Skip to main content

எதார்த்தமாக விவேக் சொன்ன வசனம்... வாய்விட்டு சிரித்த இளையராஜா! 

Published on 14/05/2021 | Edited on 14/05/2021

 

vivek

 

நடிகர், இயக்குநர், பாடலாசிரியர், பத்திரிகையாளர் எனப் பன்முகத்தன்மையுடன் இயங்கிவரும் செந்தில்குமரன், நக்கீரன் ஸ்டூடியோ யூ-டியூப் சேனலில் சினிமா டைரீஸ் என்ற நிகழ்ச்சி வாயிலாக சினிமா மற்றும் அரசியல் பிரபலங்களின் அறியாத பக்கங்கள் குறித்து பல்வேறு விஷயங்களைப் பகிர்ந்து வருகிறார். அந்த வகையில்,சின்ன கலைவாணர் விவேக் குறித்து அவர் பகிர்ந்துகொண்டவை பின்வருமாறு...

 

அண்மையில் மறைந்த சின்ன கலைவாணர் விவேக், மிகப்பெரிய அதிர்ச்சியை மக்களுக்கு கொடுத்துவிட்டு போயிருக்கிறார். அவரது மரணம் குறித்து பல வாதப்பிரதிவாதங்கள் நடந்துகொண்டிருக்கின்றன. அதை உண்மையின் கரங்களிலேயே நாம் ஒப்படைத்துவிடுவோம். விவேக் சினிமா நடிகராக பிறந்தபோது நான் பத்திரிகையாளராக பிறந்திருந்தேன். நான் பத்திரிகையாளர் பணியை தொடங்கிய காலகட்டத்தில்தான் அவர் நடித்த மனதில் உறுதி வேண்டும், புதுப்புது அர்த்தங்கள் படங்கள் வெளியாகின. பத்திரிகையாளர்களுக்கான காட்சியிலேயே அவர் நடித்த படத்தைப் பார்த்துவிட்டு, இவர் பெரிய நடிகராக வருவார் என கணிக்கக்கூடிய அளவிற்கு  அவர் நடிப்பு இருந்தது. 'இன்னைக்கு செத்தா நாளைக்கு பால்' என்ற வசனம் மூலம் மக்களுடைய மனதில் முதல் அச்சாரம் போட்டு அமர்ந்தார். அதன் பிறகு, அவர் நடிகராக வளர்ந்தார்; நான் பத்திரிகையாளராக வளர்ந்தேன். 

 

விவேக்கை பொறுத்தவரை அனைவரையும் சிரிக்க வைக்கவேண்டும் என நினைப்பர். அதற்காக பயங்கரமாகக் கேலி செய்வார். அவர் தவறான நோக்கம் கொண்டவராக இல்லாவிட்டாலும்கூட இந்தக் காரணத்திற்காக சிலர் அவரிடமிருந்து விலகியே இருந்தார்கள். நம்மையும் கலாய்த்துவிடுவார் என்று நினைத்து நான்கூட அந்தக் காலகட்டத்தில் அவரிடமிருந்து கொஞ்சம் விலகியே இருந்தேன். நான் பத்திரிகையாளராக பணியாற்றிய அதே காலத்தில் ஆர்.பி.உதயகுமார் சாரிடம் உதவி இயக்குநராகவும் பணியாற்றினேன். நவரச நாயகன் கார்த்தி நடிப்பில் 'நந்தவன தேர்' படத்தில் ஹீரோவின் நண்பர்களாக வடிவேலும் விவேக்கும் நடித்திருப்பார்கள். இவர்கள் இருவருக்கும் நான்தான் வசனம் சொல்லிக்கொடுப்பேன்.  பேப்பரில் உள்ள வசனங்களை அவர்களுக்குள்ளாகவே பேசி, நாம் எழுதியைவிட சிறப்பான ஒன்றை உருவாக்கிவிடுவார்கள். அவர்கள் இருவரும் போட்டிபோட்டுக்கொண்டு வசனத்தைப் படிப்பதைப் பார்க்கும்போதே இவர்கள் இருவரும் தமிழ்சினிமாவில் மிகப்பெரிய உச்சத்திற்கு வருவார்கள் எனத் தோன்றியது.

