Skip to main content

"கோர்ட் கூண்டுக்குள் நின்று என் லவ் ஸ்டோரிய அஜித்திடம் சொன்னேன்" - நடிகர் பாலா சரவணன் பகிர்ந்த சுவாரசிய தகவல்

Published on 26/02/2022 | Edited on 26/02/2022

 

Bala Saravanan

 

பிரசாத் பாண்டியராஜ் இயக்கத்தில் விமல், இனியா, முனீஷ்காந்த், பாலா சரவணன், ஆர்.என்.ஆர் மனோகர் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவான விலங்கு வெப் சீரிஸ், கடந்த 18ஆம் தேதி ஜி 5 ஓடிடி தளத்தில் வெளியானது. மொத்தம் 7 தொடர்களைக் கொண்ட இந்த வெப்சீரிஸுக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ள நிலையில், இந்தத் தொடரில் கருப்பு கதாபாத்திரத்தில் நடித்துள்ள நடிகர் பாலா சரவணனை நக்கீரன் ஸ்டூடியோ சார்பில் சந்தித்தோம். அந்த சந்திப்பில் பல்வேறு விஷயங்கள் குறித்து பேசிய பாலா சரவணன், வேதாளம் படத்தில் அஜித்துடன் இணைந்து நடித்த அனுபவம் குறித்து பகிர்ந்துகொண்டவை பின்வருமாறு...   

 

"அஜித் சாருடன் நடித்த அனுபவம் வாழ்க்கையில் மிக முக்கியமான ஒன்று. அவர் மிகவும் எளிமையான மனிதர் என்று கேள்விப்பட்டிருக்கிறோம். ஆனால், நேரில் பார்த்தபோது கேள்விப்பட்டதைவிட ரொம்பவும் எளிமையாக இருந்தார். செட்டில் உள்ள பெரிய நடிகர்கள், வளர்ந்துவரும் நடிகர்கள், அறிமுக நடிகர்கள், தொழில்நுட்ப கலைஞர்கள் என அனைவரையுமே ஒரே மாதிரியாக நடத்துவார். வேதாளம் படத்தில் அந்த கோர்ட் சீன் எடுத்தபோது, சார் உங்ககிட்ட நான் பேசணும் சார், வந்ததிலிருந்தே ரொம்பவும் பரபரப்பாகவே இருக்கீங்க என்றேன். அஜித் சார் உடனே, என்ன சரவணன்... வாங்க பேசுவோம்... இதுல என்ன இருக்கு என்று அந்த கோர்ட் கூண்டுக்குள் நின்றே 20 நிமிடங்கள் என்னிடம் பேசினார். என் வாழ்க்கையில் அது மறக்கமுடியாத தருணம். 

 

அஜித் சார் பற்றி எல்லோருமே ஏன் ஒரே விஷயத்தைக் கூறுகிறார்கள் என்றால் அனைவருக்குமே ஒரே மாதிரியான அன்பு அவரிடம் இருந்து கிடைத்துக்கொண்டு இருக்கிறது. அந்த 20 நிமிடங்களில் என்னுடைய லவ் ஸ்டோரி பற்றியும் அவரிடம் சொன்னேன். கல்யாணத்திற்கு வீட்டில் எதிர்ப்பு இருந்ததால் முதலில் ரெஜிஸ்டர் மேரேஜ்தான் செய்தேன். பிறகு, இரு வீட்டார் சம்மதத்தோடு பெரிய கல்யாணம் நடத்தினோம். இன்றைக்கு இரு வீட்டாருமே சந்தோஷமாக உள்ளோம். இந்த விஷயங்களையெல்லாம் அவரிடம் கூறியபோது, இப்ப மாமனார் வீட்டில் நல்ல கவனிப்பா என்று சிரித்துக்கொண்டே கேட்டார். இப்ப நல்லா கவனிச்சுக்குறாங்க என்று நான் கூறியதும், அன்ப கொடுக்குறதுல நம்ம ஊர் ஆளுக எப்போதும் சூப்பருங்க என்று அஜித் சார் சொன்னார். நம்முடைய கதையை பொறுமையாக கேட்டு அதற்கு சுவாரசியமாக அஜித் சார் பதில் சொல்கிறார் என்பதெல்லாம் மிகப்பெரிய கொடுப்பனை". இவ்வாறு பாலா சரவணன் தெரிவித்தார்.

 

   

சார்ந்த செய்திகள்