுமல்ல. எப்போதெல்லாம் என் மனம் உடைபட்டு, இந்த காட்சியை நம்மால் வெளியே கொண்டு வர முடியுமா, சென்சார் போர்டு அனுமதிக்குமா, இந்த காட்சி வெளியே வந்தால் நம்மை என்ன மாதிரி பார்ப்பாங்க. என்ன மாதிரியான விமர்சனங்கள் நம் மேல் வரும். அப்படி எல்லாவற்றையும் யோசிக்கும் போது நான் பண்ணுகிற ஒரே வேலை, அண்ணன் திருமாவுடைய வீடியோக்களெல்லாம் பார்ப்பேன். அந்த வீடியோக்களில், என்கிட்ட இருக்கிற ஆத்திரம், ஆவேசத்தை விட அதிகமா இருக்கும், பாய்ச்சலும் அதிகமா இருக்கும். ஆனால் அடுத்த தலைமுறைக்கு கடத்தப்பட வேண்டிய நிதானம் அதில் ரொம்ப முக்கியமா இருக்கும். ஜனநாயகத்தை மையப்படுத்தி தான் அந்த பேச்சு இருக்கும். ஒன்றரை மணி நேரம் பேசுவார். ஆக்ரோஷமா இருக்கும். ஆனால் அதில் ஒரு நூலிழையில் கூட நிதானம் தவறிய பேச்சு இருக்காது. 

என் படங்களில் என் கோபத்தை இன்னும் நான் காட்டவே இல்லை. என்னுடைய கோபம் அளவிட முடியாதது. அதை திரைக்கதை வடிவமாக மாற்றவே முடியாது. அதை சென்சார் போர்டு அனுமதிக்காது. சென்சார் போர்டு நிஜத்தையே அனுமதிக்க மாட்டேங்குது. கோபத்தை எப்படி அனுமதிக்கும். திரைக்கதை வடிவம் என்பது ஜனநாயகமான விஷயம். நான் இதுவரை பதிவு பண்ணினது எல்லாமே என் கிட்ட இருந்த நிஜம். அதை கோபமா மாத்தினேன் என்றால் அதனுடைய வீச்சு வேறொன்றாக இருக்கும். ஆனால் அதைவிட அவசியம் வருகின்ற தலைமுறைகளுக்கு, நாம் நிஜத்தை சொல்லுவதன் மூலமாக அவர்களை ஒட்டுமொத்தமாக தயார்படுத்துவது. அதைப் புரிந்து கொள்ள வைச்சது திருமா அண்ணனுடைய பேச்சுகள் தான்” என்றார்.

மேலும், “என் ஒவ்வொரு படம் ரிலீசாகும் போதும் ஃபோன் பண்ணி பேசுவார். அதுமட்டுமல்லாமல் ஏதாவது ஒரு பிரச்சனை வந்துச்சுன்னாலும் ஃபோன் பண்ணி பேசுவார். இதெல்லாம் எங்க அப்பாவுக்கு தெரியாது. அவருக்கு நான் ஒரு சினிமா இயக்குநர் என்று தான் தெரியும். என் பெயரை முன் வைத்து இங்க என்ன அரசியல் நடந்துகிட்டு இருக்கு, என்ன வன்மம் முன்வைக்கப்பட்டிருக்கு, இது எதுவுமே எங்க அப்பாவுக்கு தெரியாது. ஆனால் அப்பாவுடைய ஸ்தானத்தில் யாராவது பேசும் போது, அது எவ்வளவு பெரிய விஷயமா இருக்கும். நான் பகிரங்கமாக அறிவிக்கிறேன். என்னுடைய அறிவுத்தந்தை திருமா அண்ணன்தான்” என்றார்.  

சார்ந்த செய்திகள்