 

முகபாவனையுடன் கூடிய நகைச்சுவையை வடிவேலு வெளிப்படுத்தி ஒரு பாதையில் பயணித்தால், அதிரடியான சின்னச்சின்ன வசனங்கள் மூலம் அனைவரையும் சிரிக்கவைத்து மற்றொரு பாதையில் விவேக் பயணித்தார்.  நந்தவன தேர் படத்திலிருந்தே ஓர் உதாரணத்தைக் கூறுகிறேன். கதாநாயகன் மாமா, கதாநாயகன் வீட்டிற்கு வருவார். கதாநாயகன் வீட்டு வாசலில் இருந்த விவேக், அவரை வரவேற்றுவிட்டு அவருக்காக டீ வாங்கச் செல்வார். டீ வாங்கச் சென்ற விவேக் திரும்பிவர நேரமாகிவிடும். இந்த இடைப்பட்ட நேரத்திற்குள் உள்ளே வீட்டிற்குள் சென்ற கதாநாயகன் மாமா, உள்ளே ஒரு சம்பவத்தைப் பார்த்துக் கண்கலங்கி வெளியே வருவார். டீ வாங்கச் சென்ற விவேக்கும், சரியாக அப்போது திரும்பிவருவார்.  விவேக் அவரிடம் டீயை நீட்ட, அவர் மேலும் கீழும் பார்த்துவிட்டு அழுதபடியே சென்றுவிடுவார். உடனே விவேக், என்ன சார்... கொஞ்சம் லேட் ஆகிறுச்சு... அதற்காக கோவிச்சுட்டு குடிக்கமாக அழுதுட்டு போறீங்களே என்பார்.  விவேக் இதை சொல்லி முடித்ததும் செட்டில் இருந்த அனைவரும் கைதட்டி சிரித்தனர். இந்த வசனம் பேப்பரில் இல்லை. இதேபோல நடிக்கும்போது எதார்த்தமாக அவர் கூறிய பல வசனங்கள் பெரிய அளவில் கொண்டாடப்பட்டுள்ளன. அந்தக்காட்சி பின்னணி இசைக்கு போகும்போது இசைஞானி இளையராஜா வாய்விட்டுச் சிரித்தார். ஆரம்பத்தில் இப்படி காமெடி பண்ணிக்கொண்டிருந்த விவேக், பிறகு சமூக அக்கறையுடைய கருத்துகளை காமெடிகளில் பயன்படுத்த ஆரம்பித்தார். சமூக அக்கறை கொண்ட கருத்துகள், படிப்பின் அவசியம், தீண்டாமை ஒழிப்பு ஆகியவற்றையெல்லாம் தீவிரமாகப் பேசினார். அப்துல்கலாம் ஐயாவை பின்பற்ற ஆரம்பித்த பிறகு, மரங்கள் நடத்தொடங்கினார். இதுவரை 28 லட்சம் மரங்கள் நட்டுள்ளார். அவரது இலக்கு ஒரு கோடி மரங்கள்; அதற்குள் அவரது மரணம் நிகழ்ந்துவிட்டது. 

 

Actor Senthilkumaran

 

எந்தப் பின்புலமும் இல்லாமல் தொடங்கிய விவேக், படிப்படியாக வளர்ந்து மிகப்பெரிய இடத்திற்கு உயர்ந்துவிட்டார். பத்திரிகையாளர், உதவி இயக்குநர் என வாழ்க்கையைத் தொடங்கிய நானும் இன்று நடிகராகிவிட்டேன். ஆரம்பத்தில் நான் நடித்த படங்களெல்லாம் எமோஷனல் படங்களாக இருந்தன. இனி  கொஞ்சம் வித்தியாசமாக நடிக்கலாம் என்று நினைத்தபோது, காமெடி கதாபத்திரத்தில் நடிக்க வாய்ப்பு வந்தது. விவேக்குடன் இணைந்து நடிக்கவேண்டும் என்றவுடன் உடனே சம்மதம் தெரிவித்துவிட்டேன். அப்படி அமைந்த படம்தான் 'தாராள பிரபு'. அந்த படத்தில் நான் நடித்த ஒரு காட்சிக்கு விவேக் கைதட்டினார். அதை பார்த்தவுடன் நந்தவன தேர் படப்பிடிப்பு தளத்தில் நாங்கள் அவருக்கு கைதட்டிய நினைவுகள் கண்முன் வந்துபோயின. மற்றவர்களுக்கு வாய்ப்பு வாங்கிக்கொடுக்க வேண்டும், மற்றவர்களுக்கு உரிய இடம் கொடுக்க வேண்டும் என்ற எண்ணம் கொண்டவராக விவேக் இருந்ததை நினைக்கும்போதே நெகிழ்ச்சியாக உள்ளது.

