Skip to main content

"கமல் அப்படி கேட்டதும் எனக்கு 'பக்'குன்னு ஆயிடுச்சு" - மணிரத்னம் பகிர்ந்த சுவாரசிய சம்பவம்

Published on 09/11/2019 | Edited on 09/11/2019

நடிகர் கமல்ஹாசனின் பிறந்தநாள் கடந்த நவம்பர் 7 அன்று அவரது ரசிகர்களாலும் மக்கள் நீதி மய்ய தொண்டர்களாலும் கொண்டாடப்பட்டது. இந்த ஆண்டு, அவரது திரைப்பயணத்தின் 60ஆம் ஆண்டாகவும் இருக்கிறது. இதனை முன்னிட்டு தன்னுடைய பிறந்த நாளுக்கு மறுநாள் சென்னையில் தனது அலுவலக வளாகத்தில் தனது குருவான இயக்குனர் கே.பாலச்சந்தரின் திருவுருவ சிலையை திறந்தார் கமல். இந்நிகழ்வில் ரஜினிகாந்த், மணிரத்னம் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர். அதே தினத்தில் அவரது தயாரிப்பு நிறுவனமான ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இண்டெர்நேஷனல் நிறுவனத்தின் புதிய அலுவலக திறப்பு விழாவும் நிகழ்ந்தது.

 

maniratnam



நிகழ்ச்சியில் பேசிய இயக்குனர் மணிரத்னம், 'நாயகன்' பட சமயம் நடந்த ஒரு சுவாரஸ்யமான சம்பவத்தை பகிர்ந்தார். "நான் கமலிடம் முதலில் படத்தின் கதையை மேலோட்டமாகத்தான் கூறினேன். நான் சொன்னவுடன் அந்தக் கதை அவருக்குப்  பிடித்துவிட்டது. அவர் 3 மாதங்களில் ஷூட்டிங் ஆரம்பித்து விடலாம் என்று கூறினார். நானும் வந்துவிட்டேன். பின்னர் யோசிக்கும்பொழுதுதான் இது பீரியட் ஃபிலிம் என்பதால் படத்தின் பட்ஜெட் அதிகமாகும் என்று எனக்கு விளங்கியது. ஆனால், நாங்கள் அப்போது பேசிக்கொண்டிருந்த தயாரிப்பாளர்கள் சின்ன பட்ஜெட்டில் படம் எடுப்பவர்கள், மதிய உணவு நேரம் வரும் முன்பே ஜூனியர் ஆர்டிஸ்டுகளின் வேலையை முடித்து அனுப்பிவிட்டால் அதனால் ஏற்படும் செலவு குறையுமே என்று பார்ப்பவர்கள். நான் அவர்களைப் பற்றி கேள்விப்பட்டது அப்படி.


அடுத்த நாளே மீண்டும் அப்பாயின்மென்ட் வாங்கிக் கொண்டு கமலை சந்தித்து நான் நிலைமையை விவரித்தேன். "எடுத்தா நல்லா எடுக்கணும், இல்லைனா ஒன்னு என்னை விட்ருங்க, இல்ல இந்தப் படத்தை விட்ருங்க"னு சொன்னேன். "சரி இருங்க வறேன்"னு சொல்லிட்டுப் போனார். நான் வேற ஏதோ வேலையா போறாருன்னு நினைச்சேன். கொஞ்ச நேரத்தில் திரும்பி வந்து அவர் பேசிக்கொண்டிருக்கும்போது தயாரிப்பாளர்கள் வந்துட்டாங்க. அப்புறம்தான் தெரியுது அவர் போய் ஃபோன் பண்ணி அவுங்கள வர வச்சிருக்கார் என்பது.

தயாரிப்பாளர்களிடம் பேசிய கமல், என்னையும் வச்சுக்கிட்டே அவர்களிடம் சொன்னார், "மணி சொல்றார்... நீங்க மதிய உணவுக்கு முன்னாடியே ஜூனியர் ஆர்டிஸ்டுகளை முடிச்சு அனுப்பிருவீங்களாமே... இப்படி இருந்தா எப்படி படம் பண்ணுவது?" என்று கேட்டார். கமல் இப்படி கேட்டதும் எனக்கு 'பக்'குன்னு ஆயிருச்சு. அந்த தயாரிப்பாளர்கள், "இல்ல சார். இதுவரை வேற மாதிரி. ஆனா, இந்தப் படம் பெருசா பண்ணணும் என்றுதான் முடிவுபண்ணி இறங்கியிருக்கோம்" என்றனர். அப்படி பேசி பின்னர் தொடங்கியது 'நாயகன்'. இந்த சமபவத்தில் நான் கமலிடம் கற்றுக்கொண்டது அவருடைய மேலாண்மையை. ஒரு பிரச்சனையை தனித்தனியாகப் பேசிக்கொண்டு இழுத்துக்கொண்டே போகாமல், உடனே நேரில் பேசி தீர்த்து அடுத்த வேலைக்கு நகர்ந்தார். இந்த மேனேஜ்மண்ட்டை அவரிடம் கற்றுக்கொண்டேன். அதன் பிறகு 'நாயகன்' சமயத்தில் நிறைய கற்றுக்கொண்டேன்" என்றார்.         

 


 

சார்ந்த செய்திகள்