Skip to main content

‘அறியப்படாத மக்களின் குரலை அறிமுகப்படுத்தியவர்’ - சாகித்திய அகாடமி விருது பெற்ற தேவி பாரதி

Published on 20/12/2023 | Edited on 20/12/2023
Devibharathi is a Sahitya Akademi award winning write

இந்திய எழுத்தாளர்களுக்கு மத்திய அரசால் ஒவ்வொரு ஆண்டும் தேசிய அளவில் மாநில வாரியாக நாவல், சிறுகதை என ஆளுமை மிக்க இலக்கிய படைப்பாளர்களுக்கு சாகித்ய அகாடமி விருது வழங்கப்பட்டு வருகிறது. இந்த ஆண்டுக்கான சாகித்ய அகாடமி விருது திருப்பூர் மாவட்டம் நத்தக்காடையூர் அருகேயுள்ள புதுவெங்கரையாம் பாளையத்தைச் சேர்ந்த எழுத்தாளர் தேவி பாரதிக்கு(67)  வழங்கப்பட உள்ளது.

எளிய சாதாரண குடும்பப் பின்னணியைச் சேர்ந்த இவர் தொடக்கத்தில் மார்க்சிய அமைப்புகளோடுCPI(ML) தொடர்பில் இருந்தார். குறிப்பாக புரட்சிகர மாணவர் இளைஞர் இயக்கங்கள் நடத்திய பல்வேறு இயக்கங்களில் நேரடியாக பணியாற்றியவர். தொடர்ந்து அவர் அரசுப் பணியில் சிவகிரி, முத்தூர், தாண்டாம்பாளையம் உள்ளிட்ட அரசு மேல்நிலைப் பள்ளிகளில் அலுவலக எழுத்தராகப் பணிபுரிந்தவர். 

விருப்ப ஓய்வு பெற்று, முழுநேர இலக்கியவாதியாக காலச்சுவடு போன்ற இலக்கிய பத்திரிகைகளில் ஆசிரியராகப் பணியாற்றினார். சமூகத்தில் அறியப்படாத குரல்களாக வாழும் எளிய மக்களின் வாழ்வியலை அவருக்கே உரிய நவீன எழுத்து படைப்புகளாக உருவாக்கினார்; பல நாவல்களை எழுதியுள்ளார். தொடர்ந்து எழுதி வருகிறார். இவரது நாவல்கள் ஆங்கிலம், மலையாளம் உள்ளிட்ட பிறமொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. 1980 முதல் எழுதிவரும் இவரின் ‘பலி’ என்ற சிறுகதை தொகுப்பு முதலில் வெளியானது. அதைத் தொடர்ந்து இவர் எழுதிய நிழலின் தனிமை, நட்ராஜ் மகராஜ், நொய்யல் ஆகிய நாவல்கள் வாழ்வுக்காகப் போராடும் விளிம்பு நிலை மக்களின் துயரங்களை, எதார்த்தங்களைப் பாத்திரங்களாகச் சித்தரித்து நவீன இலக்கிய படைப்பாகக் கொடுத்தார். 

நொய்யல் நாவலுக்கு தமிழக அரசால் அறிவிக்கப்பட்ட கலைஞர் பொற்கிழி விருது பெற்றுள்ளார். கிராமங்களில் சாதிய சடங்குகளில் சிக்கி வாழும் குடிநாவிதர்களின் அவலங்கள், அவர்களது வாழ்வியல் நடைமுறைகள், சமூக உறவுகள் குறித்து இவர் எழுதிய ‘நீர்வழிப்படூஉம்’ என்கிற நாவலுக்கு சாகித்ய அகாடமி விருது அறிவிக்கப்பட்டுள்ளது. சாகித்ய அகாடமி விருது பெற்றுள்ள எழுத்தாளர் தேவி பாரதிக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

தேவி பாரதியின் இயற்பெயர் ராஜசேகரன். 1980களில் தனது காத்திரமான படைப்புகளின் வழியே தமிழ் இலக்கிய உலகத்திற்கு அறிமுகமானவர். மறைந்த எழுத்தாளர்கள் கோமல் சுவாமிநாதன், கி. ராஜநாராயணன் போன்ற இலக்கிய ஆளுமைகள் இவரது படைப்புகளைப் பாராட்டியுள்ளார்கள். இடதுசாரி இலக்கியவாதிகள் மத்தியில் இவரது படைப்புகள் பாராட்டும் பல விமர்சனங்களும் பெற்றுள்ளது.

