Skip to main content

"விஷால் சாருக்கு இது பிடிக்காது என்றார்கள்; ஆனால் அவருக்கு அதுதான் பிடித்திருந்தது" - இயக்குநர் து.ப. சரவணன் பேட்டி 

Published on 07/02/2022 | Edited on 07/02/2022

 

T.P.Saravanan

 

அறிமுக இயக்குநர் து.ப. சரவணன் இயக்கத்தில் விஷால், டிம்பிள் ஹயாத்தி உள்ளிட்ட பலர் நடிப்பில் கடந்த 4ஆம் தேதி வெளியான வீரமே வாகை சூடும் திரைப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றுவருகிறது. இந்த நிலையில், படத்தின் இயக்குநர் து.ப. சரவணனை நக்கீரன் ஸ்டூடியோ சார்பில் சந்தித்தோம். அந்த சந்திப்பில் அவர் நம்மிடம் பகிர்ந்துகொண்டவை பின்வருமாறு...

 

"ஸ்கூல் படிக்கும் போதிலிருந்தே எனக்கு சினிமா மீது ஆர்வம் உண்டு. அந்த சமயத்தில் எங்கள் ஊரில் பெரிய அளவில் திரையரங்குகள் கிடையாது. டி.டி.எஸ் சவுண்ட்ல படம் பார்க்கணும்னா பாண்டிச்சேரிக்குத்தான் போகணும். மணி சாரின் “உயிரே” படமெல்லாம் பாண்டிச்சேரியில்தான் நான் பார்த்தேன். அப்படியே சினிமா மீது ஆர்வம் அதிகமாக ஆரம்பித்தது. செழியன் சாரின் வருகைக்கு பிறகு உலக படங்கள் அறிமுகமாக ஆரம்பித்தன. டிவிடி வாங்கி உலக படங்கள் நிறைய பார்க்க ஆரம்பித்தேன். 

 

சின்ன சின்ன படங்களில்தான் உதவி இயக்குநராகப் பணியாற்றினேன். தனியாக படம் பண்ண வேண்டும் என்று நினைத்தபோது எதுவும் சரியாக அமையவில்லை. முதலில் மற்றவர்களை திரும்பி பார்க்க வைக்கும்படி நாம் ஏதாவது செய்ய வேண்டும். எதுவும் செய்யாமல் எனக்கு அது தெரியும் இது தெரியும் என்று வாயால் கூறிக்கொண்டே இருந்தால் மட்டும் போதாது என்று முடிவெடுத்து குறும்படம் இயக்கினேன். அந்தக் குறும்படமும் நூற்றில் ஒன்றாக இருந்துவிடக்கூடாது. தனித்துவமாக இருக்க வேண்டும் என்று தீர்மானித்து 'எது தேவையோ அதுவே தர்மம்' குறும்படத்தை இயக்கினேன். 

 

நிறைய பேரோட கவனம் கிடைக்க வேண்டும் என்பதால் இண்டஸ்ட்ரில உள்ள பெரிய 10 இயக்குநர்கள் எனது குறும்படத்தை வெளியிட வேண்டும் என்று விரும்பினேன். ஒவ்வொருவராக சந்தித்து அவர்களிடம் இந்தக் குறும்படத்தை கொடுத்தேன். அப்படித்தான் விஷால் சார் ஆபிஸிலும் கொடுத்தேன். முதலில் அவர்களிடம் இருந்து எந்த பதிலும் வரவில்லை. படத்தை வெளியிட நாங்கள் திட்டமிட்டிருந்த தேதிக்கு ஒருநாளைக்கு முன்பாக விஷால் சாரிடம் இருந்து ஃபோன் வந்தது. குறும்படம் சிறப்பாக இருப்பதாகவும் முழுமையான ஒரு படம் பார்த்த திருப்தி இருப்பதாகவும் கூறினார்.

