Skip to main content

“நாம் உறவுகளை உருவாக்கத் தேவையில்லை, ஆனால்...”- கரண் ஜோஹர் 

Published on 15/06/2020 | Edited on 15/06/2020

 

sushant with karan johar


என்.எஸ் தோனியின் வாழ்க்கை வரலாற்றுப் படத்தில் நடித்த சுசாந்த் சிங் ராஜ்புத், நேற்று மும்பை பாந்த்ராவிலுள்ள இல்லத்தில் தற்கொலை செய்துகொண்டுள்ள சம்பவம் பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. 34 வயதே ஆன சுசாந்த், தனது பொறியியல் படிப்பைப் பாதியிலேயே விட்டுவிட்டு, நடிப்பின் மீது ஆர்வம் கொண்டு ஹிந்தி டிவி சீரியலில் நடிகராக நடிக்க தொடங்கினார். அதன்பின் டிவி சீரியலிருந்து விடைபெற்று சினிமாக்களில் நடிக்க தொடங்கினார்.
 


'கை போ சே', 'ஷுத் தேஸி ரொமான்ஸ்', 'டிடெக்டிவ் ப்யோம்கேஷ் பாக்‌ஷி' உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ள சுசாந்த், சில வெற்றிகளையும் தோல்விகளையும் ஒரு சேர ருசித்துள்ளார். கடந்த ஐந்து மாதங்களாக மன அழுத்தத்தில் இருக்கிறார் என்று போலீஸார் நடத்திய முதல்கட்ட விசாரணையில் தெரிகிறது. இவரின் மறைவிற்கு திரையுலக பிரபலங்கள், அரசியல் தலைவர்கள், இந்திய விளையாட்டு வீரர்கள் என அனைவரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

இதனிடையே பிரபல பாலிவுட் இயக்குனரும், தயாரிப்பாளருமான கரண் ஜோஹர் சுசாந்தின் மறைவு குறித்து ட்விட்டரில் உருக்கமாகப் பதிவிட்டுள்ளார். அதில், “கடந்த ஒரு வருடமாக நான் உன்னுடன் தொடர்பில் இல்லாதது குறித்து என்னை நானே குற்றம் கூறிக் கொள்கிறேன். உனக்கு மனிதர்கள் தேவைப்பட்ட காலங்களில் அதை நான் உணர்ந்தேன். ஆனால் எப்படியோ அந்த உணர்வைப் பின் தொடரவில்லை. இனி வாழ்வில் அந்தத் தவற்றைத் திரும்பச் செய்யமாட்டேன். நாம் மிகவும் உற்சாகமான, இரைச்சலான, அதே நேரத்தில் மிகவும் தனிமையான வாழ்வை வாழ்கிறோம்.
 

 


நம்மில் சிலர் இந்த அமைதியை எதிர்த்துப் போராடாமல் அதனுள் சென்று விடுகிறோம். நாம் உறவுகளை உருவாக்கத் தேவையில்லை, ஆனால் அதைத் தொடர்ந்து பாதுகாக்க வேண்டும். சுஷாந்தின் துரதிர்ஷ்டவசமான மறைவு என்னுடைய இரக்கத்தை மதிப்பீடு செய்யவும், என்னுடைய சமநிலைகளைப் பாதுகாக்கவும் எனக்கு ஒரு எச்சரிக்கை மணி. இது உங்கள் அனைவருக்கும் கேட்கும் என்று நம்புகிறேன். உன் வசீகரமான புன்னகையையும், அரவணைப்பையும் நான் மிஸ் செய்வேன்" என்று தெரிவித்துள்ளார். 

 

சார்ந்த செய்திகள்