‘புழுதிக்குள் சில சித்திரங்கள்’ என்னும் அவரின் உரைநடைத் தொகுதி அரசியல் விரும்புவோர் அவசியம் வாசிக்க வேண்டிய நூல். ‘நிழலின் தனிமை’ புதினத்தில் தேவி பாரதி கையாளும் மொழியும், பாத்திரப் படைப்புகளும் வாழ்வில் உண்மையின் பக்கம் நம்மை நெருங்கச் செய்பவை. தேவி பாரதியின் ‘நீர்வழிப்படூஉம்’ புதினம் சாதிய அடுக்குகளில் அடியில் கிடந்து புரளும் விளிம்பு நிலை மனிதர்களின் வலியை, நில உடைமை ஆதிக்கப் பண்பாட்டினைப் பாதுகாக்கும் சாதிய சடங்குகளில் சிக்குண்டு இன்னமும் மீள முடியாமல், கிராமப் புறங்களில் வதைபடும் சிறுகுடி நாவிதர்களின் சமூக உறவினை அப்பழுக்கற்றுப் பேசும் இந்நூலுக்குத்தான்  சாகித்ய அகாதெமி விருது கிடைத்துள்ளது. நமது வாசகரான நண்பர் தேவி பாரதிக்கு நக்கீரன் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறது.

சார்ந்த செய்திகள்

Next Story

“இந்தியாவுக்கு தனியாகச் செல்ல வேண்டாம் எனத் தோழிகளிடம் கூறினேன்” - பிரபல எழுத்தாளரின் பரபரப்பு கருத்து

Published on 06/03/2024 | Edited on 06/03/2024
sensation by America writer says I have told my friends not to go to India alone

ஸ்பானிஷ் பெண் ஒருவர் தன்னுடைய கணவருடன் மோட்டார் சைக்கிளிலேயே உலகின் பல்வேறு நாடுகளில் சுற்றுலா மேற்கொண்டு வந்தார். கடந்த ஐந்து ஆண்டுகளாக சுமார் 66 நாடுகளுக்கு இந்த தம்பதி பயணம் செய்துள்ளனர். 

இதுவரை இத்தாலி, ஈரான் எனப் பல நாடுகளுக்குச் சென்ற இந்த தம்பதி ஆப்கானிஸ்தான் சென்றதைத் தொடர்ந்து அடுத்த பயணமாக இந்தியாவை தேர்ந்தெடுத்தனர். அந்த வகையில், கடந்த மார்ச் ஒன்றாம் தேதி இருவரும் தனித்தனி பைக்கில் ஜார்க்கண்ட் வழியாக பாகல்பூர் நோக்கிச் சென்று கொண்டிருந்தனர். அன்று இரவு தும்கா மாவட்டத்தில் உள்ள குர்மஹாட் என்ற ஒரு குக்கிராமத்தில் தற்காலிகமாக டெண்ட் அமைத்து இருவரும் தங்கினர். அப்போது அந்த பகுதிக்கு வந்த இளைஞர்கள் சிலர், இருவரையும் தாக்கியதோடு அப்பெண்ணை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்தனர்.

தங்களுக்கு நேர்ந்த கொடுமை குறித்து சமூக வலைத்தளங்களில் அந்த தம்பதி வீடியோ பதிவிட்டனர். அந்த பகுதியில் ரோந்து பணிக்கு வந்த காவல்துறையினர், காயமடைந்த அவர்களை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அப்பொழுது பெண் கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டது மருத்துவப் பரிசோதனையில் தெரியவந்தது.

இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கும் நிலையில், தங்களுக்கு நேர்ந்த முழு துயரத்தையும் அப்பெண் போலீசாரிடம் தெரிவித்தார். அவர் சொன்ன அடையாளங்களை வைத்து விசாரித்த நிலையில், குற்றவாளி ஒருவன் சிக்கினான். அவனிடம் நடத்தப்பட்ட விசாரணை அடிப்படையில் மூன்று பேரை போலீசார் கைது செய்துள்ளனர். இந்த சம்பவத்தில் ஈடுபட்ட மற்ற குற்றவாளிகளைப் போலீசார் தேடி வருகின்றனர்.