 

நான் நடிப்பது மாதிரி ஏதாவது கதை வச்சுருக்கீங்களா என்று கேட்டார். அப்போது என்னிடம் ஒரு கதை ஒன்லைனாக மட்டும் இருந்தது. அவரிடம் கொஞ்சம் டைம் கேட்டு, ஒரு மாதத்தில் முழுக்கதையையும் முடித்து அவரிடம் சென்று சொன்னேன். அவருக்கு கதை ரொம்பவும் பிடித்திருந்தது. அப்படித்தான் இந்தப் படம் தொடங்கியது. 

 

படத்தில் ஆக்ஷன் சீன்ஸ் எல்லாமே ரொம்பவும் மெனக்கெடல் எடுத்து விஷால் சார் செய்தார். டூப் வச்சு பண்ணிக்கலாம்னு மாஸ்டர்ஸ் சொன்னாலும் இல்ல... நானே பண்றேன்னு சொல்லி விஷால் சாரே செய்தார். இந்தப் படத்துலயே அவருக்கு இரண்டு முறை அடிபட்டிருச்சு. ஹைதராபாத்தில் பைட் சீன் எடுக்கும்போது முதுகுல அடிபட்டிருச்சு. இன்னைக்கு வரைக்கும் அந்த வலி அவருக்கு இருக்கு. ஒரே டேக்கில் எல்லாவற்றையும் ஓகே பண்ணி நாம திட்டமிட்டதைவிட வேகமாக முடித்துக்கொடுத்துவிடுவார். 

 

இந்தப் படத்திற்கு முதலில் சாமானியன் என்றுதான் பெயர் யோசித்து வைத்திருந்தேன். விஷால் சார் மாதிரியான பெரிய நடிகர் நடிக்கும்போது சாமானியன் என்று பெயர் வைத்தால் சிறப்பாக இருக்காது. விஷால் சாரே அதை ஏற்றுக்கொள்ளமாட்டார் என்று நிறைய பேர் சொன்னார்கள். ஆனால், விஷால் சாருக்கு அந்தத் தலைப்பு ரொம்பவும் பிடித்திருந்தது. அந்தத் தலைப்பை வேறு ஒருவர் பதிவு செய்திருந்ததால் அதை வைக்க முடியவில்லை. பின், வேறொரு தலைப்பு யோசித்தோம். அதையும் இன்னொருவர் பதிவு செய்திருந்தார். அதன் பிறகு வைத்த பெயர்தான் வீரமே வாகை சூடும்".

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“கட்டப்பஞ்சாயத்து செய்கிறார்கள்” - விஷால் பகிரங்க குற்றச்சாட்டு 

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
vishal allegation about theatre owners for not allocating theatres for rathnam movie

விஷால் - ஹரி கூட்டணியில் மூன்றாவது படமாக உருவாகியுள்ள படம் ரத்னம். இப்படத்தை கார்த்திக் சுப்புராஜ் தயாரிக்க பிரியா பவானி ஷங்கர் கதாநாயகியாக நடித்துள்ளார். கௌதம் மேனன், சமுத்திரக்கனி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார். இப்படம் ஏப்ரல் 26ஆம் தேதி உலகெங்கும் தமிழ் மற்றும் தெலுங்கில் வெளியாகவுள்ளது. இதனால் தற்போது புரொமோஷன் பணிகளில் படக்குழு தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. அந்த வகையில் ரத்னம் படத்தின் போஸ்டர் மற்றும் பெரிய திரை (எல்இடி) உடன் கூடிய வேன் கடந்த 4ஆம் தேதி முதல் தமிழகம் முழுவதும் உலா வரும் என அறிமுகப்படுத்தப்பட்டது. 

