
மே17 இயக்கம் சார்பில் ‘காந்தள்’ எனும் விழா சென்னை சைதாப்பேட்டையில் நடைபெற்றது. பாடல், இசை, கவிதை எனக் கலை விழாவாக நடந்த இந்த நிகழ்வில் நடிகர் மற்றும் தென்னிந்திய நடிகர் சங்க தலைவர் நாசர் கலந்து கொண்டார். இவரோடு நடிகர் இளவரசும் கலந்து கொண்டார். பின்பு விழாவில் விருது வென்றவர்களை வாழ்த்தி பேசினர்.
அப்போது இளவரசு பேசுகையில், “மக்களை அரசியல்படுத்துவது, ஜனநாயகப்படுத்துவது அவர்களுக்காக போராட்டம் நடத்துவது இவை அனைத்தும் அவசியமானதுதான். இருப்பினும் வாலிபத்தில் வாழ்வாதாரத்தைத் தொலைத்து விட்டு பின்பு தேடி விடாமல் எல்லாத்தையும் சேர்த்து உங்கள் வாழ்வாதாரத்தையும் சரி செய்து கொள்ளுங்கள். இல்லையெனில் நடுவயதில் மிகப்பெரிய சிக்கல்களை ஏற்படுத்திவிடக்கூடும்.
இந்திய ஜனநாயகத்தில் எல்லாருடைய தலைவர்களின் ஆரம்பமும் மிகப் பிரமாதமாகத்தான் இருந்தது. நடுவில்தான் திசை மாறிவிட்டது. அதற்கு காரணம் அவர்களின் வாழ்வதார சூழல். அதை அறிந்து கொண்டு அந்த பள்ளத்தில் விழுந்துவிடாமல் இருப்பதும் நமக்கான அரசியல்தான். என்னுடைய அரசியல் சுய அரம்தான். தேவையில்லாமல் எதிலும் தலையிடாமல் இருப்பது அடுத்த மனிதரை அவமதிக்காமல் இருப்பது மிகப் பெரிய அரசியலாக நான் நினைக்கிறேன்” என்றார்.