Skip to main content

இது சின்ன தல கோட்டை... இனி விசில் பறக்கும்...

Published on 19/03/2019 | Edited on 19/03/2019

மும்பை வான்கடே மைதானத்தில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் 2-வது குவாலிபயர் போட்டியில் 2014-ஆம் ஆண்டு மோதின. சேவாக்கின் அதிரடியால் 20 ஓவர்களில் 226 ரன்கள் குவித்திருந்தது பஞ்சாப். ஜான்சன் பவுலிங்கில் டூ ப்ளசிஸ் வெளியேற, சின்ன தல ரெய்னா களமிறங்கினார். ஜான்சன், சந்தீப் சர்மாவின்  மிரட்டல் பவுலிங்கில் அதிரடி மன்னன் டுவைன் ஸ்மித் தடுமாறிக் கொண்டிருந்தார். மறுபுறம் இறங்கிய ரெய்னா சந்தித்த பந்துகளை எல்லாம் பவுண்டரியும், சிக்ஸருமாக எல்லைக்கோட்டிற்கு அனுப்பிக் கொண்டிருந்தார்.

 

raina

 

6 ஓவர்கள் முடிவில் சிஎஸ்கே 100 ரன்களை விளாசியிருந்தது. ரெய்னா 12 பவுண்டரிகள், 6 சிக்ஸர்கள் உட்பட 25 பந்துகளில் 87 ரன்கள் எடுத்திருந்தார். அதற்கு முன்னர் வரை பவர் ப்ளே ஓவர்களில் ஒரு அணியின் அதிகபட்ச ஸ்கோரே 87 ரன்கள் தான். ஆனால் அந்த போட்டியில் பவர் ப்ளேவின்போது ரெய்னா மட்டுமே 87 ரன்கள் விளாசினார். இதுதான் ஐ.பி.எல். போட்டிகளில் ரெய்னாவின் பேட்டிங் ஸ்டைல். 
 

தனது அணி 10 ரன்களுக்கு 2 அல்லது 3 விக்கெட்களை இழந்து திணறும்போது களமிறங்கி, விக்கெட் விழாமல் பொறுமையான ரன் ரேட்டுடன் பேட்டிங் செய்பவர்கள் சிலருண்டு. அதே சூழ்நிலையில் அடித்து ஆடி ரன்கள் எடுத்து விக்கெட்களை பறிகொடுப்பவர்களும் உண்டு. ஆனால் ரெய்னாவை பொறுத்தவரை ஐ.பி.எல். போட்டிகளில் இந்த மாதிரி சூழ்நிலைகளில் நல்ல ரன் ரேட்டையும் மெயின்டைன் செய்து, தனது விக்கெட்டையும் பறிகொடுக்கமாட்டார். இந்த தனித்துவம்தான் மற்ற பேட்ஸ்மேன்களிடமிருந்து ரெய்னாவை சிறந்த பேட்ஸ்மேனாக ஐ.பி.எல். வெளிப்படுத்தியது. 

 

raina

 

உலகின் பிரபலமாக உள்ள சில கிரிக்கெட் வீரர்களுக்கு எதிராக இருக்கும் சில ரசிகர்களை கூட காணமுடியும். ஆனால் டிராவிட், டி வில்லியர்ஸ், ரெய்னா போன்ற வீரர்களை வெறுக்கும் கிரிக்கெட் ரசிகர்களை பார்ப்பது மிகவும் அரிது. ரெய்னாவின் செய்கைகள், சிரிப்பு, தனித்துவமான ஆட்டம் மூலம் ரசிகர்களிடம் தனி இடத்தை பிடித்துள்ளார். 
 

