Skip to main content

சிவகார்த்திகேயன் தொடர்ந்த வழக்கில் நீதிமன்றம் புதிய உத்தரவு

Published on 26/04/2022 | Edited on 26/04/2022

 

chennai high court new order sivakarthikeyan and gnanavel raja case

 

கடந்த 2019 ஆம் ஆண்டு சிவகார்த்திகேயன் நடிப்பில் ஞானவேல் ராஜா தயாரிப்பில் வெளியான 'மிஸ்டர் லோக்கல்' படம் கலவையான விமர்சனங்களை பெற்றது. அண்மையில் இப்படத்தின் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜாவுக்கு எதிராக நடிகர் சிவகார்த்திகேயன் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு ஒன்றைத் தொடுத்திருந்தார். அதில், "மிஸ்டர் லோக்கல் படத்திற்கு பேசப்பட்ட ரூ.15 கோடி சம்பளத்தில் ரூ. 11 கோடியை மட்டுமே தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா தந்ததாகவும், மீதமுள்ள ரூ.4 கோடியை பெற்று தர வேண்டும் எனவும் நடிகர் சிவகார்த்திகேயன் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே போல அந்த மனுவில் சம்பளப் பாக்கியை செலுத்தும் வரை ஞானவேல்ராஜா தயாரிக்கும் படங்களில் அவர் முதலீடு செய்வதற்கும், தியேட்டர், ஓடிடி வெளியீடு உரிமைகளை உறுதி செய்யவும் தடை விதிக்க வேண்டும் எனவும் சிவகார்த்திகேயன் தரப்பு நீதிமன்றத்தில் தெரிவித்திருந்தது. 

 

இதனைத்தொடர்ந்து தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா தரப்பிலிருந்து, சிவகார்த்திகேயன் கட்டாயத்தின் பேரில் தான் மிஸ்டர் லோக்கல் படம் எடுக்கப்பட்டது என்றும், அதனால் தங்களுக்கு ரூ. 20 கோடி  நஷ்டம் ஏற்பட்டுள்ளதாகவும், அபாரதத்துடன் இவ்வழக்கை தள்ளுபடி செய்யவேண்டும் என்று பதில்  மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

 

இந்நிலையில் இந்த வழக்கை விசாரித்த நீதிபதி எம். சுந்தர் சம்பள பாக்கி தொடர்பாக சமரச தீர்வாளரை நியமித்து இவ்விவகாரத்தில் தீர்வுகாண உத்தரவிட்டுள்ளார். அத்துடன் சிவகார்த்திகேயன் தரப்பிலிருந்து ஞானவேல் ராஜா படங்களுக்கு தடை விதிக்க வேண்டும் என்ற கோரிக்கையை நிராகரித்தது வழக்கை முடித்து வைத்து உத்தரவிட்டுள்ளார். 

 

 

சார்ந்த செய்திகள்