பின்பு விஷால் மற்றும் ஹரி இருவரும் சென்னை, திருச்சி உள்ளிட்ட ஊர்களில் கல்லூரியில் புரொமோஷன் நிகழ்ச்சி நடத்தி படத்தை விளம்பரப்படுத்தி வந்தனர். மேலும் புதுச்சேரியில் ஹரி, கடை வீதிகளில் ஒவ்வொரு கடையாக சென்று படத்தை பார்க்கும்படி கேட்டுக்கொண்டார். இந்த நிலையில் திருச்சி, தஞ்சாவூர் பகுதி திரையரங்குகளில் ரத்னம் படம் வெளியிடுவதற்கு தடை விதித்துள்ளதாக புகார்கள் எழுந்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த விவகாரம் தொடர்பாக விஷால் குற்றச்சாட்டு குறித்து பேசிய ஆடியோ தற்போது வெளியாகியுள்ளது. அந்த ஆடியோவில், “சங்கத்தின் தலைவர் மீனாட்சி மற்றும் செயலாளர் சிதம்பரம் என்னுடைய ஃபோனை எடுக்க மறுக்கிறார்கள். என் நண்பர் சீனு சார், ரத்னம் படத்தை வடக்கு மற்றும் தெற்கு பதிகளில் வாங்கியிருக்கிறார். ஒரு திரைப்படம் வெளியாவதே பெரிய விஷயம். இந்த காலகட்டத்தில் இப்படி நீங்க பண்ணும் போது இதற்கு பெயர் கட்டப்பஞ்சாயத்து.   

இதில் முதலமைச்சர் திருச்சி கலெக்டர், எஸ்.பி, காவல் துறையினர் என அனைவருக்கும் நான் சொல்ல விருப்பப்படுவது, அவர்கள் செய்வது கட்டப்பஞ்சாயத்தை தவிர்த்து வேற எதுவும் கிடையாது. விஷாலுக்கே இந்த கதி என்றால் நாளைக்கு ஒரு புதுமுக நடிகருக்கு என்ன நடக்கும். நீங்க ஃபோன் எடுக்காமல் இருப்பது, தியேட்டர் ஒதுக்கப்படாமல் இருப்பது, அது உங்களுடைய அலட்சியம். ஆனால் அந்த அலட்சியத்தைப் பார்த்து நான் சும்மா இருக்க மாட்டேன்” என கூறுகிறார். 

Next Story

“சாதியைத் தூக்கிப் பிடித்து எந்தக் காலத்திலும் படம் வந்தது கிடையாது” - ஹரி

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
hari about caste related cinema in rathnam movir promotion

விஷால் - ஹரி கூட்டணியில் மூன்றாவது படமாக உருவாகியுள்ள படம் ரத்னம். இப்படத்தை கார்த்திக் சுப்புராஜ் தயாரிக்க பிரியா பவானி ஷங்கர் கதாநாயகியாக நடித்துள்ளார். கௌதம் மேனன், சமுத்திரக்கனி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார். இப்படம் ஏப்ரல் 26ஆம் தேதி உலகெங்கும் தமிழ் மற்றும் தெலுங்கில் வெளியாகவுள்ளது. இதனால் தற்போது புரொமோஷன் பணிகளில் படக்குழு தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. அந்த வகையில் ரத்னம் படத்தின் போஸ்டர் மற்றும் பெரிய திரை (எல்இடி) உடன் கூடிய வேன் கடந்த 4ஆம் தேதி முதல் தமிழகம் முழுவதும் உலா வரும் என அறிமுகப்படுத்தப்பட்டது. 