அணி வீரர்கள் சோர்வடையும்போது அவர்களை உற்சாகப்படுத்தும் வீரர், நல்ல பீல்டிங், சிறப்பான பந்து வீச்சு, விக்கெட், எதிரணி பேட்ஸ்மேனின் நல்ல இன்னிங்ஸ் என எதுவாக இருந்தாலும் மற்றவர்களை பாராட்டுவதில் முதல் ஆள், ஈகோ இல்லாமல் செயல்படும் வீரர், ஸ்பெஷல் ஷாட்ஸ், மாஸ் பீல்டிங், மனிதாபிமானம் உள்ளிட்டவை காரணமாக உலகம் முழுவதும் ரசிகர் பட்டாளம் வைத்துள்ளார் ரெய்னா. 

 

raina

 

மிரட்டலான வேகப்பந்து வீச்சில் பெரும்பாலான சிறந்த பேட்ஸ்மேன்கள் பவுண்டரிகள் அதிகம் அடிப்பார்கள். சிக்ஸர்கள் அடிக்க தயங்குவார்கள். ஆனால் ரெய்னாவை பொறுத்தவரை, ஆட்டத்தின் தொடக்கத்திலேயே சிறந்த வேகப்பந்து வீச்சில் சிக்ஸர்களை மிகவும் சாதாரணமாக விளாசுவார். ஐ.பி.எல். போட்டிகளில் இவருடைய பேட்டிங்க்கு இணை இவர் மட்டுமே. 
 

ஐ.பி.எல்.-லில் இதுவரை 172 இன்னிங்ஸ் விளையாடியுள்ள ரெய்னா, 448 பவுண்டரிகள், 185 சிக்ஸர்கள் உட்பட 4985 ரன்கள் எடுத்துள்ளார். பேட்டிங் சராசரி 34, ஸ்ட்ரைக் ரேட் 138. 27 முறை நாட் அவுட் பேட்ஸ்மேன். 25 விக்கெட்களையும் எடுத்து பார்ட் டைம் பவுலராக அணிக்கு பலம் சேர்த்து வருகிறார். பீல்டிங்கில் 95 கேட்ச்கள் பிடித்து, ஒரு பீல்டராக ஐ.பி.எல்.லில் அதிக கேட்ச் பிடித்தவர் என்ற சாதனையையும் வைத்துள்ளார். 
 

ஐ.பி.எல்.-லில் அதிக ரன்கள் எடுத்த வீரர் என்ற பெருமையும் ரெய்னாவுக்கு உண்டு. நடைபெற்ற அனைத்து ஐ.பி.எல்.-தொடர்களிலும் 350 ரன்கள் எடுத்த ஒரே வீரர் ரெய்னா. இன்சைடு அவுட், கவர் டிரைவ் போன்ற ஷாட்கள் இவரது ஸ்பெஷல். சின்ன தல, மிஸ்டர் ஐபிஎல், குட்டி தல என்ற புனை பெயர்களுக்கு சொந்தக்காரர். சர்வதேச போட்டிகளில் ஏற்ற இறக்கங்கள் இருந்தாலும், ஐ.பி.எல். இவருடைய கோட்டை என்றளவிற்கு சாதித்துள்ளார். 
 

raina

 

இன்னும் 15 ரன்கள் எடுத்தால் 5000 ரன்கள் எடுத்தால் ஐ.பி.எல். டி20 போட்டிகளில் 5000 ரன்கள் எடுத்த முதல் வீரர் என்ற பெருமையை பெறுவார். தனது ஆல்ரவுண்டர் செயல்பாடு மூலம் 4-வது முறை சிஎஸ்கே கோப்பையை வெல்லும் என்ற நம்பிக்கையுடன் களமிறங்குகிறார் ரெய்னா. 

 

 

 

 

 

 

Next Story

இவரின் தவறான அணுகுமுறையே மும்பையின் தோல்விக்கு காரணம் - முன்னாள் வீரர் காட்டம்

Published on 15/04/2024 | Edited on 15/04/2024
His wrong attitude was the reason for Mumbai's defeat - ex-player irfan pathan tells

இவரின் தவறான அணுகுமுறையே மும்பை அணியின் தோல்விக்கு காரணம் என்று முன்னாள் வீரர் இர்பான் பதான் கருத்து தெரிவித்துள்ளார்.

