Skip to main content

“அணிந்திருக்கும் உடையை வைத்து நான் யார் என சொல்லிவிட முடியுமா?”- மம்தா கேள்வி

Published on 17/12/2019 | Edited on 17/12/2019

குடியுரிமை சட்ட திருத்த மசோதா இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டு குடியரசுத் தலைவரின் ஒப்புதல் பெறப்பட்டது.
 

mamta banerji

 

 

இந்த நிலையில் இந்த சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தும், மசோதாவை திரும்பப் பெறக் கோரியும், மசோதாவை நிறைவேற்றிய மத்திய பாஜக அரசு மற்றும் உள்துறை அமைச்சரை கண்டித்தும் நாடு முழுவதும் பல இடங்களில் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. பொதுமக்களோடு சேர்ந்து மாணவர்களும் போராட்டங்களை துவங்கியுள்ளனர். இந்நிலையில் குடியுரிமை சட்ட திருத்தத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக நேற்று மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையில் கொல்கத்தாவில் ரெட் ரோட்டில் உள்ள பாபாசாகேப் அம்பேத்கர் சிலையிலிருந்து தொடங்கி ஜோராசங்கோ தாகுர்பாரி வரை பிரமாண்ட பேரணி நடத்தப்பட்டது. இப்பேரணியில் ஆயிரக்கணக்கான மக்கள் கலந்துகொண்டுள்ளனர்.

அப்போது பேசிய மம்தா, "பாஜக மட்டுமே இங்கு நிலைத்திருக்க வேண்டுமென நினைக்கிறது. மற்ற அனைவரையும் அவர்கள் வெளியேறச் செய்வார்கள். அதுதான் அவர்களின் அரசியல். ஆனால் அது ஒருபோதும் நடக்காது. இந்தியா அனைவருக்கும் உரியது. டெல்லி முதல்வர் இந்த திட்டத்தை அனுமதிக்கப்போவதில்லை என கூறியிருக்கிறார். மத்தியப்பிரதேச முதல்வர், பஞ்சாப் முதல்வர், சத்தீஸ்கர், கேரளா முதல்வர் ஆகியோரும் இதனை அனுமதிக்கப்போவதில்லை என கூறியுள்ளனர். இதே போல அனைவரும் கூற வேண்டும்" என்று தெரிவித்தார். இந்த செயலால் முதலமைச்சர் மம்தா பானர்ஜியை மேற்கு வங்க கவர்னர் ட்விட்டரில் கண்டித்தார்.

இந்நிலையில் இன்றும் குடியுரிமை சட்ட திருத்த மசோதாவை எதிர்த்து மம்தா பானர்ஜி ஜாதவ்பூர் முதல் ஜாது பாபு பஜார் வரை பேரணி நடத்தினார். இதில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த பல முக்கிய தலைவர்கள் கலந்துகொண்டனர். பேரணியில் கலந்துகொண்டவர்கள், ‘சிஏபி-யும் வேண்டாம், என் ஆர் சி-யும் வேண்டாம்’ என்று முழக்கமிட்டனர். 

அப்போது பேசிய மம்தா பானர்ஜி, “ நான் அணிந்திருக்கும் உடையை வைத்து என்னை வெளியேற்றிவிட முடியாது. தலையில் குல்லா அணிவதனால் நீங்கள் இஸ்லாமியராகிவிட முடியாது. உங்களால் நான் அணிந்திருக்கும் உடையை வைத்து நான் யார் என சொல்லிவிட முடியுமா?” என்று மோடியின் சர்ச்சை கருத்திற்கு பதிலடி கொடுத்திருக்கிறார். 
 

 

சார்ந்த செய்திகள்