 

படப்பிடிப்பு தளத்தில் ஒருநாள் வெயில் அதிகமாக இருந்தது. எங்கள் பக்கத்தில் ஏர் கூலர் ஒன்றும் வைக்கப்பட்டிருந்தது. இருந்தும், அதிக வெக்கையாக இருந்தது. இதை நடிகர் ஹரிஷ் கல்யாண் சொன்னதும், இதற்குத்தான் மரம் நட வேண்டும் எனக் கூறுகிறோம் என அடுத்த நொடியிலேயே கூறினார். நான் உடனே, மரம் நடுவது இன்று பேஷனாகிவிட்டது. மரம் நடுவதில்தான் அனைவரும் கவனம் செலுத்துகின்றனர். அதை எப்படி வளர்ப்பது என்பது குறித்து யாரும் யோசிப்பதில்லை என்றேன். நீங்க சொல்வது சரிதான் என்று சொல்லி என் கையைப்பிடித்த விவேக், எந்தஎந்த மரங்களை எப்படி பாதுகாக்க வேண்டும் என விரிவாக விளக்கினார். அதையெல்லாம் கேட்ட பிறகு, எந்த அளவிற்கு இந்த விஷயங்களை அவர் நேசித்து செய்கிறார் என்பதை தெரிய முடிந்தது. அவரது மரணத்தை சின்ன கலைவாணர் பெரிய கலைவாணருடன் ஐக்கியமான நிகழ்வாகத்தான் பார்க்கிறேன்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

விவேக் இல்லத் திருமணம்; அப்பாவின் கனவை நோக்கி மகள்

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
vivek daughter marriage

பிரபல நகைச்சுவை நடிகர் விவேக் கடந்த 2021 ஆம் ஆண்டு உடல்நலக் குறைவால் காலமானார். அவருக்கு மூன்று குழந்தைகள் இருந்தன. பிரசன்னா குமார், அமிர்த நந்தினி மற்றும் தேஜஸ்வனி. இதில் பிரசன்னா குமார், மூளைக் காய்ச்சல் காரணமாக 2015 ஆம் ஆண்டு உயிரிழந்தார்.

இந்த நிலையில், மறைந்த விவேக்கின் மூத்த மகளான தேஜஸ்வினிக்கு தற்போது திருமணம் நடைபெற்றுள்ளது. பரத் என்பவரைத் திருமணம் செய்து கொண்ட நிலையில், திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் பலரும் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர். 

அப்போது மணமக்கள் இருவரும் மரக்கன்றுகள் மற்றும் மூலிகை பூச்செடிகள் நட்டனர். பின்பு வாழ்த்தியவர்களுக்கு மரக்கன்றை பரிசாக அளித்தனர். விவேக், முன்னாள் குடியரசுத் தலைவர் மறைந்த ஏ.பி.ஜே. அப்துல் கலாமின் வழியில் கிரீன் கலாம் என்ற திட்டத்தின் மூலம் 1 கோடி மரக்கன்றுகள் நடுவதை கனவாக வைத்திருந்தார் என்பதும் அதில் லட்சக்கணக்கான மரக்கன்றுகளை நட்டுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Next Story

“விவேக், மனோபாலா, மயில்சாமி மூவருடனான நட்பு”  - அனுபவம் பகிரும் எம்.எஸ். பாஸ்கர்

Published on 24/08/2023 | Edited on 24/08/2023

 

M. S. Bhaskar Interview  -  Vivek - Manobala - Mayilsamy

 

தன்னுடைய திரையுலக மற்றும் வாழ்வியல் அனுபவங்கள் பலவற்றையும் நடிகர் எம்.எஸ். பாஸ்கர் நம்மோடு பகிர்ந்து கொள்கிறார்.