ஐபிஎல்2024 இன் 29ஆவது லீக் ஆட்டம் மும்பை வான்கடே மைதானத்தில் நேற்று தொடங்கியது. இதில் டாஸ் வென்ற மும்பை கேப்டன் ஹர்திக் முதலில் பந்து வீச முடிவு செய்தார்.

அதன்படி முதலில் களமிறங்கிய  சென்னை அணிக்கு தொடக்கம் சரியாக அமையவில்லை என்றாலும், கேப்டன் ருதுராஜ் மற்றும் சிவம் துபேவின் அதிரடி, சென்னை அணிக்கு கெளரவமான ஸ்கோரை எட்ட உதவியது. கேப்டன் ருதுராஜ் 40 பந்துகளில் 69 ரன்களும், ஷிவம் துபே 38 பந்துகளில் 66 ரன்களும் எடுத்தனர். கடைசி ஓவரில் தோனி அடித்த ஹாட்ரிக் சிக்சர்கள் உதவியுடன் சென்னை அணி 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 206 ரன்கள் எடுத்தது.

பின்னர் 207 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய மும்பை அணிக்கு ரோஹித், இஷான் இணை வழக்கம்போல அதிரடி துவக்கம் தந்தது. முதல் விக்கெட்டுக்கு இந்த இணை 70 ரன்கள் சேர்த்தது. ஆனால் இந்த இணையை பதிரனா பிரித்தார். இஷான் 23 ரன்களில் வெளியேற, அடுத்து வந்த சூர்யா ரன் எதுவும் எடுக்காமல் முஷ்டபிசுரின் அற்புதமான கேட்சால் ஆட்டமிழந்தார்.

அடுத்து வந்த திலக் வர்மாவுடன் சேர்ந்து ரோஹித் அதிரடியாக அரைசதம் கடந்தார். இந்த இணையும் 50 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தது. இவர்கள் எளிதில் அணியை வெற்றிக்கு அழைத்து செல்வார்கள் என்று எதிர்பார்த்த நிலையில், மீண்டும் பதிரனா இவர்களைப் பிரித்தார். திலக் வர்மா 31 ரன்களில் வெளியேறினார். பின்னர் வந்த கேப்டன் ஹர்திக் 2 ரன்னிலும், டிம் டேவிட் 13 ரன்களிலும், மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ஷெபர்டு 1 ரன்னிலும் ஆட்டமிழந்து வெளியேறினர்.

ஒரு பக்கம் விக்கெட்டுகள் விழுந்தாலும் மறுபக்கம் ரோஹித் நிலைத்து நின்று ஆடி சதம் கடந்தார். ஆனால் மற்ற வீரர்களின் ஒத்துழைப்பு இல்லாததால் மும்பை அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 186 ரன்களே எடுத்தது. ரோஹித் இறுதிவரை களத்தில் நின்று 105 ரன்கள் எடுத்தார். இதன் மூலம் சென்னை அணி 20 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று 8 புள்ளிகளுடன் 3ஆவது இடத்தில் நீடிக்கிறது. மும்பை அணி 8 ஆவது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது.

தோல்விக்கு ஹர்திக் பாண்டியா கடைசி ஓவர் வீசியதும், அவரின் மந்தமான பேட்டிங்குமே காரணம் என சமூக வளைத்தளங்களில் விமர்சிக்கப்பட்டு வருகிறது.

His wrong attitude was the reason for Mumbai's defeat - ex-player irfan pathan tells

இந்நிலையில், ஹர்திக்கின் தவறான அணுகுமுறைதான் தோல்விக்கான முக்கிய காரணம் என்கிற வகையில் முன்னாள் ஆல்ரவுண்டர் இர்பான் பதான் கருத்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவரது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது “ ஆகாஷ் மத்வால் மீது நம்பிக்கை வைக்காமல், டெத் ஓவரில் திறமையில்லாத ஹர்திக் கடைசி ஓவர் வீசி தன் திறமையின்மையைக் காட்டியுள்ளார் ” என்று கூறியுள்ளார். 

