Skip to main content

ரஜினி ரசிகராக நடித்திருக்கும் சுசாந்த்! வைரலாகும் புகைப்படங்கள்!

Published on 07/07/2020 | Edited on 07/07/2020

 

sushant with rajni

 

எம்.எஸ். தோனியின் வாழ்க்கை வரலாற்றுப் படத்தில் நடித்த சுசாந்த் சிங் ராஜ்புத், கடந்த ஜூன் 14ஆம் தேதி மும்பை பாந்த்ராவிலுள்ள இல்லத்தில் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. 34 வயதே ஆன சுசாந்த், தனது பொறியியல் படிப்பைப் பாதியிலேயே விட்டுவிட்டு, நடிப்பின் மீது ஆர்வம் கொண்டு ஹிந்தி டிவி சீரியலில் நடிகராக நடிக்க தொடங்கினார். அதன்பின் டிவி சீரியலிருந்து விடைபெற்று சினிமாக்களில் நடிக்க தொடங்கினார்.

 

'கை போ சே', 'ஷுத் தேஸி ரொமான்ஸ்', 'டிடெக்டிவ் ப்யோம்கேஷ் பாக்‌ஷி' உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ள சுசாந்த், சில வெற்றிகளையும் தோல்விகளையும் ஒரு சேர ருசித்துள்ளார். அவரது மரணத்தைத் தொடர்ந்து பாலிவுட்டில் பல சர்ச்சைகள், கிளர்ச்சிகள் உருவாகியுள்ளன என்றே சொல்லலாம். பலரும் சுசாந்தின் மரணம் தற்கொலை அல்ல கொலை, ஹிந்தி சினிமா துறையிலிருக்கும் வாரிசுகளால் ஒதுக்கப்பட்டதால்தான் இந்த முடிவை எடுத்துக்கொண்டார் என்று தெரிவித்து வருகின்றனர்.

 

அண்மையில் சுசாந்த் நடித்து வெளியாக இருந்த கடைசி படம் ‘தில் பேசாரா’ படம் ஜூலை 24ஆம் தேதி நேரடி டிஜிட்டல் ரிலீஸ் செய்யப்படும் என்று டிஸ்னி ப்ளஸ் நிறுவனம் தெரிவித்தது. 'ஃபால்ட் இன் அவர் ஸ்டார்ஸ்' என்னும் ஆங்கில நாவலை மையமாக வைத்து எடுக்கப்பட்ட ஆங்கிலப் படத்தின் ஹிந்தி ரீமேக்தான் இப்படம். 'ஃபாக்ஸ் ஸ்டார்ஸ்' நிறுவனம் தயாரித்த இந்தப் படத்திற்கு ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்துள்ளார். சுசாந்திற்கு மரியாதைச் செலுத்தும் விதமாக இந்தப் படத்தை இலவசமாக வெளியிடுவதாக டிஸ்னி ப்ளஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது. 

 

அனைவரும் எதிர்பார்த்துக் காத்திருந்த 'தில் பேச்சாரா' ட்ரைலர் நேற்று மாலை நான்கு மணிக்கு இணையத்தில் வெளியானது. இன்னும் 24 மணிநேரம் முடிவடையாத நிலையில் இப்படத்தின் ட்ரைலரை 2.40 கோடி பேர் பார்த்துள்ளனர். மேலும், இந்தப் படத்தில் சுசாந்த் சிங் ராஜ்புத் ரஜினி ரசிகராக நடித்திருக்கிறார் என்று தகவல் வெளியாகியுள்ளது. ட்ரைலரில் அவர் தங்கியிருக்கும் ரூமினுள் 'கபாலி' மற்றும் 'தளபதி' பட ரஜினி ஸ்டில் போஸ்டர்கள் இருப்பதை ரசிகர்கள் கண்டுபிடித்துள்ளனர். மேலும், இந்தப் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன. 
 

 

 

 

சார்ந்த செய்திகள்