பின்பு விஷால் மற்றும் ஹரி இருவரும் சென்னை, திருச்சி உள்ளிட்ட ஊர்களில் கல்லூரியில் புரொமோஷன் நிகழ்ச்சி நடத்தி படத்தை விளம்பரப்படுத்தி வருகின்றனர். அந்த வகையில் புதுச்சேரியில் ஹரி, கடை வீதிகளில் ஒவ்வொரு கடையாக சென்று படத்தை பார்க்கும்படி கேட்டுக்கொண்டார். பின்பு திரையரங்கு ஒன்றில், ரசிகர்களைச் சந்தித்து பேசிய அவர், “ஒரு படம் நல்லாயிருக்கு என்றால் எந்த காலத்தில் ரிலீஸ் செய்தாலும் வருவோம் என வந்திருக்கிறீர்கள். அதற்கு நன்றியும் வாழ்த்துகளும். உங்களை மாதிரி ஆடியன்ஸ் இருக்கும் போது எங்களுக்கு நல்ல சினிமா எடுக்க வேண்டும் என தோன்றும். அந்த வகையில் என்னுடைய ரத்னம் படம் ரிலீஸாகிறது. முதல் முறையாக யோகி பாபு ஆக்‌ஷன் காட்சிகளில் நடித்திருக்கிறார். ரோட்ல ஒரு பொண்ணுக்கு பிரச்சனை என்றால் விடக்கூடாது. இந்தக் காலத்தில் போலிஸுக்கு பயந்து கொண்டு எதுவுமே பண்ணுவதில்லை. ஆனால் பிரச்சனை என்றால் தட்டி கேக்கணும். அந்த மாதிரி தட்டி கேட்கும் வேலையை தான் விஷால் படத்தில் பண்ணியிருக்கார்” என்றார்.     

பின்பு செய்தியாளர்களிடம் பேசிய அவர், “ரத்னம் படம் ஆக்‌ஷம் படம் என்றாலும் எமோஷனலும் இருக்கும். அதனால் குடும்பத்தோடு வந்து பார்க்கலாம். நாட்டில் எவ்வளவோ அநியாயம் நடந்துட்டு இருக்கு. நிறைய பேரு கெட்டவனா மாறிட்டான். சூழ்நிலை மாற வைக்கிறது. போதை பொருள்களும் புழக்கத்தில் சுத்திட்டு இருக்கு. இதனிடையே நல்லவர்களும் இருக்கிறார்கள். கெட்டவங்கிட்ட இருந்து நல்லவங்கள காப்பாத்தனும். மனிதனுக்கு மனிதன் தான் எதிரி” என்றார்.  

அவரிடம் சாதி வைத்து படமெடுப்பது குறித்து கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், “சாதியை மையமாக வைத்து எடுப்பது என்பதை, அவரவர்களுக்கு தெரிந்ததை வைத்து படமாக்குகிறார்கள் என்று தான் நல்ல நோக்கத்தோடு பார்க்க வேண்டும். தமிழ்நாட்டைப் பொறுத்தவரை ஒரு குறிப்பிட்ட ஊரை வைத்து படமெடுத்தாலே அங்கிருக்கிற சாதி, இயல்பாகவே கதைக்குள் வந்துவிடும். யாருமே வேணும் என்று சாதி வைத்து படமெடுப்பேன், என் சாதிக்காரன் மட்டும் பார்த்தால் போதும் என நினைப்பதில்லை. எல்லாருமே படம் பார்க்கணும். பக்கத்து மாநிலங்களில் இருப்பவர்களும் படம் பார்க்க வேண்டும். 

சாதி உயர்ந்தது, சாதியை தூக்கிப் பிடியுங்கள் என யாருமே படமெடுக்க மாட்டார்கள். எந்தக் காலத்திலும் அப்படி வந்தது கிடையாது. படத்தில் ஒரு நெகட்டிவ் கேரக்டர் இருக்கும். அவன் அப்படித் தான் சாதி பற்றி பேசிட்டு இருப்பான். ஆனால் கடைசியில் மனம் திருந்துவது போல் தான் இருக்கும். சினிமாவைப் பொறுத்தவரை எல்லா இன மக்களும் வேலை பார்த்தால் தான் படமெடுக்க முடியும். எல்லா மக்களும் பார்த்தால் தான் ஒரு சினிமா வெற்றியடைய முடியும். அதனால் சினிமா என்பது மதம், சாதி, இனம், மொழி என எல்லாத்துக்கும் அப்பாற்பட்டது” என்றார்.