அவர் கூறுவது சரிதான் என்று ரசிகர்களும் அவரின் பதிவில் பின்னூட்டமிட்டு வருகின்றனர்.

Next Story

ஸ்லோ பவுன்சர்களால் திணறிய சென்னை; சன் ரைசர்ஸ் எளிதில் வெற்றி!

Published on 06/04/2024 | Edited on 06/04/2024
Chennai choked by slow bouncers; Sunrisers win easily!

ஐபிஎல் 2024இன் 18ஆவது லீக் ஆட்டம் சென்னை மற்றும் ஹைதராபாத் அணிகளுக்கிடையே நேற்று நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற ஹைதராபாத் அணி முதலில் பந்து வீச தீர்மானித்தது. அதன்படி முதலில் களமிறங்கிய சென்னை அணிக்கு ரச்சின் 12 ரன்னிலே வெளியேறினார். பின்னர் கேப்டன் ருதுராஜுடன் இணைந்த ரஹானே பொறுமையாக ஆடினார். ருதுராஜ் 26 ரன்களில் ஆட்டமிழக்க, அடுத்து வந்த சிவம் துபே அதிரடியாக ஆடினார். பொறுமையாக ஆடிய ரஹானே 35 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

அடுத்து வந்த ஜடேஜாவுடன் சிவம் துபேவும் இணைந்து அவ்வப்போது அதிரடி காட்டினர். ஆனாலும், ஹைதராபாத் அணி வீரர்களின் ஸ்லோ பவுன்சர்களால் சென்னை அணி வீரர்கள் நினைத்தபடி அதிரடியாக ஆட முடியவில்லை. ஹைதராபாத் அணி 277 ரன்கள் அடித்த மைதானம் தானா என்று சந்தேகம் எழும் அளவுக்கு மைதானத்தின் தன்மை மாறியிருந்தது. சிவம் துபே 45, ஜடேஜா 31, மிட்செல் 11 ரன்கள் உதவியுடன் 20 ஓவர்களில் 165 ரன்கள் எடுத்தது.

பின்னர் 166 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற ஓரளவு எளிதான இலக்குடன் களமிறங்கிய ஹைதராபாத் அணிக்கு அபிஷேக், ஹெட் துணை அதிரடி துவக்கம் தந்தது. முக்கியமாக அபிஷேக் ஷர்மா தனது அதிரடியான பேட்டிங்கால் சென்னை பவுலர்களை திகைக்க வைத்தார். 12 பந்துகளில் 4 சிக்சர்கள், 3 பவுண்டரிகள் உட்பட 37 ரன்கள் எடுத்து ஆரம்பத்திலேயே சென்னையின் வெற்றிக்கு முட்டுக்கட்டை போட்டார்.

ஹெட் 31 ரன்களில் ஆட்டமிழக்க, அடுத்து வந்த மார்க்ரம் நிதானமாக ஆடி அரைசதம் எடுத்து ஆட்டமிழந்தார். அஹமது 18 ரன்களில் ஆட்டமிழந்தார். இறுதியில் கிளாசென் 10, நித்திஷ் 14 ரன்கள் உதவியுடன் 18.1 ஓவர்களில் 166 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. ஆரம்பத்திலேயே அதிரடியாய் ஆடி ஹைதரபாத் அணியின் வெற்றிக்கு அடித்தளமிட்ட அபிஷேக் ஷர்மா ஆட்ட நாயகனாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்த வெற்றியின் மூலம் ஹைதராபாத் அணி 4 புள்ளிகளுடன் 5 ஆவது இடத்திற்கு முன்னேறி உள்ளது.