 

நடிகர் விவேக் தமிழ்நாடு தலைமைச் செயலகத்தில் வேலை செய்துகொண்டிருந்தவர். என்னுடைய தம்பியும் அங்கு தான் வேலை செய்துகொண்டிருந்தார். கவிதாலயாவின் படங்களில் விவேக் நடித்தபோது நான் டப்பிங் ஆர்ட்டிஸ்டாக இருந்தேன். அப்போதே அவர் எனக்குப் பழக்கம். நான் வாய்ஸ் கொடுத்துக் கொண்டிருந்தபோது வாய்ஸ் எஃபெக்ட்டுகள் கொடுப்பவராக இருந்தவர் மயில்சாமி. மனோபாலாவும் எனக்கு நீண்ட கால பழக்கம். மயில்சாமி எனக்கு மிக நெருங்கிய நண்பன். மனோபாலாவை நான் அண்ணன் என்று தான் அழைப்பேன். 

 

என் மீது மனோபாலா மிகுந்த அன்போடு இருப்பார். மயில்சாமியை அடிக்கடி நான் சந்திப்பேன். சிவராத்திரி நிகழ்ச்சிக்கு வருகிறாயா என்று மயில்சாமி என்னை போனில் அழைத்தான். அன்று எனக்கு ஷூட்டிங் இருந்ததால் செல்ல முடியவில்லை. திடீரென்று அவன் இறந்துவிட்டான் என்கிற செய்தி வந்தது. என்னால் நம்ப முடியவில்லை. விவேக்கின் மரணமும் அப்படியானது தான். மனோபாலா அண்ணன் கொஞ்சம் உடல்நிலை சரியில்லாமல் இருந்தார். ஆனாலும் அவர் இறந்துபோவார் என்று நினைக்கவில்லை. என்னுடைய நெருங்கிய நண்பன் தினகரனும் சமீபத்தில் இறந்தான். 

 

என்னுடைய நண்பர்கள் பற்றியோ, நான் செய்யும் தானங்கள் பற்றியோ எதுவுமே தெரியாதவர்கள் என்னைப் பற்றி செய்யும் விமர்சனங்கள் அவர்களுடைய அறியாமையைத் தான் காட்டுகிறது. நான் பணம் கொடுக்கமாட்டேன் என்பது உண்மைதான். ஒருமுறை சுகர் மாத்திரை வாங்கப் பணம் வேண்டும் என்று உணவகத்தில் ஒருவர் கேட்டார். நான் நூறு ரூபாய் கொடுத்தேன். அதை எடுத்துக்கொண்டு நேராக அவர் டாஸ்மாக் சென்றார். அதிலிருந்து நான் பணமாக யாரிடமும் கொடுப்பதில்லை. மாத்திரை வேண்டுமென்றால் மருந்தகத்துக்கு அழைத்துச் சென்று நானே வாங்கித் தருவேன்.

 

சம்பாதிக்கும் அனைத்தையும் வாரிக் கொடுக்க வேண்டும் என்கிற அவசியம் இல்லை. ஒரு இயக்குநரின் இரண்டு படங்களில் அருமையான காட்சிகள் செய்திருந்தேன். அந்த இரண்டு காட்சிகளையும் அவர் வெட்டிவிட்டார். அது எனக்கு மிகுந்த ஏமாற்றத்தை அளித்தது. தெரிந்த ஒருவரிடம் நம்பி 5 லட்ச ரூபாயை அவருடைய வியாபாரத்துக்காக கொடுத்தேன். இன்று வரை அவர் திருப்பித் தரவில்லை. தரக்கூடிய நிலையில் அவர் இல்லை. கேட்டுக் கேட்டுப் பார்த்து விட்டுவிட்டேன். இனி உஷாராக இருக்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டேன். வாழ்க்கையில் எது கிடைத்தாலும் கிடைக்கவில்லை என்றாலும் பரவாயில்லை என்கிற மனநிலைக்கு நாம் வந்துவிட வேண்டும்.