Skip to main content

காசோலை மோசடி வழக்கு - லிங்குசாமி வாதத்தை ஏற்றுக்கொண்ட நீதிமன்றம்

Published on 24/04/2023 | Edited on 24/04/2023

 

lingusamy check case update

 

கடந்த 2014 ஆம் ஆண்டு கார்த்திக் - சமந்தா நடிப்பில் 'எண்ணி ஏழு நாள்' என்ற படத்தை தயாரிப்பதற்காக பி.வி.பி கேப்பிடல் நிறுவனத்திடம் 1 கோடியே 3 லட்சம் ரூபாயை தனது திருப்பதி பிரதர்ஸ் நிறுவனத்திற்காக இயக்குநர் லிங்குசாமி மற்றும் அவரது சகோதரர் கடனாக பெற்றிருந்தனர். கடன் தொகைக்காக லிங்குசாமி  கொடுத்த 35 லட்ச ரூபாய்க்கான காசோலை வங்கியில் பணம் இல்லாமல் திரும்பியது. இதனால் பி.வி.பி கேப்பிடல் நிறுவனம் சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் காசோலை மோசடி வழக்கு பதிவு செய்தனர்.

 

இந்த வழக்கை விசாரித்த சைதாப்பேட்டை நீதிமன்றம் கடந்த 2022 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 22ஆம் தேதி லிங்குசாமி மற்றும் அவரது சகோதரருக்கு ஆறு மாத காலம் சிறை தண்டனை வழங்கி தீர்ப்பளித்திருந்தது. மேலும் பி.வி.பி கேப்பிடல் நிறுவனத்திடம் பெற்ற கடனை வட்டியுடன் சேர்த்து செலுத்த வேண்டும் எனவும் உத்தரவு பிறப்பித்து இருந்தது.

 

சைதாப்பேட்டை நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்து லிங்குசாமி தரப்பில் சென்னையில் உயர்நீதிமன்ற வளாகத்தில் உள்ள மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்கு கடந்த 12ஆம் தேதி சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி சைதாப்பேட்டை நீதிமன்றத்தின் சிறை தண்டனை உத்தரவை உறுதி செய்து, லிங்குசாமி தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்தார். இந்த தீர்ப்பு கோலிவுட் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.   

 

இதனால் லிங்குசாமி தன்னிலை விளக்கம் அளித்திருந்தார். அதில், "இந்த வழக்கு பிவிபி கேப்பிட்டல் லிமிடெட் மற்றும் எங்களது தயாரிப்பு நிறுவனமான திருப்பதி பிரதர்ஸ் பிலிம் மீடியா பிரைவேட் லிமிடெட் இடையிலானது. அவர்கள் கொடுத்த வழக்கின் மேல்முறையீட்டில் நீதிமன்றம் தீர்ப்பளித்தது. நாங்கள் நீதிமன்றம் அளித்த தீர்ப்புக்கு மேல்முறையீடு செய்து சட்டரீதியாக சந்திக்க உள்ளோம்" எனக் குறிப்பிடப்பட்டிருந்தது. 

 

இந்த நிலையில் சென்னை உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்பை ரத்து செய்யக் கோரியும், அதற்கு தடை விதிக்க கோரியும் லிங்குசாமி மற்றும் அவரது சகோதரர் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், காசோலை தொகையில் ஏற்கனவே 20 சதவீதத்தை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் டெபாசிட் செய்துள்ளதாகவும் தற்போது மேலும் 20 சதவீதத்தை டெபாசிட் செய்ய தயாராக இருப்பதாகவும் தெரிவித்தார். இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதி 20% தொகையை 6 வாரங்களுக்குள் டெபாசிட் செய்ய உத்தரவிட்டார். மேலும் லிங்குசாமி மற்றும் சகோதரருக்கு விதிக்கப்பட்டிருந்த 6 மாத சிறைதண்டனை நிறுத்தி வைத்து இந்த வழக்கின் விசாரணையை ஒத்தி வைத்துள்ளார். 

 

 

சார்ந்த செய்திகள்