நாடு முழுவதும் வேகமெடுத்துவரும் கரோனா இரண்டாம் அலை காரணமாக தொற்றுக்குள்ளாவோரின் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்துவருகிறது. கரோனா தடுப்பு நடவடிக்கையாக மாநில அரசுகள், தங்கள் மாநிலத்தில் நிலவும் சூழலுக்கு ஏற்ப ஊரடங்கு உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளன. பல்வேறு கரோனா தடுப்பு வழிகாட்டுதல் நெறிமுறைகளை வகுத்துச் செயல்படுத்திவரும் மத்திய, மாநில அரசுகள், அதன் ஒரு பகுதியாக தடுப்பூசி செலுத்தும் பணிகளையும் முடுக்கிவிட்டுள்ளன.
மேலும், அரசியல் தலைவர்கள், திரையுலக பிரபலங்கள் உள்ளிட்டோர் பொதுமக்களுக்குத் தடுப்பூசி மற்றும் கரோனா குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்திவருகின்றனர். மேலும் சில பிரபலங்கள் கஷ்டப்படும் மக்களுக்கு கரோனா நிவாரண உதவிகள் செய்துவரும் நிலையில், ‘பிக்பாஸ் 4’ புகழ் நடிகர் ஆரி அர்ஜுனன் நேற்று (10.06.2021) திருவண்ணாமலை கிரிவலப் பாதையைச் சுற்றியுள்ள மக்களுக்கு அன்னதானம் வழங்கினார். ஊரடங்கு காலத்தில் திருவண்ணாமலையில் கிரிவலப் பாதையைச் சுற்றியுள்ள சாலையோரம் வசிக்கும் 100 பேருக்கு நேற்று தன் 'மாறுவோம் மாற்றுவோம்' அறக்கட்டளையின் மூலம் ஆரி அர்ஜுனன் உணவு அளித்தார்.