sensation by America writer says I have told my friends not to go to India alone

இந்த நிலையில், அமெரிக்காவைச் சேர்ந்த பிரபல எழுத்தாளரும், ஊடகவியலாளருமான டேவிட் ஜோசப் வோலோட்ஸ்கோ, இந்த சம்பவம் குறித்து தனது கருத்தைப் பதிவு செய்துள்ளார். இது குறித்து அவர் தனது எக்ஸ் (ட்விட்டர்) பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது, “பல ஆண்டுகளுக்கு முன்பு நான் இந்தியாவில் வாழ்ந்தபோது, நான் கண்ட பாலியல் தொல்லைகள் போல் வேறு எங்கும் கண்டதில்லை. சில நாட்கள் மட்டுமே அங்கு தங்கியிருந்தாலும், துன்புறுத்தப்படாமலோ அல்லது தாக்கப்படாமலோ அல்லது பாலியல் வன்கொடுமை செய்யப்படாமலோ கூட ஒரு பெண் பயணியை நான் சந்தித்ததில்லை.

நான் இந்தியாவை நேசிக்கிறேன். உலகில் எனக்கு மிகவும் பிடித்த இடங்களில் ஒன்றாக இந்தியா எப்போதும் இருக்கும். ஆனால் அங்கு தனியாக பயணம் செய்ய வேண்டாம் என்று பெண் தோழிகளுக்கு அறிவுரை கூறியிருக்கிறேன். இந்திய சமூகத்தில் இது ஒரு முக்கியப் பிரச்சனையாகவே இருக்கிறது. இதில் இந்தியா அதிக கவனம் செலுத்த வேண்டும்’ என்று பதிவிட்டுள்ளார். இவருடைய கருத்துக்கு பலரும் எதிர்வினையாற்றி வருகின்றனர்.  

Next Story

எழுத்தாளர் தேவிபாரதியை நேரில் சென்று வாழ்த்திய அமைச்சர்!

Published on 27/12/2023 | Edited on 27/12/2023
Writer Devibharathi greeted the minister in person

ஒவ்வொரு வருடமும் இலக்கிய ஆளுமைகளுக்கு சிறப்பு சேர்க்கும் வகையில் மத்திய அரசின் சார்பில் சாகித்திய அகாடமி விருது வழங்கி கௌரவிக்கப்படுகிறது. இந்த வருட விருது தமிழ் எழுத்தாளரான தேவிபாரதிக்கு அவர் எழுதிய ‘நீர்வழிபடூஉம்’ என்ற நாவலுக்காக சாகித்திய அகாடமி விருது அறிவிக்கப்பட்டுள்ளது. அடுத்த மாதம் டெல்லியில் அவருக்கு மத்திய அரசின் சார்பில் விருது வழங்கி சிறப்பு சேர்க்கப்படுகிறது.

எழுத்தாளர் தேவிபாரதி சாதாரண எளிய குடும்பத்தைச் சேர்ந்தவர். திருப்பூர் மாவட்டம் பழைய கோட்டை அருகே உள்ள நொய்யல் நதிக்கரையில் இருக்கும் புது வெங்கரையாம்பாளையம் என்ற குக்கிராமத்தில்தான் அவர் வசித்து வருகிறார். சாகித்திய அகாடமி விருது அறிவிக்கப்பட்டவுடன் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் முதல் பல்வேறு தலைவர்கள் தொலைப்பேசி மூலமும் பல எழுத்தாளர்கள், அவரின் நண்பர்கள் எனப் பலரும் நேரில் சென்று தேவிபாரதியை வாழ்த்தி வருகிறார்கள்.

அந்த வரிசையில் தமிழக செய்தி மற்றும் தமிழ் வளர்ச்சித் துறை அமைச்சரான மு.பெ. சாமிநாதன், எழுத்தாளர் தேவிபாரதியை அவர் வசித்து வரும் கிராமத்திற்குச் சென்று எழுத்தாளர் தேவிபாரதியை தமிழக அரசின் சார்பாகவும் முதல்வர் சார்பாகவும் வாழ்த்தி கௌரவித்தார். அப்போது அவருடன் திருப்பூர் மாவட்ட ஆட்சித் தலைவர் கிறிஸ்துராஜ் உடன் இருந்தார். சாகித்திய அகாடமி விருது பெறும் எழுத்தாளர் தேவிபாரதியை அமைச்சர் நேரில் சென்று வாழ்த்தியது அந்த கிராம மக்களையும், எழுத்தாளர்களையும், இலக்கிய ஆர்வலர்களையும் உற்சாகமடையச் செய்துள்ளது.