தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குநராகவும் நடிகராகவும் வலம் வந்த கே.எஸ்.ரவிக்குமார், தற்போது ‘கூகுள் குட்டப்பன்’ என்ற படத்தை தயாரித்து வருகிறார். தர்ஷன் மற்றும் லாஸ்லியா இணைந்து நடிக்கும் இப்படத்தை கே.எஸ்.ரவிக்குமாரின் உதவி இயக்குநர்களான சபரி மற்றும் சரவணன் இயக்குகின்றனர். இப்படத்தில், கே.எஸ். ரவிக்குமார் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.
இந்நிலையில், தன்னுடைய சமூக வலைதளப்பக்கத்தில் கே.எஸ்.ரவிக்குமார் வெளியிட்ட வீடியோ ஒன்று பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. அந்த வீடியோவில், "எனக்கு சொந்தத்தில் ஒரு வீடு கட்ட வேண்டும் என்று கனவு இருந்தது. அப்படி நான் கட்டிய வீட்டிற்கு இன்று பிரச்சனை ஏற்பட்டுள்ளது. அதை எதிர்த்துக் கேட்ட பின் பிரச்சனை மிகவும் பெரிதாகிவிட்டது. என்ன செய்வதென்று தெரியவில்லை. அதனால்தான் உங்களிடம் பேசுகிறேன். அடுத்த வீடியோவில் பேசுவோம்" என பேசியுள்ளார்.
தேர்தல் நேரத்தில் கே.எஸ்.ரவிக்குமார் இந்த வீடியோவை வெளியிட்டுள்ளதால், ஏதும் அரசியல் ரீதியான பிரச்சனையா என ரசிகர்கள் கேள்வியெழுப்பி வருகின்றனர். சில ரசிகர்கள், இது ஏதோ படத்திற்கான ப்ரோமோஷன் வேலை போல உள்ளது என்றும் பதிவிட்டு வருகின்றனர்.
உண்மையிலேயே இது வீடு சம்பந்தப்பட்ட பிரச்சனையா அல்லது படத்திற்கான ப்ரோமோஷன் வேலையா என்பது அடுத்த வீடியோவை கே.எஸ்.ரவிக்குமார் வெளியிடும்போது தெரியவரும்.