![arun vijay](http://image.nakkheeran.in/cdn/farfuture/s9TCHZE64wn_7gsrCQSom6NnLVuW8K-zVxUWeVR-gsY/1544023008/sites/default/files/inline-images/_SKP9605.jpg)
நடிகர் அருண் விஜய் தனது அடுத்த படமான 'பாக்ஸர்' படத்தில் நடிக்க முழுமையான ஊக்கத்தோடு தயாராகி வருகிறார். குத்துச்சண்டை விளையாட்டை மையமாக வைத்து உருவாகும் இந்த படத்தை எட்செட்ரா எண்டர்டெயின்மெண்ட் சார்பில் வி.மதியழகன் தயாரிக்கிறார். இந்நிலையில் இப்படம் குறித்து நடிகர் அருண் விஜய் பேசும்போது... "இந்த படத்தின் தொடக்கத்தில் இருந்தே எல்லாமே என்னை கவர்ந்தது. இந்த படத்தின் அறிவிப்பு கூட எனக்கு ஆச்சர்யம் அளித்தது. ஆரம்பத்தில் ஜனவரி 2019 வாக்கில் திட்டமிட்டிருந்தோம். ஆனால், தயாரிப்பாளர் வி. மதியழகன் சார் எனக்கு பிறந்த நாள் பரிசாக முன்னதாகவே என் பிறந்த நாளில் படத்தை அறிவித்து என்னை ஆச்சர்யப்படுத்தினார். எனக்கு விளையாட்டை மையப்படுத்திய படத்தில் நடிப்பது கனவு என்பதால் இந்த படத்தை திறம்பட செய்வேன்.
இந்த ஸ்கிரிப்டில் எமோஷன் மற்றும் இன்ஸ்பிரேஷன் விஷயங்கள் நிறைய உள்ளன. அது என்னை கவர்ந்தது. வழக்கமாக, நாம் இதுவரை பார்த்த விளையாட்டு திரைப்படங்களில் போராடும் நாயகன், இறுதியில் கதாநாயகனாக உயர்ந்து நிற்பான். இந்த படத்தில், ஹீரோ ஆரம்பத்திலேயே மிகப்பெரிய குத்துச்சண்டை வீரர். அவர் தனது குறைகளை எதிர்கொண்டு அடுத்த கட்டத்துக்கு செல்வது தான் கதை. டிசம்பர் மாதம் முதல் மலேசியாவிலும் வியட்நாமிலும் குத்துச்சண்டை பயிற்சி துவங்க இருக்கிறது. இது ஃப்ரீஸ்டைல் குத்துச்சண்டை மற்றும் தற்காப்பு கலை ஆகிய இரண்டையும் உள்ளடக்கியது. பீட்டர் ஹெய்ன் மாஸ்டர் எனக்கு பயிற்சியாளராக பணிபுரிகிறார்" என்றார்.